ஆனந்த பவனம். கடந்த காலத்தின் நிறமும் வாசனையும் உள்ள ஒரு வீடாக இருந்தது. மர்மங்களின் வீடு என்றும் அதைச் சொல்லலாம். முற்றத்தில் படந்து பந்தல் போட்ட மாமரம். அது அந்த மர்ம வீட்டின் திகில் நிறைந்த சூழ்நிலையை இன்னும் புதிரானதாக மாற்றியது. ஆனந்த பவனத்தைப் பற்றி நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வருவது வட்ட வடிவத் தொப்பியைப் போட்டுக் கொண்டு பழைய ஒரு ராலி சைக்கிளை மின்னல் வேகத்தில் ஓட்டிக் கொண்டு போகும் வலியச்சனின் உருவம்தான்.
நான் முதல் முறையாக பார்த்த அந்த நாள் “சார்” என்றுதான் அவரைக் கூப்பிட்டேன். ஆனால், அதை கேட்டவுடன் அவர் சொன்னார். “இந்த மாதிரி சாரே மோரேன்னு கூப்பிடறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. வேணும்னா இங்க இருக்கற சின்னப் பசங்க கூப்பிடற மாதிரி வலியச்சன்னு கூப்பிடலாம்”. கண்ணாடிக்கு இரண்டு பக்கமும் தொங்கிக் கொண்டிருக்கும் கறுப்பு கயிறு. மணிக்கட்டில் கறுப்பும் சிவப்புமாக சரடுகள். அணு சரணையில்லாமல் காற்றில் ஆடும் சுருட்டை முடிகள்.
சில சமயங்களில் யாருடனும் இல்லாமல் தனக்குத்தானே பேசியபடிதான் அவருடைய சைக்கிள் பயணம் நடக்கும். நீட்டி முழக்கி விசிலடித்து தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக்கொண்டு, சில சமயம் சர்க்கஸ்காரன் மாதிரி ஹேண்டில் பாரில் இருந்து இரண்டு கைகளையும் உயர்த்தி தாளம் போட்டபடி உற்சாகத்தோடு போகும் அவருடைய அந்த பயணத்தை பார்க்கவே அழகாக இருக்கும்!
அது ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்த ஒரு அதிகாரியின் வீடு. வீட்டு உரிமையாளனுக்கும் அவனுடைய சகோதரிக்கும் இடையில் உண்டான சொத்து தகராறில் ஏற்பட்ட சண்டையால் உருவான பிடிவாதத்தில் அந்த வீடு பிரம்மச்சாரியான எனக்கு வாடகைக்குக் கிடைத்தது. எப்படி இருந்தாலும் ஆனந்த பவனம் என்னுடைய வாழ்க்கையில் மிக புதிரான அனுபவங்களைத்தான் எனக்குக் கொடுத்தது. அத்தியாவசிய வீட்டுச் சாமான்களோடு ஆட்டோவில் நான் வீட்டு முற்றத்துக்குப் போய்ச் சேர்ந்த போது, வலியச்சன் சந்தேகத்தோடுதான் என்னைப் பார்த்தார். அடுத்த நாள் காலையிலேயே அவர் எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் என்னுடைய இடத்திற்கு நுழைந்தார்.
முன் அறிமுகமோ முகவுரையோ எதுவும் இல்லாமலேயேக் கரகரத்த குரலில் சொன்னார். “நண்பரே. உங்களுக்கு இந்த வீடு எப்படி கிடைச்சதுன்னு எனக்குத் தெரியும். அதப் பத்தி ஒன்னுமில்ல. ஆனா, இந்த வீட்டுல ஒரு பொண்ணு இருக்கா. அவ என்னோட அண்ணண் பொண்ணு. நீங்க அவளப் பாக்கவோ அவ கிட்ட பேசவோ முயற்சி செஞ்சா...”
இது எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டு தீராத ஒரு நோயாளியைப் போல மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டு சிறிது நேரம் அவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு சினிமாவில் ரௌடிகள் செய்வது போல எனக்கு நேராகச் சுண்டு விரலை உயர்த்திப் பிடித்து ஆட்டிப் பின்வாங்கிச் சென்றார்.
முதல் நாள் நான் முதல் தடவையாக பார்த்த உல்லாசவாதியான வலியச்சனுடைய முகம் இல்லை அது. நிரபராதியான எனக்கு நேராக அவர் நடத்திய இந்த ஆக்கிரமிப்பில் நான் கொஞ்சம் பயந்து போனேன். அது உண்மை. ஆனால், வெகுநேரம் கழித்து நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் மனதில் ஒரு முறை ஓடவிட்டுப் பார்த்த போது, அவர் ஒரு சைக்கோவா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.
போகிற போக்கில் அவர் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் நான் நினைத்ததை உறுதி செய்வதாக இருந்தது. எதுவும் அழிந்து போவதில்லை. காலடிச்சுவடுகள் பதியாமல் எதுவும் அழிந்து போவதில்லை. நம்முடைய கால் தடங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. கடந்த காலத்தையும் வரும் காலத்தையும் பாதிக்கும் அர்த்தம். ஆனால், எட்டாவது வகுப்பையும் முடித்து மனப்பாடம் செய்து நேர்முக போர்டை இறுகப் பற்றிப் பிடித்து ஒரு க்ளாஸ் 4 ஊழியனாக ஆன எனக்கு இங்கே நடக்கும் சம்பவங்களின் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை. நான் பார்க்கக்கூடிய ரீதியில் இடது பக்க அறையில்தான் அவர் படுத்துக் கொண்டிருந்தார். சில நாட்களில் அங்கிருந்து மணியோசையும் மந்திரங்களும் அதிகச் சத்தத்துடன் கேட்க ஆரம்பித்தன.
சில சாயங்காலப் பொழுதுகளில் வராந்தாவில் அரை மதிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டு அவர் சமஸ்கிருத சுலோகங்களை உரத்தக் குரலில் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது முற்றத்தில் செம்பருத்திக்கு அருகில் இருக்கும் முல்லைப்பூவின் வாசனையோடு காற்று தவழ்ந்து வரும். ஆரம்பத்தில் இந்தக் காரியங்களின் பொருள் ஒன்றும் எனக்குப் புரியவில்லை என்றாலும், இதெல்லாம் பேய் பிசாசுடன் சம்பந்தப்பட்டவை என்று ஒரு நண்பன் சொன்னான்.
அவர் உருப்போட்டு சொல்வது அசரிரீ காற்று குளிர்ச்சி என்றெல்லாம்தான் நண்பன் என்னிடம் சொன்னான். “டேய். அந்த ஆளு உனக்கு எதிரா ஏதாச்சும் செய்வினை மந்திர தந்திரம் செய்யறானாங்கறத நீ ஜாக்கிரதயாப் பாத்துக்கணும்” அவர் ஒரு பூதக் கண்ணாடியுடன் என்னுடைய அறைக்கு ஒரு நாள் வந்தார். “உங்க கைரேகய நான் கொஞ்சம் பரிசோதிக்கட்டுமா?” சொல்லிவிட்டுத் திண்ணையில் இருந்தார்.
சாத்தானையும் பேய் பிசாசையும் கவரக்கூடிய ஆற்றல் வாய்ந்த இந்த மனுஷன் என்னை ஏதாவது செய்து விடுவானோ என்று நான் பயந்தேன். ஆனால், அதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை என்பது பிறகு புரிந்தது. நரம்பு மாதிரி ஒல்லியாக இருக்கும் இந்த மனுஷனுடைய ஆக்ரமிப்பை தடுக்கக்கூடிய பலம் எனக்கு இருந்தது.
பின்பக்கம் கட்டிக் கொண்டிருந்த என் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து உள்ளங்கையில் பூதக்கண்ணாடியை வைத்து அவர் சொன்னார். “ராத்திரி கனவுங்க தீர்ந்து போறப்ப பகல் கனவுங்கள்ல மனசு மூழ்கியிருக்கும். இதான் நீ”. மெதுவாக வருடிய கைகள் மேல்நோக்கி ஊர்ந்து போனது. என்னுடைய முழங்கையை அவர் தடவிக்கொண்டே இருந்தார்.
“இந்த ஆளு என்ன ஒரு பேயா?” எனக்கு சந்தேகம் ஏற்படாமல் இல்லை. அருவருப்போடு சட்டென்று நான் கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டேன். அதற்காக, கொஞ்சம் பலத்தைப் பிரயோகிக்க வேண்டி வந்தது. அப்போது என் கண்களைச் சுழட்டிச் சுழட்டிப் பார்த்துக் கொண்டு அவர் சொன்னார், “இங்க பாரு. நீ இப்ப இருக்கற இந்த வாடகை வீடு ஆத்மாக்களோட பவனம். ஒரு குடும்பத்துல ஏழு பேர் தற்கொல செஞ்சுகிட்ட வீட்டுலதான் நீ இப்ப தலை சாச்சு தூங்கற” என்னை வீட்டை விட்டு விரட்டுவதற்கான தந்திரம்தான் இது என்று முதலில் எனக்கு தோன்றியது. உள் மனதில் பீதி ஏற்பட்டது. அதை முகத்தில் காட்டாமல் நான் சொன்னேன். “வலியச்சா. எனக்கு பேய் பிசாசுங்களப் பாத்துக் கொஞ்சம் கூடப் பயம் இல்ல. அவங்களோட நான் பேசக்கூட பேசுவேன்”
இதைக் கேட்டு அவர் கொஞ்ச நேரம் நிசப்தமானார். பிறகு ஒவ்வொரு காலடியையும் அளந்து அளந்து எடுத்து வைத்து வெளியில் போனார். வாசலுக்கு அருகில் போன போது ஒரு நிமிடம் தயங்கி நின்றார். அப்புறம் பல நாட்கள் அவரை இந்தப் பக்கம் பார்க்கவே முடியவில்லை. உற்சாகப் பூர்வமான சைக்கிள் பயணங்களும் இல்லை.
சரி இந்த அளவுக்காவது தொல்லை விட்டதே என்று ஆசுவாசத்தோடு இருக்கும் போது ஒரு வாரம் கழிந்து வந்த ஒரு சாயங்காலப் பொழுதில் பகல் கனவுகளில் மூழ்கி சாய்வு நாற்காலியில் தூக்கக் கலக்கத்தில் இருந்த என்னுடைய வாசல் கதவைப் பலமாகத் தட்டி அவர் உள்ளே நுழைந்தார்.
“இப்ப எதுக்கு இந்த மனுஷன் வந்திருக்கான்? என்ன மந்திர தந்திரம் செய்யப் போறான்?” மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு அவர் பேச ஆரம்பித்தார்.
“பேய் பிசாசுங்களோட பேசுவேன்னுதானே நீங்க சொன்னீங்க? அப்படின்னா செத்துப் போனவங்கள்ல சின்ன வயசுக்காரியான லட்சுமியோட பேச முடியுமா?”
“லட்சுமி யாரு?”. ஒரு அங்கலாய்ப்போடு நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
ஒரு நிமிடம் உணர்ச்சிள் எதுவும் இல்லாமல் என்னுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த அவர் ஒரு சிரிப்போடு சொன்னார். “பாபுலா நெருடாவோட கவிதங்க வழியாதான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒரு சமயம் நான் அவளுக்கு எழுதினேன். “உனக்கு ஆழமான விழி இருக்கு. அங்க ராத்திரிங்க பளபளக்குது”
அதுக்கு அவ பதிலா தந்ததும் நெருடாவோட கவிதைதான்.
“உன்னை காதலிக்கும் போது என்னோட ஆத்மா மாதிரி மினுமினுக்கற முதல் நட்சத்திரங்கள ராப்பறவை கொத்திகிட்டு போகுது”. அவ பறந்து போன அந்தக் கடைசி ராத்திரியில அது தெரியாம நான் அவளுக்கு எழுதினேன். “விழி நீரில் இருந்து நான் உனக்கு ஆனந்தம் துளும்பும் பூக்கள கொண்டு வருவேன். நீல சங்குபுஷ்பங்கள். இருண்ட காயல் பூக்கள். முத்தங்களோட நாட்டு மூங்கில் கூட்டங்கள்”
ஆனா அந்தக் கடிதத்தப் பாக்கறதுக்கு முன்னாலயே அவ என்னை விட்டுட்டுப் போயிட்டா” பிறகு யாருடனும் என்று இல்லாமல் முணுமுணுக்கும் குரலில் சொன்னார். “அன்பு மட்டும்தான் நிரந்தரம். உடலுக்குள் நுழைய முடியாத ஏதோ ஒரு தனித்துவமான நூலிழை மூலம்தான் காதல் நதி ஓடுகிறது” அப்புறம் அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னார்.
“உண்மையில நான் இங்க வர்றது உங்களுக்கு தொந்தரவா இருக்கும்னு தெரியும். ஆனா இங்க இருக்கறப்ப, அவ இங்க இருக்கறத என்னால உணர முடியுது. சந்தோஷங்கறது நீங்க விரும்பற ஒரு ஆள் உங்க கூட இருக்கறதுலதானே இருக்குது?” பட்டென்று அவர் குனிந்து என்னுடைய கைகளில் முத்தம் கொடுத்தார்.
அப்போது எங்களை திடுக்கிட வைத்தபடி அறை முழுவதும் பெரிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. அவருடைய கண்களில் ஆனந்த மழை பெய்தது. அவர் சொன்னார். “பாரு. உனக்கு நான் முத்தம் கொடுத்தப்ப அவ எவ்வளவு சந்தோஷப் படறாங்கறதுக்கான சாட்சிதான் அந்தப் பெரிய சிரிப்பு சத்தம். சிரிப்பின் அலைகள் நின்று போகும் முன்பே, அவர் மெல்ல வெளியில் சென்றார். அப்புறம் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு லட்சியமும் இல்லாத பயணத்தைத் தொடங்கினார்.