”அது என்னோட பென்சன் காசு. வயசானவங்களுக்கு தர்ற பென்ஷன் காசு. அதுல மிச்சம் பிடிச்சது”. சிறிய வயதுக்காரனாக இருந்த போலீஸ்காரனிடம் கண்ணீரோடு வயசான அந்த அம்மா சொன்னாள். அருகில் வந்த மற்றொருவன்
போலீஸ் பாணியில் கேட்டான். “ஏய் கிழவி. பொய் சொல்லாத. எத்தன ரூபா வச்சிருந்த?”
வயதான அவளிடம் இருந்து பெரியதொரு சத்தத்தோடு வந்த அழுகையே அதற்குப் பதில் கூறியது. நடந்தது முழுவதையும் ஒரு இம்மி இடுக்கு விடாமல் ஒரே மூச்சில் அவள் சொல்லி முடித்தாள். அவனுக்குப் போவதற்கு உள்ள வாகனம் வந்த பிறகும் கதையை முழுக்கக் கேட்பதற்காக அடுத்த வண்டியில் போகலாம் என்று தீர்மானித்து அவன் அங்கேயே இருந்தான்.
”மகனே. வீட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வச்சு பொண்ணக் கட்டிக் கொடுத்தேன். கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டிய எடுத்துட்டுவந்தேன். நிறய நாளாயிடுச்சு. என்னோட மகளும் கட்டிக் கொடுத்த அவ புருஷன் நாயரும்
செத்துப் போயிட்டாங்க. ரெண்டு பசங்களும் இப்ப என்னோட வீட்டுலதான். வட்டி கட்ட முடியாமப் போனதுனால அபராதம் போட்டு நோட்டீஸ் வந்துடுச்சு. ஜப்தி நோட்டீஸும் வந்துடுச்சு. மருந்து கூட வாங்காம மிச்சம் பிடிச்சு
பேங்க்ல அடைக்கறதுக்காக எடுத்துட்டுப் போன காசு. பதினஞ்சாயிரம் ரூபா!”
மறுபடியும் அழுகை. “வீடு எங்க இருக்கு?” விசாரித்த அவன் அவளையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் கிளம்பினான். அவனுடைய ஒரு நண்பனின் வீடு அங்கேதான் இருந்தது.
“அந்த பக்கம்தான் இந்த ஆயாவோட வீடு இருக்கும்” நினைத்துக் கொண்டான்.
அவனுக்குப் போக வேண்டிய பேருந்து வந்தது. பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போதும் ஆயாவோட அழுகை முகம்தான் அவனுடைய மனதில் நிறைந்தது.
“என்ன செய்வது? அங்க இருக்கும் யாரும் ஆயாவுக்கு உதவ முன் வரல” புதிதாக வெளிவந்திருந்த அவனுடைய புத்தகத்தில் இருந்து காசு ஏதாவது கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளப் போய்விட்டு அவன் திரும்பிய
வழிதான் அது. பணம் இல்லை. இல்லாவிட்டால் ஆயாவுடைய கையில் ஏதாவது கொடுத்து விட்டு வந்திருக்கலாம். நாட்கள் கடந்து போயின. ஒரு நாள் எதிர்பாராத விதமாகத்தான் நண்பனை அவன் வாசகர் சாலையில் சந்தித்தான்.
வாசிப்பு அறையில் இருந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டபோதுதான் ஆயா தகவலை அவன் நண்பனிடம் சொன்னான்.
அவனுடைய வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது ஆயாவுடைய வீடு. ஆயாவைப் பற்றி நண்பனுக்கு நன்றாகத் தெரியும். ஆயாவின் வாழ்க்கை ஒரு பணக்கார ஜமீன்தார் வாழ்க்கையின் பாக்கி பத்திரம். ஆயா சொன்னது அத்தனையும் பச்சை உண்மை. கணவனை இழந்த விதவை. யாரிடமும் கடன் வாங்காமல் எப்படியோ நான்கு பெண்களைக் கட்டிக் கொடுத்தாள். நாலாவது பெண்ணைக் கட்டிக் கொடுத்த போதுதான் வீட்டை அடகுக்கு
வைத்தாள். யாருக்கும் ஐந்து பைசா கூட கடனாகக் கொடுக்கக்கூடிய வசதி அவளுக்கு இல்லை. கஞ்சியானாலும் குளித்து குடி. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற பழமொழியை வாழ்க்கை முழுவதிலும் பின்பற்றிய பெண்மணி
அவள். இந்தத் தகவல்கள் சுற்றுவட்டாரத்தில் அதிகம் யாருக்கும் தெரியாது.
கடனை அடைக்கவேண்டும் என்று நோட்டீஸ் வந்த போது ஓடிப்போய் ஒரு வருடத்துக்குள் அடைப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தாள். இந்த நிகழ்வு போலீஸ்கார இளைஞனுடைய மனதில் நிறைந்து கிடந்தது. எப்போதோ அது
எழுத்து வடிவத்தில் வெளியில் வந்தது. ஒரு நாள் காகிதத்தில் எழுத்துகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து எழுதி முடித்தான். அது முழுவதும் ஒரு உண்மை சம்பவத்தைக் கூறும் நாவலாக மாறியது.
மனதிற்குள் நீண்ட மௌனம் உண்டாகும்போது நிம்மதி ஏற்படும். எழுத்துக் குவியல்கள் கிறுக்கிய கதையாக மாறியது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பனைப் பார்க்கும் போது ஆயாவைப் பற்றிக் கேட்டான்.
விருது வாங்க வேண்டும் என்பதற்காக இல்லை. கிறுக்கி எழுதி முழுமையாக்கிய நாவலை வெளியிடுவதற்காக அவன் அனுப்பினான். நாட்கள் கடந்து போயின. அந்த நிகழ்வு நடந்து இப்போது ஏறக்குறைய ஒரு வருடம்
ஆகிவிட்டது. நண்பனைத் தேடி அவனுடைய வீட்டுக்குப் போனான். ஆயாவுடைய வீட்டுக்குப் போனான்.
ஆயாவின் வீட்டைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலிக்கு அருகில் சென்ற போது, ஆயா முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு முறத்தில் எதையோப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.
“ஆயா”
“யாரோ ஒரு ஆள். யாரு?. என்ன?. முன்னபின்ன பழக்கம் இல்லயே?”
“வசுமதி அம்மா”
ஆயாவுக்கு நான் வைத்த பெயர். அது என்னையும் அறியாமல் வெளியில் வந்தது.
“எனக்கு உங்கள நல்லாத் தெரியும்” அவன் சொன்னான்
“என்னோட பேரு பார்வதி அம்மா. என்னோட வீட்டுக்காரரு சாகற மட்டும் என்னை “பாரு அம்மா”ன்னுதான் கூப்பிடுவாரு. மகன் யாரைத் தேடி வந்தீங்க? என்னைத் தெரியுமா?”
“தெரியும்”
“அன்னிக்கு பேங்குக்குப் போகற வழியில நீங்களும் இருந்தீங்களா?”
“ஆமாம்”
“கஷ்டகாலம். வேறென்ன சொல்றது?
கடனை அடைக்கப் போனப்ப வட்டிக்காச திருடிகிட்டு போயிட்டான். பாவம் அவன். போகட்டும். போன ஜென்மத்துல நான் அவங்கிட்ட கடன் பட்டிருப்பேன். அதான் எடுத்துகிட்டுப் போயிட்டான். என்னை நானேச் சமாதானப்படுத்திக் கொண்டேன். அன்னிக்கு இருந்த கஷ்டத்துல அழுகையே வந்துடுச்சு. போலீஸ்காரரும் வண்டியிலல் கூட்டிக்கிட்டு வந்து வீட்டுல இறக்கிவிட்டாரு”
“அப்ப கடனை அடைக்க வேணாமா?” அவன் கேட்டான்.
“வேணும். கொஞ்சம் கொஞ்சமா சேத்துகிட்டு வரேன். நீங்க எதுக்காக வந்தீங்கன்னு இன்னும் சொல்லலயே?”
“சொல்றேன். அன்னிக்கு அந்த திருடன் திருடிகிட்டு போன காச போலீஸ்காரங்களுக்கு பயந்துகிட்டு தெருவோரமா வீசியெறிஞ்சப்ப எனக்கு அது கிடச்சது. நான் அத பேங்க்குல போட்டு வச்சேன். அதுக்கு இப்ப வட்டியும் சேந்து வந்திருக்கு. உங்களோட வீட்டக் கண்டுபிடிக்கக் கஷ்டமாப் போயிடுச்சு. இன்னிக்குதான் அது முடிஞ்சது”
பார்வதி அம்மாவால் நம்ப முடியவில்லை. “மகனே. நீ சொல்றத என்னால நம்பவே முடியல”
“நம்பணும். நம்பினாத்தான் நல்லது. கைய நீட்டி காச வாங்கிக்கங்க”. காசைக் கொடுத்துவிட்டு திரும்பி நடக்கும் போது பார்வதி அம்மா சொன்னது அசரீரீ போல அவன் காதுகளில் கேட்டது.
“பாவம். இவரு போன ஜென்மத்துல ஏதாச்சும் கடன் பட்டிருக்கணும்”
ஆயாவுடைய வாழ்க்கைக் கதையை காகிதத்தில் வடித்து பென்சன் காசு என்று பெயர் கொடுத்த போது அதற்கு இந்த அளவு மதிப்பு கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் எழுதிய அந்த நாவலுக்கு போட்டியில் பரிசு கிடைத்த விவரம் அவனுக்கும் அவனுடைய நன்பனுக்கும் மட்டும்தான் தெரியும்.
அவனுடைய உள் மனதில் இருந்து ஒரு கேள்வி. “ஒரு விதத்துல நானும் திருடன்தானே? ஆமாம். நான் மட்டும் இல்ல. எல்லா கதை எழுதறவங்களும் திருடங்கதான். மத்தவங்க இல்லாட்டா சொந்த வாழ்க்கையதான் கதையா
எழுதறாங்க. சுத்தி நடக்கற சம்பவங்கள எல்லாத்தயும் சுவாரசியமான விதத்துல கண்ணும் காதும் கையும் காலும் வச்சுசேத்து எழுத்துகளாக்கி சொந்தமாக்கறாங்க. ஆக மொத்தத்துல கதை எழுதற எல்லாரும் பெரிய திருடங்க!”