அம்மா சமையலறையின் ஒரு பகுதியில் சூடோடு சுட்டுக் கொடுக்கும் தோசையையும், மிளகு சேர்த்து அரைத்த சட்னியையும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மெலிந்த ஒரு ஆளைக் கண்டபோதுதான் முதல்முறையாக நான் உயிரோடு ஒரு நக்சலைட்டைப் பார்த்தேன்.
பள்ளிக்கூடத்தில் அசெம்ப்ளி இருந்த நாள் அன்று. அதனால் நான் ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்ப வேண்டியிருந்தது. அங்கேப் போன பிறகுதான் இன்றைய செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை மனப்பாடம் செய்யவும், தொடர்ந்து அதை உரத்த குரலில் அசெம்ப்ளியில் வாசிக்கமுடியும். அதனால் வாய்க்காலில் லேசான ஜில்லிப்புடன் இருந்த தண்ணீரில் ஒரு காக்காய் குளியல் போட்டு ஓடி வரவேண்டியிருந்தது. அம்மா தோசையைச் சுடும் விறகு அடுப்பின் ஒரு பக்கவாட்டில் பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைக்கும் ஒரு திண்ணை இருந்தது.
அந்த இடத்திற்கு அம்மாவுடைய பாஷையில் சமையல் திண்ணை என்று பெயர். அங்கே மூலையில் இருக்கும் அந்த இடத்தைப் பற்றிய என்னுடைய நினைவுகள் தொடக்கக்கால நாட்கள் முதல் இப்போது வரை பசுமை மாறாமல் இருக்கின்றன. அங்கு வேறு யாரும் ஏறி உட்கார்வது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத ஒன்று. அந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடும் சாப்பாட்டின் சுவை அலாதியானது. அது என்னுடைய அனுபவம்.
வேகவைத்த மரவல்லிக்கிழங்கைச் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு அதைக் கொஞ்சம் ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து, துருவிய தேங்காய்த்தூளையும், பேருக்கு லேசாகத் தேங்காய் எண்ணையையும் விட்டு உப்பையும் கொஞ்சம் போட்டுக் கலக்கிச் சாப்பிடும் போது, கிடைக்கும் சுவையை வெல்ல வேறு எந்தப் பண்டத்தாலும் முடியாது. அப்படிப்பட்ட ஒன்றை என்னோடப் பிற்கால வாழ்க்கையில் நான் ருசித்ததேயில்லை.
தோசையையும் பால் கலக்காத கறுப்பு காபியையும் வேகவேகமாக வயிற்றுக்குள் தள்ளி, தோப்பில் ஓடும் வாய்க்காலில் வாடிக்கையாகக் கேட்கும் வம்பு தும்புகளுக்குக் காது கொடுக்காமல் நான் ஸ்கூலுக்கு ஓடிப்போய்ச் சேரவேண்டும். அதற்குள் பிஇடி சார் கேட்டில் சிலை மாதிரி நிற்க ஆரம்பித்துவிடுவார்.
முனையை கூர்மையாக்கிய பென்சிலை கண்ணுக்குத் தெரியற மாதிரி இருக்கும் உடம்பின் ஒரு பாகத்தில் திருகி அங்கேயிருக்கும் சதையையும் கொஞ்சம் சேர்த்துப் பிடித்து இழுக்கும்போது சொர்க்கமும் நரகமும் ஒரே நேரத்தில் சுற்றியடித்து நம்மிடம் வருவது போலத் தோன்றும். இது அனுபவித்தவர்களின் வர்ணனை. கூர்த்த முனையுடைய அந்தப் பென்சில் ஒரு போதும் என்னுடைய உடம்பின் பின்பகுதியில் படாமல் இருக்க, படாத பாடுபட்ட மரண யோகம்தான் என்னுடைய ஸ்கூல் பயணங்கள்.
காலையுணவைச் சாப்பிட்டு முடித்த அந்த முன்பின் தெரியாத ஆள் சமையலறையில் பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் கைகளையும், வாயையும் நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளும்போது நான் வெறுப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். உடனே நான் அம்மாவுக்கு பக்கத்தில் ஓடிப்போய் எதிர்ப்பின் அடையாளமாக ஒற்றைக் காலில் நிற்பேன். அன்போடு கட்டிப் பிடிக்கவோ, பாசத்தோடு தலையை வருடிவிடவோ செய்யும் குணம் அம்மாவுக்குக் கிடையாது. ஸ்கூல் மூடியிருக்கும் சமயங்களில் மட்டும்தான் அந்தக் கைகளுடைய சூட்டையும் குளிர்ச்சியையும் விடியும்வரை நான் அனுபவித்திருக்கிறேன். அதிருப்தி பூக்கள் நிறைந்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அம்மா சொன்னாள்.
“டேய். அது சுகுமாரன். என்னோட விசாலத்தோட மகன். உன்னோட அண்ணனோட நண்பன். “என்னோட விசாலம்”னு அம்மா சொல்வது அம்மாவோடு சேர்ந்து சின்ன வயது காலத்திலும் இளமையிலும் கூட்டுக்காரியாக இருந்த தோழியின் ஆத்மார்த்தமான நட்பைக் காட்டுகிறது. எப்போதாவது அபூர்வமாகத்தான் நான் அவனை பார்த்திருக்கிறேன். கலர் ஜரிகை பட்டு பார்டர் போட்ட வேட்டி மாதிரி அந்த ஊக்க சக்தி மிகுந்த நட்பின் கதைகள் அம்மாவுடைய நெஞ்சில் எப்போதும் ஒரு தனி மரியாதையை பாதுகாத்து வைத்திருந்தது. அவருடைய மகனைப் பற்றி சுயமாக நானே ஏற்படுத்தி வைத்திருந்த ஊகத்திற்கு அம்மாவுடைய இது போன்ற உரையாடல்களேக் காரணமாக இருந்தது.
அதி மேதாவியாக இருந்த அவன் நன்றாகப் படித்தவனாக இருந்தான். என் அண்ணனுடைய சம வயதுக்காரன். ஆனால் எண்ணங்களும் வழிகளும் முழுக்க முழுக்க வேறாக இருந்தது. அண்ணன் பள்ளிக்கூடப் படிப்பிற்கு அப்புறம் பூனா திரைப்படக் கல்லூரிக்கு போய்ப் படித்தான். அது முடிந்த பிறகு, இப்போது சினிமாவில் தன் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் பாசம் மிகுந்தவனாக இருந்தான். பார்ப்பதே அபூர்வம். கௌரவத்தோடு பழகுகிற ஒருத்தன். விசாலம் மாமியுடைய மகன் சுகுமாரன் உயர் படிப்புக்காக கொல்கத்தாவுக்கு போனான். பிறகு அந்த ஆளைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் கதை கதையாக இருந்தன. அந்த அளவுக்கு நல்லதில்லாத ஏராளமான கதைகள்.
அவன் தீவிரவாதி மாணவர் குழுக்களோடு சேர்ந்து வனப்பகுதிகள் எங்கும் வசந்தத்தின் இடி முழக்கத்திற்காக துப்பாக்கி குண்டு வெடிக்கிறான் என்பதுதான் அவனைப் பற்றி வந்த செய்திகளின் சாரம். அம்மாவைப் பார்க்க வரும் விசாலம் மாமி கவலைகளின் மூட்டை முடிச்சுக்களை இறக்கி வைத்து அதில் இருந்து ஒவ்வொரு செய்தியாகத் தேர்ந்தெடுத்து அம்மாவுக்கு முன்னால் வரிசைப்படுத்தி வைப்பாள்.
அம்மா கொடுக்கும் ஆறுதல் வலி நிவாரணிகளை தடவிக்கொண்டு நிம்மதியோடு திரும்பிப் போவாள். அந்த அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்த நக்சல் சுகுமாரந்தான் முன்னால் நிற்கிறான் என்ற பேருண்மையை உணர்ந்து கொண்டபோது இதயத்தில் அசுரவேக பாட்டுகளுடைய மின்னல் வேகதாளங்கள் மிரண்டு கொண்டு ஓடி வந்தன.
நக்சல் சுகுமாரனை பற்றி எனக்கு இருந்த என்னுடைய ஒட்டுமொத்த எண்ணங்களையும் நிராகரிக்கும் விதமாக இருந்தது அவன் போட்டுக் கொண்டிருந்த ஆடைகள். பச்சிலை படங்கள் போட்ட நீளம் குறைந்த கால்சட்டைக்கும் துப்பாக்கிக் குண்டுகள் ஒளித்து வைத்திருக்கும் மேலாடைக்கும் பதில் தோய்த்து இஸ்திரி போட்ட அழகான வெள்ளை சட்டையையும் வேட்டியையும்தான் அவன் போட்டுக் கொண்டிருந்தான். தோளில் தூக்கிக்கொண்டிருக்கும் ஆயுதங்கள் நிரம்பிய தோல் பைக்கு பதில் காதி துணியால் தைக்கப்பட்ட ஒரு தோற்பையைதான் வைத்திருந்தான். காலில் போட்டுக்கொண்டிருந்த செருப்போ கழுவி சுத்தப்படுத்தியது. காட்டில் எப்போதும் பயணிக்கும் அடையாளங்கள் எதையும் வெளிப்படுத்தாமல் சுத்தமாக இருந்த செருப்பு.
தோசையைச் சாப்பிட்டு திருப்தி ஏற்படவில்லை. நான் கையில் கிடைத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பும் போது வாசலில் நக்சல் சுகுமாரனுடைய கைகளோடு பாசத்தோடு சேர்த்துப் பிடித்து விடை அம்மாவின் கைகள் சொல்லிக் கொண்டிருந்தன.
நான் அங்கு வருவதைப் பார்த்த அந்த ஆள் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ எந்ந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் என்னுடைய தலையை வருடிவிட்டு கேட்டான். “நீ எத்தனாங் க்ளாஸ் படிக்கற?”
பள்ளிக்கூடத்தில் கடைசி வருடம் என்ற பெருமிதத்தோடு நான் பதில் சொன்னேன். “நான் ஸ்கூல் ஃபைனல். பத்தாம் க்ளாஸ்”
“நல்லாப் படிக்கணும்” என்ற உபதேசத்தை எதிர்பார்த்திருந்த என்னிடம் நக்சல் சுகுமாரனுடைய கேள்வி வேறொன்றாக இருந்தது. “நீ வாசிப்பியா? புத்தகங்கள்ன்னா உனக்குப் பிடிக்குமா?” நான் நல்ல ஒரு வாசகன் என்பதை ஆப்ரகாம் லிங்கன் அடிமை வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த சுவாரசியம் மிகுந்த வரலாறை பாடப்புத்தகத்தை படிக்க வேண்டிய பத்தாம் க்ளாஸில் இங்கிலீஷ் பாடப்புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து அன்றைக்கு வாசித்து முடித்திருந்த புத்தகம் காலத்துக்கு முன்பே பறக்கும் பறவைகள் போல இருந்தது என்று சொன்னேன்.
நக்சல் சுகுமாரன் தோல் பைக்குள் கையை விட்டான். அதில் இருந்து மாவோ தத்துவங்கள் பற்றியோ இல்லை குறைந்தபட்சம் யு பீ ஜலாலுடைய கதைப் புத்தகங்களையோ எடுப்பான் என்று என்னுடைய ஊகத்தை அடியோடு புரட்டிப் போட்டு அவன் எனக்காக நீட்டிய புத்தகங்களுடைய மேலட்டைகளுடைய பெயர்கள் என்னைப் பார்த்து சிரித்தன.
இந்து சூடனுடைய கேரளப்பறவைகள் என்ற புத்தகம்தான் முதல் புத்தகம்.
இன்னொன்றோ பஷீருடைய உலகப் புகழ்பெற்ற மூக்கு.
மறுபடி ஒரு தடவை கூட பைக்குள் கைகள் நுழைந்தன. நீட்டமான துப்பாக்கிகளை ஒளித்து வைக்க அந்த பை போதுமானதில்லை. சின்னதாக ஒரு கைத்துப்பாக்கியையாவது எனக்குக் காட்டுவதற்காக வெளியில் எடுப்பான் என்ற ஆசையால் நின்று கொண்டிருந்தேன்.
என்னுடைய எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக எனக்கு நேராக அவனுடைய கையில் இருந்து நீண்டு வந்த கூம்பு வடிவத்தில் பேப்பரில் பொதிந்த வறுத்த நிலக்கடலைப் பொட்டலம் என்னை பார்த்து நக்கலடித்தது. அது ரொம்பவும் ஜில்லிட்டுப் போயிருந்தது. தோப்பின் வழியாக காற்றில் மிதந்து போகும் ஒற்றை இலை போல சுகுமாரன் நடந்து போவதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்றேன்.
அப்புறம் நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு ஒன்றிரண்டு தடவைகள் கூட அவன் வந்திருந்தான் என்றாலும் நான் கல்லூரியில் இருந்த சமயம் அது என்பதால் அவனை நேரில் பார்க்க என்னால் முடியவில்லை. கடைசியாக வந்துவிட்டு போகும்போது என்னிடம் கொடுக்க வேண்டும் என்று அவன் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் எம் சுகுமாரனுடைய புத்தகமாக இருந்தது.
நிராசையான ஒரு மனித நேசனுடைய வாழ்க்கைக் கதைதான் அதில் சொல்லப்பட்டிருந்தது. சுகுமாரன் அண்ணன் அப்புறம் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதும் போல வீட்டுக்குள் பறந்து வந்து கொண்டிருந்தன. ஒரு சமயம் பாம்பேயில் என்னுடைய அண்ணன் அவனைப் பார்த்ததாக அம்மா சொன்னாள்.
விசாலம் மாமி இதற்கு நடுவில் மகளோடு அயல்நாட்டுக்கு போய்விட்டதால் அம்மாவின் ஒலிபரப்பு நிலையத்தில் இருந்துள்ள செய்திகள் தற்காலிகமாக நிண்று போயிருந்தன. இருந்தாலும் அம்மாவின் ஞாபகங்களில் இருந்து விசாலம் மாமியும் நக்சல் சுகுமாரனும் அகன்று போகவேயில்லை. என்னைப் பொறுத்தவரை பெரிதாக அறிவைப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு இடமாக, எனக்குக் கல்லூரி இல்லை. நகரம் ஆடை ஆபரணங்கள் அணிந்து திரிந்துகொண்டிருந்த ஒரு பிரதேசமாக இருந்தது. அங்கே வெளிப்புறக்காட்சிகளில்தான் நான் அதிகமாக மூழ்கியிருந்தேன்.
வயநாட்டின் காடுகளில் இருந்து நக்சல் வர்கீஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது பற்றிய செய்திகளைப் பெரிதாகட் சொல்லி பென்ஷன் வாங்கும் ஒரு போலீஸ்காரன் செய்தித்தாள்களில் இடம் பிடித்த காலத்தில்தான் நான் மறுபடியும் சுகுமாரனை நினைத்துப் பார்த்தேன்.
அதற்குள் அவனை நான் மனதால் காம்ரேடு என்று கூப்பிட ஆரம்பித்திருந்தேன். காம்ரேடு என்றால் தோழர் என்று பொருள். இன்னொரு தடவை சுகுமாரனைப் பார்க்க நேரிடும்போது அவனிடம் கேட்க என்று என்னுடைய மனதில் பல கேள்விகள் இருந்தன. முக்கியமான ஒரு கேள்வி இதுதான்.
“நாடு இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் ஒரு சாதாரண மனிதனின் எல்லாவிதமான அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகள் அளவற்ற வகையில் வேறுபட்ட பிறகும் நீங்கள் மட்டும் ஏன் காடுகளில் வாழ்கிறீர்கள்? அங்கே நீங்கள் எந்த விதமான புரட்சியை யாருக்காக நடத்துகிறீர்கள்?”
ஆனால், இந்த கேள்விகள் எவற்றையும் கேட்க வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் காம்ரேடு சுகுமாரனை அப்புறம் ஒரு தடவை கூட நான் பார்க்கவேயில்லை. பதில் கிடைக்காத ஏராளமான கேள்விகளுடன் இப்போது அவை மனம் என்ற பெரிய பத்தாயத்தின் இருண்ட மூலையில் எவ்வளவுதான் சுரண்டி எடுக்க முயற்சி செய்தாலும் இளகாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தன.
சின்னம்மாவுடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய காகிதப்பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பெரிய விசாலமான புறம்போக்கு இடத்தில் காம்ரேடுடைய வீட்டில் வசித்து வரும் டீச்சரம்மாவுடைய மகன் கொடிய நக்சலைட்டாக இருந்தான்.
மாமாதான் ஒரு தடவை இதை என்னிடம் சொன்னார். ஒரு சமயம் கூட நான் அவனைப் பார்த்ததேயில்லை. முதலாவதாகவும் கடைசியாகவும் நான் பார்த்த ஒரே ஒரு காம்ரேடு சுகுமாரந்தான். செய்தித்தாள்களிலும் அலைவரிசைகளிலும் வரும் மோதல் கதைகளில் எல்லாம் காம்ரேடு சுகுமாரனுடைய பெயர் இருக்கிறதா என்றே நான் தேடிக்கொண்டிருந்தேன்.
தமிழர்கள் தெலுங்கர்களுடைய பெயர்கள்க்கு நடுவில் அப்படி ஒரு பெயரை எங்கேயும் நான் பார்க்கவில்லை. ஒரு நக்சலைட் ஆவது என்பது என்னுடைய பெரிய கனவுகளில் ஒன்றாகக் கூட இல்லாமல் இருந்த அந்த காலத்தில் சுகுமாரனை என்னால் மறக்க முடியவில்லை. காம்ரெடு சுகுமாரன் ஒரு போலீஸ் மோதலில் செத்துப்போயிட்டான் என்று வைத்துக்கொண்டாலும் கூட “ஓடாதே” என்று பெரிதாக சொல்லிக் கொண்டு பின்னால் இருந்து சுட்டுக் கொல்வார்கள் என்ற வழக்கமான முறையைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
“அப்படி என்றால் அது மோதலில் நடந்த சம்பவமே தவிர கொலையாகாது” அப்படி ஒரு மோதலில் உயிரை விடுவது சுகுமாரனாக இருக்கக்கூடாதே என்று ஆசைப்பட்டேன். அப்படிப்பட்ட ஒரு செய்தியை நான் சிறிதும் விரும்பவில்லை.
திருவிழாவின் வருகையை தெரிவித்தபடி மனித குலம் வீட்டுக்கு வருகை தரும் ஒரு நாளில் விசாலம் மாமி மறுபடி அம்மாவைப் பார்க்க வந்தாள். சுகுமாரனைப் பற்றிய செய்தியைக் கேட்பதற்காக மட்டும் நானும் அவர்களுடைய பேச்சை கேட்க ஆரம்பித்தேன். ஏமாற்றம் தரும் விவரம்தான் கிடைத்தது. வடக்கு கிழக்கு நாடுகளிலோ அல்லது தெலுங்கானாவிலோ தலைமறைவாக இருந்து வாழ்பவன் இல்லை காம்ரெட் சுகுமாரன்.
பாம்பேயில் சில அலைச்சல்களுக்கு நடுவில் சுகுமாரன் விமானத்தில் ஏறி போய்ச் சேர்ந்தது அரபி பணம் கொழிக்கும் நாட்டுக்குதான். உலகம் முழுவதும் படர்ந்து கிடக்கும் ஒரு ராட்சச கம்பெனியுடைய பொறுப்பு மிக்க நல்லதொரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து விசாலம் மாமியுடைய வார்த்தைகளில் சங்கடத்தின் பெருமழை பெய்தது. கட்டுமானம் நடந்துகொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் தற்காலிக லிஃப்ட்டில் இருந்து கீழே விழுந்து சுகுமாரன் மரணம் அடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இறுதிச்சடங்குகளை செய்வதற்காகவே விசாலம் மாமி ஊருக்கு வந்திருக்கிறாள். விசும்பலோடு மாமி அம்மாவுடைய தோளில் சாய்ந்தபோது நான் சட்டென்று என்னுடைய அறைக்கு திரும்பினேன்.
இருட்டும் தனிமையும் பெருமூச்சு விட்டபடி எனக்குள் ஊர்ந்து இறங்க ஆரம்பித்தன. என்னுடைய மனக்கண் முன் சில காட்சிகள் விரிந்தன. ஆகாயம் அளவுக்கு உயரம் உள்ள எண்ணித் தீர்க்கமுடியாத மாடிகள் இருக்கும் ஒரு கட்டிட கட்டுமானட்தில் இருந்து சாதாரண மனிதர்களைப் போல உடைகளை உடுத்திய சில காவல் துறையினர் தோய்த்து இஸ்திரி போட்டு வெந்நிற ஆடைகளை அணிந்து கொண்டு ஆஜானுபாகுவான ஒரு மனிதனை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.
முன்னோக்கி நடத்திக்கொண்டு போகிறார்கள். அந்த மனிதன் தன்னுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்ரோஷமாக வற்புறுத்துகிறார்கள். திடீரென்று அந்த ஆள் முன்னோக்கி பாய்ந்து அரை மதில் சுவரில் கையைத் தாங்கிப் பிடித்து சுவருக்கு வெளியில் பாய்கிறான். ஓடி வந்த காவல் துறையினர் கீழேப் பார்த்தபோது தேய்ந்து போன இரண்டு தோல் செருப்புகள் நிதானமாக கீழ்நோக்கி… கீழ்நோக்கி… கீழ்நோக்கி… விழுகின்றன.