அச்சுதன் நம்பூதிரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கண்கள் சிவந்தன. செய்தித்தாளை மேசை மேல் எறிந்துவிட்டு அவர் சொன்னார். “எல்லாரும் கொடூரமானவங்க”. தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு இடது கண்ணால் அவரைப் பார்த்தேன். அவருடைய கண்கள் கோபத்திலும் அழகாகத்தான் இருந்தன.
ஒரு ஆள் கோபமாக இருக்கும் போது, அவரிடம் எதையாவது கேட்க முடியுமா என்ன? வாடிய பூ மொட்டு மாதிரி அவருடைய முகம் பலவீனமாக இருந்தது. நாங்கள் இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டே அரை மணி நேரம் பேருந்துப் பயணத்துக்குப் பிறகு அங்கே வந்து இறங்கினோம். இறங்கிய போது அவருடைய முகம் ஒளிமயமாக இருந்தது.
இரண்டே இரண்டு வேலைகளுக்காக மட்டுமே அங்கே வந்தோம். கைவசம் இருந்த நான்கு ஜாக்கெட் துணிகளையும் அளவு ஜாக்கெட்டையும் தையல்காரனிடம் கொடுக்கவேண்டும். பேருந்தை விட்டு இறங்கி வரும் வழியிலேயே அந்த வேலையை முடித்து விட்டோம். துணியையும் அளவு ஜாக்கெட்டையும் தையல்காரனுடைய மேசையில் வைத்துவிட்டு நம்பூத்ரி சொன்னார்.
“அருமையா தைக்கணும்”
“ஓ. செஞ்சுட்டா போகுது”
கடையில் இருந்து வெளியில் வந்த போது வேறொரு வேலையும் இருந்தது. இந்த வரவுக்கு அதுவும் ஒரு காரணம். கோபாலன் நாயரைப் பார்த்து நாலு வார்த்தை பேச வேண்டும். அவரைப் பார்ப்பதற்குக் கடைத்தெருவில் இருக்கும் தேநீர்க் கடையில் காத்திருப்பதுதான் அல்லது. வேலை செய்யும் இடத்தில் இருந்து நாயர் திரும்பி வரும் போது அந்தக் கடையில் நுழையாமல் இருக்க மாட்டார்.
தேநீர் கடையில் காத்துக் கொண்டிருந்தோம். ஆளுக்கொரு தேநீரும் குடித்தோம். மேசையில் அன்றைய நாளிதழை எடுத்துப் பார்த்த போதுதான், “மனுஷங்க எல்லாரும் மோசமானவங்க” என்று நம்பூதிரி சொன்னார்.
“என்ன ஆச்சு?”
சிறிதுநேரம் கழித்து நான் பேச ஆரம்பித்தேன்.
“எனக்கா?” நம்பூதிரி கேட்டார்.
“ஆமாமாம்”
“எனக்கொன்னும் இல்ல. உலகத்துல நடக்கறததான் சொன்னேன். மிருகத்த விட மோசமானவங்க மனுசங்க. கஷ்டம்” சொல்லிவிட்டு அவர் என்னைப் பார்த்தார்.
அவருடைய கண்களில் இருந்து கோபத்தின் தீப்பொறிகள் உதிர்ந்து விழுந்தன.
அப்போதுதான் ஒரு பெரிய பீடிக்கட்டு வந்து சேர்ந்தது.
“கோபாலன் நாயர் கொடுத்தனுப்பினாரு”
பீடிக்கட்டைக் கொண்டு வந்த சிறுவன் சொன்னான்.
“கோபாலன் நாயரு எப்ப இத எல்லாம் கொண்டு வர்றாரு?” நான் கேட்டேன்.
“பின்னாலயே வர்றாரு”
இதைக் கேட்ட நம்பூதிரிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தது போல அவர் தலையை நிமிர்த்தி உட்கார்ந்தார். நரைத்துப் போன கறுப்புத்துணி குடையை கையில் மடக்கி பிடித்துக் கொண்டு கோபாலன் நாயர்
வந்து சேர்ந்தார். கதர் வேட்டியை மடக்கி கட்டிக் கொண்டிருந்தார். தலைமுடி பறந்து கலைந்திருந்தது.
ஒன்றரை வாரத்துக்கும் மேல் சவரம் செய்யாத தாடி உரோமங்கள் மறைத்துக் கொண்டிருந்த முகத்தை யாரோ உமிக்கரியில் வைத்து தேய்த்தது போல நாயருடைய முகம் இருந்தது.
“குருவும் சீடரும் வந்தாச்சா?” என்ற கேள்வியுடன் கடைத்திண்ணையில் ஏறினார்.
குடையை மூலையில் சாய்த்து வைத்த அவர் கடைக்காரனிடம் ஒரு தேநீர் கொண்டு வரச் சொன்னார்.
அவர் தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது நம்பூதிரியின் நீல நிறக் கண்கள் கோபாலன் நாயருடைய முகத்தை ஆராய்ந்தன.
நம்பூதிரி கேட்டார். “எதுக்காகத் தாடி வளக்கறீங்க?”
“வளக்கறது இல்ல. வளருது”
“அரிக்கலயா?”
“லேசா. இந்தத் தாடி என்னோட ஆத்மாவுலயும் இருக்கு”
“எனக்கு இப்படி இருந்தா சகிச்சுக்க முடியாது”
நம்பூதிரி தன் நிலையை விவரித்தார்.
புன்னகையை உதிர்த்தபடி கோபாலன் நாயர் சொன்னார். “தாடி வளந்ததக் காட்டிலும் அத சவரம் செய்யறதுக்கு அதிகமா கஷ்டப்பட்டவன் நான்”
“காசு செலவாகும் இல்லையா?” நான் நடுவில் புகுந்து சொன்னேன்.
“அது இல்ல. சதயே பிஞ்சிடுமோங்கறதுதான் என்னோட பயம். அந்த கதயக் கேட்டா இந்த ஜென்மத்துல தாடிய சவரமே செய்யறது இல்லங்கற என்னோட முடிவ நீங்க ஒத்துப்பீங்க”
கடைசி சொட்டுத் தேநீரையும் குடித்துவிட்டு அவர் க்ளாஸை கீழே வைத்தபோது நம்பூதிரி கேட்டார். “என்னடா அந்தக் கத?”
“ சொல்றேன்”
அவர் பீடிக்கட்டை எடுத்துப் பெஞ்சில் கொண்டு வந்து வைத்தார். ஒரு பீடியைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார்.
பிறகு சொன்னார். “நான் முன்னால ஆலப்புழையில வேல பாத்தேன்னு உங்களுக்கு தெரியும் இல்லயா? அந்தக் காலத்துலதான் தாடியச் சவரம் செஞ்சா அப்பறம் வளராமப் போயிடுமோன்னு பயந்துகிட்டு இருந்தேன். அப்ப நான் இளமையோட ஆரம்பத்துல இருந்தேன். அப்ப வாழ்க்கை ரொம்ப சுகமானதா இருந்துச்சு. நான் மாசத்துல ஒரு தடவ மட்டும் சவரம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். குட்டங்கறவந்தான் என்னோட தாடிய வழக்கமாச் சவரம் செஞ்சவன். வேணுங்கற அளவுக்கு தாடி உரோமங்க இல்லாததுனால மனசோட அடியில ஒரு துக்கம் தளம் கட்டிக்கிடந்தது. அப்ப அவன் சமாதானப்படுத்தினான். ஏழெட்டு வருஷமானா தாடி நல்லா வளந்துடும். கடசியா வளர்ற தாடி வேகமா வளரும்”
அவனோட வார்த்தைகள நம்பினேன். வாக்கு பலிச்சது. அடிக்கடி வெட்டினாதான் நல்லா வளரும்ங்கறத புரிஞ்சுகிட்ட நான் இருபத்து மூனு நாளைக்கு ஒரு தடவ ஷேவ் செய்ய ஆரம்பிச்சேன். இப்படி தாடி சம்பந்தமான உற்சாகம் அவனுக்கும் எனக்கும் அதிகமாகி வந்த போது திடீர்னு குட்டன் காணாமப் போயிட்டான். வரவேண்டிய நாளைக்கு அப்புறம் ஒரு வாரம் கழிஞ்சப்பறமும் வரல. நான் விசாரிக்க ஆரம்பிச்சேன். ஆனா துரதிஷ்டவசமா
அவனுக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சு”
கோபாலன் நாயர் இதையெல்லாம் சொல்லிவிட்டு ஒரு சிட்டிகை மூக்குப்பொடியை எடுத்துப் போட்டார்.
அப்போது நம்பூதிரிக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
”அவனுக்கு குழந்தைங்க?”
“ரெண்டு பொண்டாட்டிங்க மூலம் ஏழு குழந்தைங்க”
“வாழறதுக்கு வழி இருந்துச்சா?”
“ஒரு ஒத்த சவரக்கத்தி மட்டும்தான் குடும்ப சொத்து”
இதைச் சொன்னபோது நம்பூத்ரிக்கு கோபம் வந்தது. கண்கள் உடனே சிவந்து போயின.
கோபாலன் நாயர் அதைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது.
கதை தொடர்ந்தது.
“சவரம் செய்யறப்பதான் அவன் குடும்பக் கதய சொல்லுவான். கமலாவுக்கு சிரங்கு. ராஜனுக்கு உடம்பு சரியில்ல. மோகனுக்கு ஜுரம். இதுக்கெல்லாம் என்ன காரணம்னும் அவன் எங்கிட்ட விவரமாச் சொல்லுவான். அவனோட கடசிக்
குழந்தையோட பேர என்னால எப்பவும் மறக்கமுடியாது. தென்றல் நிலா”
“அவளுக்கு என்ன வயசு?” நான் கேட்டேன்.
“அவன் பைத்தியமானப்ப அந்த குழந்தை தொட்டில்ல இருந்தா”
நம்பூதிரிக்கு கோபம் அதிகமானது.
அவர் கேட்டார். “குழந்தைங்களோட நிலம?”
“உங்களத் தவிர இதப்பத்தி இதுவரைக்கும் யாரும் எங்கிட்ட கேட்டது இல்ல. எல்லாருக்கும் அவனவனப் பத்திதானே கவல?” கோபாலன் நாயர் தாடியை லேசாக சொரிந்து கொண்டார்.
”நாம எல்லாரும் மனுஷங்க. இதுங்கல்லாம் எந்த வகையச் சேந்த ஜந்துங்க? தெரியலயே” சொல்லிவிட்டு நம்பூதிரி யோசனையில் ஆழ்ந்தார்.
கோபாலன் நாயர் தொடர்ந்தார். “அப்பறம் கொஞ்ச நாள்லயே குட்டன் வீட்ட விட்டு வெளியில வர ஆரம்பிச்சான். காயல்ல வர்ற படகுகள ஒழுங்குபடுத்தறதுதானவனோட வேல. கரைக்கு வர படகுகள எங்க கட்டி வைக்கணும். எங்க கட்டக்கூடாதுங்கறத எல்லாம் தீர்மானிக்க ஆரம்பிச்சான். ஒரு பெரிய கழியோட படகுத்துறையில அவன் அவசர அவசரமா அங்கயும் இங்கயுமா கூவிக்கிட்டு நடந்தான். “படக அங்க நிறுத்தாதே. கொஞ்சதூரம் வடக்குப் பக்கமா தள்ளி நிறுத்தணும்”
அவன் சொன்ன இடத்துல படக நிறுத்தலைன்னா படகுக்காரனோட தலையில அடி விழ ஆரம்பிச்சுது. அவன அங்க வரவிடாம செய்யணும்னு படகுத்துறையில இருந்த எல்லாரும் முடிவு செஞ்சாங்க.
இதெல்லாம் நடந்தப்ப நான் வேற ஒரு சவரக்காரங்கிட்ட போக ஆரம்பிச்சேன்.
கொஞ்சநாள்ல நான் குட்டன மறந்து போனேன்”
“நாம ஆளுஞ்கள எவ்வளவு வேகமா மறந்துடறோம்?” நம்பூதிரி ஒரு புரட்சி கவிதை வாசிப்பது போல சொன்னார்.
“அந்த நேரத்துல நான் ஒரு பொண்ண காதலிக்க ஆரம்பிச்செங்கறதுனால குட்டனை மறந்து போனேன். நீங்க கேக்கறீங்களா?”
“கேக்கறேன் கேக்கறேன். அப்பறம்?”
சில நாளைக்குள்ள அவன் தெளிஞ்சு வெளியில நடமாட ஆரம்பிச்சான்”
“பைத்தியம் சரியாப் போயிடுச்சா?”
நம்பூதிரி ஆறுதல் அடைந்தவர் போலக் கேட்டார். “ஆமாம். ஆனா அப்பதான் அவனோட கஷ்ட காலம் ஆரம்பிச்சுது. பைத்தியமாயிருந்தப்ப குடும்பத்தோட கஷ்டங்கள பத்தி அவனுக்கு எதுவும் தெரியாம இருந்துச்சு. ஆனா இப்ப அவன் எல்லாத்தயும் நேருக்கு நேராப் பாக்க ஆரம்பிச்சான். கமலா படுத்த படுக்கையாயிட்டா. ராஜன் பசியால அழறான். மோகனுக்கு தீராத நோய். ஒருத்தர் முகத்த இன்னொருத்தர் பாத்து எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவனுக்கு சரியாயிடுச்சுன்னு தெரிஞ்சப்ப அவனோட ரெண்டாவது பொண்டாட்டி திருவல்லாக்காரி அவன பாடாபடுத்த ஆரம்பிச்சுட்டா.
ஒரு சாயங்காலம். நான் வேல பாக்கற இடத்துலேர்ந்து வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தேன். உலகத்தயும் என்னையும் பத்தி ஏதேதோ நினைச்சுகிட்டு வீட்டுக்குள்ள நுழஞ்சேன். கூடத்துல உக்காந்தேன். ஒவ்வொன்னப் பத்தியும் யோசிச்சுகிட்டு
இருந்தேன். அப்ப குட்டன் படி தாண்டி வீட்டுக்குள்ள வந்துகிட்டிருக்கான்! எனக்கு ஒரே அதிர்ச்சி.
அவன் கூடத்துல இருந்த ஒரு தூண்ல சாஞ்சுகிட்டு நின்னான். உடம்போட பாதிய மறச்சுகிட்டிருந்தான்.
“என்ன?” நான் அவங்கிட்ட கேட்டேன்.
“முதலாளிய ஒரு தடவ பாத்துட்டு போலாம்னு வந்தேன்”
அவன் சுய நினைவோடத்தான் பேசறாங்கறது புரிஞ்சுது. லேசா ஒரு ஆறுதல் ஏற்பட்டுச்சு.
“நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். என்னோட நிலமை தெரியுமா? பத்து வயிறு சாப்பிடணும். ஒரு வேளயாச்சும் ஏதாச்சும் வயித்துக்குள்ள போகணும்”
“ம்”
“குழந்தைங்க எல்லாருக்கும் வியாதி. யாரும் என்னை எதுலயும் சேத்துக்கறது இல்ல”
“ம். அதென்ன அப்படி?”
“ஆளுங்க என்னைப் பாக்கறப்ப பயப்படறாங்க. எல்லாருக்கும் நான் பைத்தியம்னு பயம். எனக்கு சரியாப் போச்சுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டேங்கறாங்க. இன்னிக்கு மட்டும் நான் பதினஞ்சு வீட்டுப் படிய ஏறி இறங்கிட்டேன். எல்லாரும் என்னைப் பாத்தவுடனே வாசக்கதவ இழுத்து மூடிகிட்டாங்க. முன்னால நாந்தான் அவங்க எல்லாத்துக்கும் சவரம் செஞ்சேன். ரெண்டு பேரு கண்ண உருட்டி பாத்துட்டு வேகமா இடத்தக் காலி பண்ணுன்னு சொல்லிட்டாங்க. பிச்சையெடுத்து எனக்குப் பழக்கமில்ல. வேல செஞ்சுதான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். இனிம என்ன செய்யறதுன்னு தெரியல. எனக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சுடுமோன்னு பயமா இருக்கு” என்றபடி அவன் கதறியழுதான்.
கருங்கல்லு மாதிரி இருக்கற ஒரு மனுஷன் அழுதா என்ன சொல்லறது? எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துல அப்ப நான் இருந்தேன்”
“பொல்லாத உலகம்!” நம்பூதிரியுடைய கண்களில் கண்ணீர் துளும்பி நின்றது.
அவர் பெருமூச்சு விட்டார்.
கோபாலன் நாயர் தொடர்ந்தார்.
“நான் என்னோட கஜானாவப் பத்தி யோசிச்சேன். என்னோட கையுல அப்ப ரெண்டு ரூபா பதினோரு அனா இருந்துச்சு. நிலைமை மோசமில்ல. ஒரு ரூபாய அவங்கிட்ட கொடுக்க முடிவு செஞ்சேன். ஆனா அவன் வாங்க மறுத்துட்டான்”
“வேல செய்யாம நான் காசு வாங்கமாட்டேன். சவரம் செய்ய நீங்க சம்மதிக்கணும். அவன் கெஞ்சினான்.
“உரோமம் இல்லாம தாடி வெறுமனே முளைக்காதுங்கற விஷயத்த நான் அப்ப நினைச்சுப் பாத்தேன். நான் லேசாப் பதுங்கினேன். ஆனா அவனோட வீட்டுல குழந்தைங்க அழற அழுகைச் சத்தம் என்னோட காதுல பெரிசா
முழங்கிச்சு. எப்படி சகிச்சுக்கறது? சவரத்தொழில விட்டா அவனுக்கு வாழ்க்கையே இல்ல. அவன் வாழறதா சாகறதாங்கற நிலைமையில இருந்தான். எனக்குச் சவரம் செய்ய அவனுக்கு அனுமதி கொடுத்தா உலகம் அவனுக்கு பைத்தியம் இல்லைன்னு ஒத்துக்கும். அப்புறம் எல்லாரும் அவனைக் கூப்பிடுவாங்க. அத வச்சு அவன் மறுபடி வாழ ஆரம்பிப்பான்”
அவன் கேட்டான். “நாளைக்கு நான் தயாரா வரட்டுமா?”
என்னையும் அறியாம நான் சொன்னேன். “ம். வா”
அவனோட முகம் சூரியனைப் பாத்த தாமரை மாதிரி மலந்துது. நன்றி சொல்லிவிட்டு அவன் போனான்.
எனக்குச் சவரம் செய்ய அவனுக்கு சம்மதம் சொன்னதப் பத்தி நான் மறுபடியும் யோசிக்க ஆரம்பிச்சேன். எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா? அப்படிச் சொன்னா அவனுக்கு அது எவ்வளவு பெரிய விரக்தியா இருக்கும்? நான்
ஒத்துகிட்டப்ப அவனோட முகம் எவ்வளவு பிரகாசமா மாறிச்சு! அந்த வெளிச்சத்துல அவனோட எதிர்காலமே ஒளிமயமாச்சு. என்னை நானேச் சமாதானப்படுத்திக் கொண்டாலும் எனக்கு அன்னிக்கு தூக்கம் வரவேயில்ல. ஏதேதோ
புலம்பிகிட்டேத் தூங்கிப் போனேன். அடுத்த நாள் எழுந்தப்ப அவன் வீட்டு வாசல்ல நின்னுகிட்டு இருந்தான். சவரத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுங்களயும் செஞ்சு முடிச்சுத் தயாரா வந்திருந்தான்.
அப்ப என்னைய நானே ஒரு மாவீரனா கற்பனை செஞ்சுகிட்டேன். அந்தப் பதினஞ்சு நிமிஷ நேரம் என்னோட வாழ்க்கையிலயே கனமானதா இருந்துச்சு. தாடி முழுக்கவும் வழிச்சு எடுத்ததுக்கு அப்புறம் என்னைப் பாக்க எனக்கேச் சகிக்கல.
“உலகமே... வீரனான என்னைப் பாருங்கற பாவத்துல நான் நடண்டேன். முகத்தக் கழுவிட்டு நாலனாவ அவங்கிட்ட கொடுத்தேன்.
”நேத்திக்கே காசு கொடுத்துட்டீங்க” அவன் நினைவுபடுத்தினான்.
என்னோட தைரியத்த நானேப் பாராட்டிகிட்டு நடந்தேன். நாலாம் நாள். அவன் மறுபடி வந்தான். மறுபடியும் சவரம். இப்படி நாலு நாளைக்கு ஒரு தடவை சவரம். மெல்ல மெல்ல நான் அவங்கிட்ட சவரம் செஞ்சுக்கற சேதி ஊர் முழுக்க பரவ ஆரம்பிச்சது. இதுக்கெல்லாம் கோவிந்தந்தான் காரணம்”
“கோவிந்தன் ஆலப்புழைலதான் இருந்தானா?” நம்பூதிரி கேட்டார்.
“இல்ல. ஒரு நாள் சாயங்காலம் சிரிச்சுக்கிட்டே அவன் என்னோட வீட்டுக்கு வந்தான்”
“எதுக்காக வந்தான்?” நம்பூதிரி கேட்டார்.
“அது அவனுக்கு தெரியல. அதனால நான் அதப் பத்தி அவங்கிட்ட ஒன்னும் கேக்கல. என்னோட சவரத்த பத்திப் பேச அவன் வரலைன்னு தோனிச்சு. என்னோட வீட்டுலயே தங்கி ஊர சுத்திப் பாத்தான். நாலு நாளு கழிச்சு அவன் சொன்னான்.
“உங்களுக்குதான் பைத்தியம் கோபாலன்”
“நான் அவன் சொன்னதை எதிர்த்து எதுவும் பேசல. காரணம் என்னன்னு விசாரிச்சேன்.
அப்ப அவன் சொன்னான். “உங்களத் தவிர வேற யாராச்சும் ஒரு பைத்தியக்காரன் கிட்ட முகத்த காட்டுவாங்களா? அவன் முழுப்பைத்தியம்! தெரியும் இல்லயா?”
“அது மாறிப்போயிடும். சரியாயிடும்” நான் சொல்லிப் பார்த்தேன்.
“உங்களுக்கும் பைத்தியம் பிடிக்கும்”
நான் அதுக்கு பதில் சொல்லல. பத்து நாளு கழிஞ்சப்ப என்னோட குணமே மாறிப்போச்சுன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாங்க. உபதேசம் செஞ்சாங்க. இதுக்கெல்லாம் காரணம் கோவிந்தந்தான்னு எனக்குத் தெரியும். எனக்கு உபதேசம் செய்ய வந்த பெரிய தலைங்க எல்லாம் ஏதோ பெரிய ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்த வந்தவங்க மாதிரி பேசினாங்க. ஆனா என்ன வந்தாலும் முன்னால வச்ச கால பின்னால வைக்க நான் தயாராயில்ல. சவரம் முறையா நடந்துச்சு.
“என்னால உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டமா?” ஒரு நாள் குட்டன் கேட்டான்.
“ஒன்னும் இல்ல”
“அஞ்சாறு நாளைக்காச்சும் உங்க தயவுல இப்ப வீட்டுல எல்லாரும் கஞ்சி குடிக்கறாங்க”
நான் எதுவும் சொல்லல.
அவன் வேலைய முடிச்சுட்டு போனான். அன்னிக்கு நான் அவனுக்கு ஆறணா கொடுத்தேன். சாயங்காலம் என்னோட முதலாளி என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.
“கோபாலா. உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?”
“அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. மௌனமா இருந்தேன். நீ எதுக்காகடா பைத்தியக்காரன் குட்டன கூப்பிட்டு வச்சு சவரம் செஞ்சுக்கற?”
“அவனுக்கு இப்ப பைத்தியம் இல்ல” நான் சொன்னேன்.
“அதெப்படி உனக்குத் தெரியும்?”
“பைத்தியம் சரியாட்யிடுச்சுன்னு சொல்லிதான் ஆஸ்பத்திரியிலேந்து அவன வெளிய விட்டாங்க” நான் வாதாடினேன்.
அதுக்கு வந்த பதில் விசித்திரமாக இருந்துச்சு. “டாக்டருங்க தாடிய அவன் சவரம் செய்யறானா? இல்லயே?
நான் எதுவும் பேசாம இருந்தேன்.
இது என்னடா பெரிய தொல்லயா போச்சேன்னு எனக்குத் தோனிச்சு. நான் எதுக்காக இந்த ஏச்சயும் பேச்சயும் வாங்கி கட்டிக்கணும்? இதயெல்லாம் சகிச்சுகிட்டு நான் பெரிசா என்ன சாதிக்கப் போறேன்? நல்லது செஞ்ச நாந்தான் குத்தவாளி. குட்டன் வந்தான்னா வந்த வழியே போகச்சொல்லிடணும் நான் முடிவு செஞ்சேன். ஆனா அவனைப் பாக்கறப்ப எதுவுமே சொல்லத் தோனல. கொஞ்ச நாளைக்கு எல்லாம் சவரம் நடந்துச்சு. நிலைமை மாறிகிட்டே இருந்துச்சு.
கடைசியா முதலாளி சொன்னாரு. “சொன்னாக் கேக்கமாட்ட”
“நான் சவரம் செஞ்சாலும் இல்லாட்டாலும் என்னோட வேலையில நான் ஒழுங்காதான் இருந்தேன். இவங்க எல்லாத்துக்கும் இதுவா விஷயம்? இவங்களுக்கு இதப் பத்தி என்ன இவ்வளவு பெரிய அக்கறை?”
நான் தோத்துப் போயிகிட்டு இருந்தேன்.
இதுக்கெல்லாம் ஒரு நல்ல முடிவு காணத் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சேன்.
கடைசியா ஒரு வழியக் கண்டுபிடிச்சேன்”
“என்னது?” நம்பூதிரி கேட்டார்.
“நான் பழனிக்கு நோன்பு இருக்க முடிவு செஞ்சேன்”
”அய்யோ! பெரிய கஷ்டம்!” நம்பூதிரி சொன்னார்.
“அந்த குழந்தைஞ்களோட விஷயம் என்னவாச்சு?. நாலு நாள் ஆனப்பறம் குடிக்க கஞ்சி கூட அவங்களுக்கு கிடச்சுருக்காது”
“அதுக்காக என்னோட தாடிய பனயம் வைக்க முடியுமா? நான் குடியிருந்த இடத்தக் காலி செஞ்சேன். பட்டணத்துல இன்னொரு பகுதிக்கு வீட்ட மாத்தினேன். இத்தன வீர சாகசத்தயும் செஞ்ச நான் கடசியில தோத்துப்போயிட்டேனான்னு எனக்கேச் சந்தேகமா இருந்துச்சு.”
“ஜாக்கெட்!” தையல்காரன் வந்தான்.
நம்பூதிரி உடனே எழுந்தார்.
வில்லை வளைத்து நிமிர்த்தி பார்ப்பதைப் போல எல்லாவற்றையும் பார்த்தார்.
அவருடைய முகத்தில் திருப்தி படர்ந்தது.
மறுபடியும் ஒரு தேநீரைக் குடித்துவிட்டு நாங்கள் பஸ் ஏறினோம். பீடிக்கட்டோடு கோபாலன் நாயர் போவதைப் பார்த்தோம்.
அப்போது நம்பூதிரி கேட்டார். “மனுஷனா நடந்துக்கற சில பேரும் உலகத்துல கஷ்டப்படறாங்க. இல்லயா?”
அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. அப்போது அவருடைய கண்ணில் கண்ணீர் இல்லை.