ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் காலம் ஒவ்வொன்றையும் எவ்வளவு சுலபமாகத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது! கற்பனைக்கும் கருத்துக்கும் அப்பால் எல்லாவற்றையும் கைப்பற்றிவிட்டோம் என்று நடித்து தம்பட்டமடித்து யாருக்கும் மரியாதை தராமல், மனிதனாக நடக்காமல், வெட்கம் மானம் இல்லாமல், வில்லாதி வீரனாக ஊர்வலம் வந்து கொண்டிருந்த மனிதன் எவ்வளவு சீக்கிரம் பயந்து விரைத்து நடுங்கிப் போனான்!
2019 கடைசியில் உலகத்தில் ஒருத்தன் பிறந்தான். ராவணனை விட பெரிய ராட்சத தலைகளை உடையவன். அவனைப் பற்றித்தான் சொல்கிறேன். ஒட்டுமொத்த உலகத்தையே ஆடிப்போக வைத்து விட்டானே அவன்! உலகமே அழியப் போகிறது என்று கூட தோன்றியது. பெரியவன் சின்னவன் என்று வேறுபாடு இல்லாமல், பண்டிதன் என்றோ பாமரன் என்றோ நோட்டமிடாமல், பன்னாட்டு நிறுவனங்களுடைய வளர்ச்சிக்காக என்ற நாடுகளின் வேறுபாடு இல்லாமல், இந்த உலகைச் சிறிது காலத்திற்கேனும் சமநிலைப்படுத்திய பெருமை அவனுக்கே உண்டு.
எங்கிருந்தோ தொலைதூரத்தில் பிறந்ததுதான் என்றாலும், நாடு, நகரம், அரசியல் பெருங்கடல்களை எல்லாம் தாண்டி, எல்லா இடங்களிலும் வியாபித்தான்! அப்போது மரணம் உன்மத்தம் பிடித்து ஆடியது! வளர்ச்சியடைந்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த மேலை நாடுகளிலும் கூட்ட மரணங்கள் பயங்கரமானவையாக இருந்தன!
பள்ளிக்கூடங்களில், வீடுகளில், பொது மயானங்களில் அடக்கம் செய்ய முடியாத விதத்தில் சடலங்கள் பெருகிய போது இறுதிச் சடங்குகள் எதுவும் இல்லாமல் பல இடங்களிலும் பணக்காரனும் பிச்சைக்காரனும் உள்ளிட்ட சாதி மத இன வேறுபாடுகள் இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒரே குழியில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
எங்கேப் பார்த்தாலும் மயான அமைதியாக இருந்தது. ஆள் அரவம் இல்லாத தெருக்களின் வழியாக, சைரனை முழக்கி மின்னல் வேகத்தில் ஓடும் ஆம்புலனஸ்களின் அவ்வப்போது கேட்கும் சத்தம் மட்டும் நிசப்தத்தை மீறிக்கொண்டு கூக்குரல் எழுப்பின. கொரோனா, கோவிட் என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவன் சுருங்கச் சொன்னால் மனிதனுடைய எல்லாக் காரியங்களுக்கும் பூட்டு போட்டான்!
வீட்டை விட்டு வெளியில் இறங்க முடியாமல் மனிதர்களுக்கு மூச்சு முட்டியது. “எந்த நிபந்தனையை வெளியிட்டாலும் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற தோரணையில் சொல்வதை கேட்கக்கூடாது என்ற முரட்டுப் பிடிவாதம் சில மனிதர்களுக்கு அதிகமாக இருந்தது. எங்களை எதுவும் தொற்றிக் கொள்ளாது என்பது அவர்களுடைய நம்பிக்கை. மதம் பிடித்து ஓடும் யானைக்கு பின்னால் கூச்சல் போட்டுக்கொண்டு ஓடும் மனிதக் கூட்டத்தின் அடாவடித்தனம் அவர்கள் இரத்தத்தில் கலந்திருந்தது. இவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் வீட்டுக்குள் இருந்தனர். தடையை மீறி, சில பேர் சாலையில் ஓடி போலீஸ்காரர்களுடன் மோதும் அளவுக்கு நிலைமை மோசமானது என்றாலும் பொது முடக்கமும் முகக்கவசமும் சுத்திக்கரிப்பான்களும் சமூக அகலமும் எல்லாம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் பலரும் உயிர் பிழைத்தார்கள். பல தரப்பட்ட வாக்சின்கள் வந்தன. கடைசியாக கோவிட் அடிபணிந்தது. ஆனால் அதற்குள் சமுதாயத்தில் பல மனிதர்கள் மறைந்து போயிருந்தார்கள். அதில் உற்றவரும் உடையவரும் உண்டு.
இதெல்லாம் எங்களுக்குத் தெரியுமே. அப்புறம் எதுக்காகச் சொல்கிறீர்கள் என்பதுதானே உங்களுடைய கேள்வி? பலரும் மறந்து போன விஷயங்களை ஒரு தடவை ஞாபகப்படுத்துகிறேன். அவ்வளவுதான்.
மனிதனுடைய நன்மை தீமைகளின் கணக்கெடுப்பு அப்போது கடந்து போனது. நோய் என்பது ஒரு குற்றம் இல்லை. அது யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம். அதை வைத்து நோயாளிகளை வேதனைப்படுத்தக் கூடாது. மாறாக, ஆறுதல் சொல்ல வேண்டும். மறந்து போன மனிதனுடைய நடத்தைப் பண்புகளை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தந்தது அந்தக் கொள்ளை நோய்!
அடுத்தவர்களுக்காக எரிந்து அடங்கி, எவராலும் அறியப்படாமலும், கவனிக்கப்படாமலும் கடந்து போன புண்ணிய ஜென்மங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.
லாக் டவுன் காலத்தில் ஆரம்பத்தில் கட்டுப்பாடுகளுக்குச் சலுகைகள் கொடுக்கப்பட்ட ஒரு நாள். கொதிக்கும் வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது முற்றத்தில் இருந்த மாமரத்தின் அடியில் நான் தளர்ந்து போய் நின்று கொண்டிருந்தேன். சாலையில் இருந்து யாரோ என்னை அழைத்தார்கள். முகக்கவசத்தை போட்டுக் கொண்டிருந்ததால் ஆள் யாரென்று எனக்குப் புரியவில்லை.
சந்தேகத்தோடு நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டு அவன் சொன்னான். “இது நாந்தாண்டா டேய். அனந்தன். இன்னும் என்னை உனக்கு அடையாளம் தெரியல இல்லயா?”
“ஆஹா. அனந்தன் கொச்சாட்டனா!நான் எதிர்பார்க்கவேயில்ல”
“ஓ. நான் வந்து எவ்வளவு நேரமா கூப்பிடறேன் தெரியுமா? ஒரே இடத்துல இருந்துகிட்டு ஒரே ஆள எவ்வளவு நேரம்தான் கூப்பிட்டுகிட்டு இருக்கறது?”
“அய்யோ! கொச்சாட்டா. தப்பா நினைக்காத. ரொம்ப அவசியமானதத் தவிர வேற எந்த வேலைக்கும் வீட்ட விட்டு வெளிய வரக்கூடாதுன்னுதானே அரசாங்கம் சொல்லியிருக்கு”
“அவங்க அப்படித்தான் பலதையும் சொல்லுவாங்க. உனக்குப் பயமாயிருக்கு இல்லயா?”
“பயப்படவேண்டியதுக்கு பயப்படாம இருக்கமுடியுமா? எனக்கு நோய் வந்துடும்ங்கறதுனால இல்ல. என் மூலமா மத்த யாருக்கும் கஷ்டம் வரக்கூடாதுங்கறதுனாலதான். நம்ம மூலமா இந்த நாசமாப் போன நோய், மத்த யாருக்கும் தொத்திடக் கூடாது. அதுக்கு அரசாங்கமும் சுகாதாரத்துறையும் கொடுக்கற ஆலோசனைங்கள அனுசரிச்சுத்தான் நடந்துக்கணும்” நான் சொன்னேன்.
அந்த லாக் டவுன அறிவிச்சப்ப எல்லாரும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு வீட்டுக்குள்ளயே இருந்திருந்தாங்கன்னா அப்பவே இந்த நோயும் ஒழிஞ்சு போயிருக்கும். ஆனா அப்படி நடக்கல. இப்ப லாக் டவுன்ல சலுகைங்க இருந்தாலும் நாம இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோட இருக்கணும். கொஞ்ச நாளைக்கு வெளியில இறங்காம கூட்டம் கூடாம பாத்துக்கணும்”
“வரும்னு இருக்கறது எங்க இருந்தாலும் வரும்”
“இப்ப இதோ டீக்கடைக்காரன் தாசோட மகன் தென்காசியிலோ மதிரையிலோ இருந்தான். அங்கேர்ந்து இங்க ஓடி வந்திருக்கான். இப்ப இதோ அவன் ஆஸ்பத்திரியிலும் வீட்டுக்காரங்க க்வாரண்டைனிலும். ஒரு பாத்திரத்துல தண்ணி எடுக்கணும்னா கூட தெருவுல இருக்கற பைப்புதான் கதி. அவங்க யாராச்சும் வெளியில வர்றதுக்கு ஊருக்காரங்க ஒத்துப்பாங்களா? அவன் குடும்பத்துக்குக் கடவுள் கொடுத்த சாபம்தான் இதுன்னு ஊர்க்காரங்கள் நினைக்கறாங்க”
“அப்ப நம்ம அக்கம்பக்கத்துலயும் இருக்கும்” நான் ஒரு அதிசயம் போல சொன்னேன்.
“இப்பவே அக்கம்பக்கத்துல எல்லா இடத்துலயும் இருக்கு. யாரும் வெளியில சொல்றது இல்ல. அப்புறம் எல்லாம் தனிமையில விழுந்துடணும் இல்லயா?”
“அடக்கடவுளே! இந்த மனுஷங்களோட காரியங்க ஒவ்வொன்னும்! நினைச்சுப் பாத்தா சிரிப்புதான் வருது. நடுநடுவுல இப்ப சம்பவிக்கறது எல்லாம் நல்லதுதான். சொந்தங்களையும் எதிரிங்களையும் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கலாம் இல்லயா?”
“ஆனாலும் மனுஷங்க இதுலேர்ந்து எல்லாம் பாடம் கத்துப்பாங்களா?” நான் கேட்டேன்.
“ஹும்… எங்க?” கொச்சாட்டன் ஒரு ப்ரத்யேக பாவத்தில் சொன்னான்.
“இப்ப இந்த நேரத்துல எங்க?”
“ஓ. சும்மா ரோடு வரை போனேன். அங்க எல்லாம் போயி எவ்வளவு நாளாயிடுச்சு?. உனக்கு தெரியும்தானே? எனக்கு முன்னாலயே வீட்டுல இருக்கற பழக்கம் கிடையாதுன்னு?”
“அத பத்தி நான் வேற ஸ்பெஷலா சொல்லணுமா?” சொன்னேன்.
அனந்தனுடைய பழக்க வழக்கங்களை பற்றி சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. ஒரு நாளில் அதிக நேரத்தை செலவழிப்பது ரோடில்தான். கேட்பவர்களுக்கு கடைத்தெருவில் ஏதோ பிசினெஸ் என்று தோன்றும். ஆனால் அப்படி ஒன்றும் இலை. ஜங்ஷன் பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல கிருஷ்ணன் அண்ணனோட ஒரு வெத்தலைப் பாக்கு கடை. பீடி சிகரெட் மிட்டாய் போல இன்னும் பல சாமான்கள் வியாபாரம். பொது இடத்தில் புகை பிடிப்பதற்கு எதிராக கட்டுப்பாடுகள் வந்ததுடன் கிருஷ்ணன் அண்ணனுடைய கடைக்கு முன்னால் வேறு ஒரு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது.
புகை பிடிப்பவர்களுக்கு என்று இருந்த அந்த மறைவான இடத்தில் மருந்து என்ற பெயரில் மது பானம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் விஷயம். அனந்தன் கொச்சாட்டனும் அவனுடைய நண்பர்களும் அந்த இடத்திற்குச் செல்லும் ரெகுலர் வாடிக்கையாளர்கள். மதுவையும் உண்டு இரண்டு தடவை புகையையும் ஊதி வழியில் போகும் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் சகலருடைய குற்றம் குறைகளையும் தொடர்புபடுத்தி ஆராய்ச்சி செய்வதுதான் அவர்களுடைய வேலை. கோவிடும் லாக் டவுனும் பயணக் கட்டுப்பாடுகளும் வந்த போது இந்த மனிதர்கள் முழுக்க முழுக்க தொழில் இல்லாதவர்களாக மாறிப்போனார்கள்”
“இது அப்படி ஒன்னும் ஆகறது இல்லடா. கொஞ்சம் பேர சாகடிச்சுட்டுதான் இந்த வியாதி இடத்த காலி செய்யும்”
“அதெப்படி?”
“கடவுளுக்கு பயந்தா பூமியில காரியங்க நடக்குது?
கள்ளமும் சதியும் வஞ்சனையும் கொலையும் கொள்ளையும் குண்டாயிசமும் பணமும் பக்கபலமும் இருக்கறவனுக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கற கெட்ட காலம் இது. யாரையும் லட்சியம் செய்யாத அகங்காரத்துக்கு கையையும் காலயும் வச்ச மாதிரி சில ஜென்மங்க. அதுங்க எல்லாம் கொஞ்சம் செத்து ஒழிஞ்சதுக்கு அப்புறமாச்சும் உலகம் நல்லா ஆகட்டும்”
“அப்படின்னா? செத்துப்போனவங்கள்ல யாரும் துரோகிங்க இல்லயே கொச்சாட்டா?” நான் சொன்னேன்.
”அதுவும் சரிதான். ஹாம். நல்லவங்களதான் கடவுள் முன்னாலயே கூப்பிட்டுப்பாரு” கொச்சாட்டன் சிரித்தான்.
“மத்தியானமாயிடுச்சே. காலையில ஏதாச்சும் சாப்பிட்டுட்டீங்களா? பசி வரலயா?”
“அதெல்லாம் கிடச்சுடுச்சு”
அரசாங்கத்தோட அரிசி கிடைக்கறதுனால இப்ப உண்மையில தரித்திரம் இல்ல” ஆஸ்பத்திரிக்குப் போயிட்டா சாப்பாட்டப் பத்தி கவலப்படவேணான்னு சொல்றாங்க. ஆனாலும் நோய் வந்தாப் பெரிய குழப்பம்தான். இதுக்கெல்லாம் எப்பதான் ஒரு முடிவு வரும்னே தெரியல”
“எல்லாம் முடிவுக்கு வரும். ஆனா அது மட்டும் வெளியில வரவேணாம். நாம கவனிச்சுக்க வேண்டியத நாமதான் கவனிச்சுக்கணும்” நான் சொன்னேன்.
எவருடைய உபதேசத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஆள். ஆனால், அன்றைக்கு என்னவோ அனந்தன் கொச்சாட்டன் என்னிடம் மறுத்து எதையும் பேசவில்லை.
“சரி. பாப்போம்” என்று சொல்லி அவன் நடந்தான். இவ்வளவையும் சொன்ன போது இந்த ஆள் யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு ஒரு ஆசை வந்திருக்கும் இல்லையா? உண்மையைச் சொன்னால் நாங்கள் இரண்டு பேரும் சொந்தக்காரங்களோ தூரத்து உறவோ இல்லை. ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட அண்ணன்களும் அம்மாக்களும் மாமாக்களும், அப்பாக்களும் எல்லாம் இருப்பாங்க. அதோடு சேர்ந்து அக்கா பெரியம்மா மாமியும். இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும் கூட மனிதர்கள் இப்படி உறவு சொல்லி அழைத்து சொந்தம் கொண்டாடும் போது அவர்களுக்கு இடையில் அன்பின் பாசத்தின் நேசத்தின் இழைகள் நெருக்கமாகப் பின்னப்படுகின்றன.
எல்லாரும் பரச்பரம் யாருடைய சொந்தக்காரரோப் போலத் தோன்றும். சமுதாயத்தில் சமாதானமும் சந்தோஷமும் உண்டாகும். அந்தக் காலமெல்லாம் இப்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அனந்தனுக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் கூட இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஊரில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
வாழ அவசியமானதெல்லாம் அனந்தனுக்கு இருந்தது. நட்புகள்தான் அவனுடைய பலவீனம்.
“அடேய்”. இப்படி சொல்லி அழைத்து யாரை வேண்டுமானாலும் கூட சேர்த்துக் கொள்ளும் சுபாவம். அதற்கு அப்புறம் எல்லாச் செலவும் அனந்தனுடையதுதான். இந்தத் தோழமை விருந்துகள் அதிகமான போது சொத்துகள் ஒவ்வொன்றாகக் கரைந்து போனது.
கல்யாணம் ஆகியிருந்தாலும் இது சரிப்படாது என்று தெரிந்த போது, அத அக்கா அவளுடைய வழிக்குப் போய்விட்டாள். சில நாட்களாக, அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. என்னுடைய உபதேசத்தை ஏற்றுக்கொண்டு மரியாதையாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறான் போலிருக்கிறது என்றுதான் நான் முதலில் நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாள் காலையில் வழக்கத்திற்கு மாறாக எங்களுடைய பஞ்சாயத்து மெம்பர் சதாசிவன் என்னைப் போனில் கூப்பிட்டுச் சொன்னார். “அனந்தன் கொச்சாட்டன் செத்துப்போயிட்டாரு. முந்தின நாள் ராத்திரிதான் சம்பவம். ஆஸ்பத்திரியில வச்சு. அங்க போய்ச் சேந்து ரெண்டு நாள்தான் ஆயிருக்கு. கோவிட் இல்லயா? யாருக்கும் பக்கத்துல போகக் கூட முடியாதே. பாதுகாப்பு உடையெல்லாம் போட்டுகிட்டு தன்னார்வத்தொண்டு செய்யறவங்க சவ அடக்கத்துக்கு தேவையானத செஞ்சுடுவாங்க. மயானத்துல அதுக்கான வசதிங்கள பஞ்சாயத்து செஞ்சிருக்கு”.
“கடசியா ஒரு தடவ நாம முகத்தக்கூட பாக்கமுடியாதே” என்னுடைய வார்த்தைகள் தழுதழுத்தன.
“ஆமா. என்ன செய்யறது?” சதாசிவன் சொன்னார்.
சிறிது நேர நிசப்தத்துக்கு பிறகு அவர் தொடர்ந்தார். “அந்த மனுஷன் சாதாரணமான ஆளு இல்ல. கொரோனா சமயத்துல நாம எல்லாரும் வீட்டுக்குள்ள அடஞ்சு கிடந்தப்ப நம்மளோட வார்டுல கோவிடால பாதிச்சவங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டுப் போய் சேக்கறதுக்கும் தனிமைப்படுத்தப்பட்டப்ப வீட்டுல இருந்தவங்களுக்கு குடிக்க தண்ணியயும் சாப்பிட சாப்பாட்டயும் கொண்டு போய்க் கொடுக்கவும் அந்த ஆளுதான் முன் வரிசையில நின்னு செஞ்சாரு. பல தடவ நான் வேணாம்னு வற்புறுத்தினேன். ஒத்துக்கணுமே? எல்லாரும் அவஞ்களோட சொந்த வேலைக்காக வீட்டுல் இருந்தா யாருமில்லாதவங்கள யாரு பாப்பாங்கன்னுங்கறதுதான் அவரோட கேள்வி. தாந்தான் உதவி செஞ்சேன்னு யாருகிட்டயும் சொல்லவேணாமுனு ஒவ்வொரு வீட்டுலயும் அவரு சொல்லியிருக்காரு. நோய் வந்ததக்கூட யாருகிட்டயும் சொல்லல. நேரா ஆஸ்பத்திரிக்குப் போயிட்டாரு. என்னோட போன் நம்பரத்தான் அங்கக் கொடுத்திருக்காரு. செத்ததுக்கு அப்புறம்தான் டாக்டர் என்னைக் கூப்பிட்டு விஷயத்தச் சொன்னாரு. மோசமான நிலைமையிலதான் அங்க போய் அட்மிட் ஆனதுன்னும் சிகிச்சை செய்ய முடியலைன்னும் டாக்டர் சொன்னாரு” சதாசிவன் போனை கட் செய்தார்.
நான் அசைவற்று நின்றேன்! இத்தனை நாளும் எனக்கு அந்த ஆளைப் பற்றி பெரிய மதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. யாரும் அவரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்லி நான் கேட்டதும் இல்லை. போதைக்கு அடிமைப்பட்டு ஊர்க்காரர்களுடைய ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கொண்டு போ பிடிச்சுக்கிடு சுத்தற பாழாய்ப்போன ஜென்மங்களில் ஒன்று. அவர்களிடம் இருந்து மனிதாபிமானத்தயும் அன்பையும் எதிர்பார்க்க முடியுமா?
உயர்ந்த கல்வியும் பெரிய வேலையும் சமூகத்தில் அந்தஸ்தான இடமும் எல்லாம் இருப்பதாக நடிப்பவரைக் காட்டிலும், அனந்தன் கொச்சாட்டனுடைய சமூக உணர்வு எவ்வளவு உயர்ந்தது! “அடேய்! என்னடா இவ்வளவு பெரிய யோசனை? வேற வேல ஒன்னும் இல்லயா?” நான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன்.
“யாராக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் ஒரு நாள் இந்த இடத்தை விட்டு போகவேண்டும். அப்புறம் எதற்காக இன்னொரு ஆளின் பிரிவில் இத்தனை வேதனை?” என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
“சரிதான். இந்த அழகான பூமியை விட்டுவிட்டு நானும் ஒரு நாள் போக வேண்டி வரும். அது தவிர்க்க முடியாதது என்று தெரிந்த போதும் “எனக்கு மரணமில்லை” என்று நம்புவதே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. உங்களுக்கு?