“ஐயாயிரம் ரூபாயும் இருபது பவுனும்” பார்வதிக்கு பிடித்திருந்தது. அவள் ஹெட் கான்ஸ்டபிள் கிட்டப்பாவுடைய மகள். கிட்டப்பா ஊரில் ஒரு பிரபலப் புள்ளி.
“நல்ல ஒரு இடம் வந்திருக்கு” ராமசாமியுடைய அப்பா இறந்ததை பார்வதி நினைத்துப் பார்த்தாள்.
“கிராமத்துல அவளுடைய புருஷன் குப்பன் ஒரு பிரபலமான ஒரு ஆள். அவனுக்குக் குப்பை வண்டியில் குப்பைகளை அள்ளி எடுத்துக் கொண்டு போகும் வேலை. சாலை விபத்தில் அவன் உயிரிழந்தான்.
டிரைவரும் க்ளீனரும் நான்கு வேலையாட்களும் ஒரு டன்னுக்கு கூடுதலான குப்பைக் கூளங்களுமாக லாரி கவிழ்ந்தது. டிரைவருடைய கால் முறிந்தது.
க்ளீனருடைய மண்டை உடைந்தது. அழுகிக் கொண்டிருந்த குப்பைகளுக்கு அடியில் குப்பன் செத்துக் கிடந்தான்.
அவனுடைய குடும்பத்தில் மனைவி பார்வதியும் மகள் லஷ்மியும் மகன் ராமசாமியும் மிஞ்சினர். பத்து வயதுடைய மகள் எட்டு வயதுள்ள ராம்சாமி. இவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டியது பார்வதியுடைய பொறுப்பு. சொத்து சுகம்
என்று எதுவும் இல்லை. உதவி செய்ய என்றும் யாருமில்லை. பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய கதி வந்துவிடுமோ என்று அவள் பயந்தாள். மனதைச் சமாதானப்படுத்தி பல வீடுகளிலும் வேலை செய்யக் கிளம்பினாள்.
கைக்கும் வாய்க்கும் போராட்டமாக இருக்கும். இருந்தாலும் மூன்று பேருடைய தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? ராமசாமி கிராமப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். அவன் படிக்கட்டும் என்று நினைத்தாள். ஆனால்
பார்வதியால் முடியவில்லை.
லஷ்மியும் வேலைக்கு போக ஆரம்பித்தாள். வயது பதின்மூன்று. ஒரு ஹோட்டலில் வேலை செய்யச் சேர்ந்தாள். பாத்திரங்களைக் கழுவி வைப்பது, எடுபிடி வேலைகளைச் செய்வது என்று ஆரம்பித்து, பல வேலைகள். முதலாளியும்
முதலாளியம்மாவும் சொல்லும் வேலைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சாப்பிடவும் உடுத்திக்கொள்ள என்று ஏதாவது ஆடைகளும் கிடைக்கும்.
ராத்திரி ஆகிவிட்டால் வீட்டுக்குக் கிளம்பி விடுவாள். அம்மா ஒரு வீட்டில் வேலைக்காரி. தினம் கிடைப்பதை செலவுக்காக ராமசாமியிடம் கொடுப்பாள்.
ராமசாமிக்கு தானும் ஏதாவது வேலைக்கு போகவேண்டும் என்று இருந்தது.
பன்னிரண்டு பதினாலு வயதான அவனுக்கு என்ன வேலை கிடைக்கும்? எங்கேயாவது ஏதாவது ஒரு வீட்டில் எடுபிடி வேலை கிடைக்கும். அவன் நினைத்துக் கொண்டான்.
அப்பா வேலைக்காரன். அம்மா வேலைக்காரி. அக்கா வேலைக்காரி. இப்படி தானும் ஆகும் போது ஒரு வீட்டில் எல்லாரும் வேலைக்காரர்கள் குடும்பமாக ஆனால்? சென்னை அல்லவா? எத்தனையெத்தனை காரியங்கள் நடக்கும்?
ஏராளமானவர்கள் சாப்பிடுகிறார்கள். தூங்குகிறார்கள். வீடு கட்டுகிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் சம்பாதிக்கவும் செய்யும் ஒரு பட்டணம் அது. கோடிக்கணக்கான ரூபாய் கை மாறும் நகரம் அது. ஆயிரக்கணக்கான ஆட்கள் தினம் தினம் வந்து போய்க் கொண்டிருக்கும் இடம். இவ்வளவு பேர் இருக்கும் இந்த ஊரில் தான் ஒன்றும் ஒரு அதிகப்படியான ஆள் இல்லை என்று அவனுக்கு தோன்றியது.
அந்தப் பெருங்கூட்டத்துக்கு நடுவில் தனக்கும் கால் ஊன்ற ஒரு இடம் கிடைக்காமல் போகாது என்று அவன் முழுமையாக நம்பினான்.
“எனக்கு வழிகாட்டன்னு யாரு இருக்காங்க? என்ன வேலை எனக்காகக்க் காத்துகிட்டு இருக்கு?” அவன் அலைந்து திரிந்தான். எல்லா இடங்களிலும் இருட்டு. லேசாக ஒரு வெளிச்சம். ஒரு சின்ன வேலை கிடைத்தால் கூடப் போதும்.
நியூஸ் பேப்பர் போடும் பையனாக வேலையை தொடங்கினான்.
செய்தித்தாள்களை மின்னல் வேகத்தில் எல்லா இடங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
நடந்து போக முடியாது. சைக்கிள் வேண்டும். அது எங்கேயிருந்து கிடைக்கும்? கிடைக்கும் கிடைக்கும். முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். சுவாரசியமான விஷயம்தான் அது. கற்றுக் கொண்டான்.
ஒரு மணி நேரம். ஒன்றரை மணி நேரம். இரண்டு மணி நேரம் செய்திததாள் விநியோகம். வாடகைக்குச் சைக்கிள் எடுத்து ஓட்டமாக ஓடினான். அந்த வேலை முடிந்தவுடன் கொஞ்ச நேரம் செய்தித்தாளை வாசிப்பான்.
வாசிப்பும் படிப்பும் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.
நேற்று ராத்திரி அமெரிக்காவிலும் செங்கல்பட்டிலும் காரைக்குடியிலும் மாஸ்கோவிலும் நடந்தது எல்லாம் அவனுக்கு தெரியவந்தது. செய்தித்தாளை அச்சடிக்கும் இடத்திற்கு போய்ப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. அதுவும் நடந்தது.
அச்சடிக்கும் இயந்திரங்களைப் பார்த்தான். சின்ன ஒரு அச்சு ஆபீசுக்குப் போனான். பொழுதுபோக்காகத்தான் எல்லாம். இயந்திரங்கள் சுழலும் காகிதத்தில் அச்சு எழுத்துக்கள் பதிந்தன. சிலர் அச்சுக்களை கோர்த்தார்கள். அச்சு ஆணிகள்.
அச்சு பெட்டிகள். எல்லாம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பலதையும் உற்று நோக்கி ஆராய்ந்தான். செய்தித்தாள் விநியோக வேலை முடிந்தவுடன் அச்சு வேலைகளைக் கற்றுக் கொண்டான்.
எழுத்து கோர்ப்பவனானான். சம்பளம் அதிகம் இல்லை. இதற்கு நடுவில் லஷ்மி ஒரு பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். அவள் வேலை பார்த்த ஹோட்டலில் வேலை செய்யும் வேலாயுதத்தோடு அவளுக்குக் காதல். அவன்
பார்வதியைப் பார்த்துப் பெண் கேட்டான். நல்ல பையனாகத் தெரிந்தது. லஷ்மிக்கு வயது பதினெட்டாகி விட்டது.
ஹோட்டலில் இருப்பதால் சாப்பாட்டுக்கு ஒரு குறையும் கிடையாது. நன்றாக வளர்ந்திருக்கிறாள். பார்வதி யோசித்தாள். நல்லவனாக இருக்கிறான் என்று தோன்றியது. மனம் குளிர்ந்தாள். “அம்மா. கல்யாணத்துக்குக் காசு ஒன்னும்
நீங்க தரவேணாம். கோயில்ல போய் கல்யாணம் செஞ்சுக்கலாம். எனக்கு லஷ்மிய மட்டும் கல்யாணம் கட்டிக்கொடுத்தாப் போதும்” அதற்கு மேல் எதையும் கேட்கும் தகுதி அவனுக்கு இல்லை.
“ஏழைக்கேத்த எள்ளுருண்டை” அடுத்த வாரமேக் கல்யாணம் நடந்தது.
ராமசாமிக்கு ப்ரஸ் வேலை பிடிக்கவில்லை. அங்கே அச்சுப்பொறி இயந்திரங்களை விற்கும் ஏஜெண்ட்டுகள் வருவதுண்டு. வாங்குகிற சாமான்கள் வழியாக ஏஜெண்ட்டுகளுக்குப் பதினைந்து சதவிகிதம் கமிஷனாகக் கிடைக்கும். ராமசாமி
கணக்குப் போட ஆரம்பித்தான்.
பல ஆட்களுக்கு சாமான்களின் அவசியம் இருக்கிறது. இன்னும் சில பேர் விற்பனை செய்கின்றனர். எல்லாவற்றுக்கும் கமிஷன். இதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதற்குத் தேவைப்படுவது எல்லாம் நேரம் மட்டும்தான். அதனால்
பரவாயில்லை. நல்ல பொருட்களுடைய ஏஜெண்ட்டாக இருக்க வேண்டும்.
உரிமையாளன் நல்லவனாக இருக்கவேண்டும். அப்புறம் ஏஜெண்ட்டு நல்ல வார்த்தைகள் பேசவேண்டும்.
ராமசாமி ப்ரஸ் உபகரணங்கள் விற்கும் ஏஜெண்ட்டாக கனவு காண ஆரம்பித்தான். பிறகு நல்ல பேருள்ள ஒரு இடத்துக்கு ஆர்டர் வாங்கக் கிளம்பினான். தொடர்ந்து அம்மா வீட்டு வேலை செய்வதைக் கைவிட்டாள்.
ராமசாமியின் வியாபாரம் வளர ஆரம்பித்தது. அப்போது கிட்டப்பா தன்னுடைய பெண்ணை அவனுக்குக் கட்டித்தருவது பற்றி யோசித்தான்.
பார்வதிக்குச் சந்தோஷம் பொங்கி வழிந்தது. குப்பை சேரியில் வளர்ந்த ராமசாமிக்கு தன்னுடைய மகளையும் ஐயாயிரம் ரூபாய் சீதனமாகவும் நல்ல கல்யாணத்தையும் நடத்தித் தர கிட்டப்பா முன் வந்தார். “நான் கண்ண
மூடறதுக்குள்ள இதயும் பாத்துட்டு போயிடணும். நீ சம்மதம் சொல்லு”
பார்வதியிடம் ராமசாமி சொன்னான்.
“அம்மா. உன்னோட யோசனய ஏத்துக்கறேன். உன்னோடசந்தோஷம்தான் என்னோடதும். ஹெட் கான்ஸ்டபிளோட பொண்ண உனக்கு பிடிச்சிருக்குன்னா அத விட பெரிய இடத்துப் பொண்ண நான் கூட்டிகிட்டு வரேன்”
“அது யாரு?. எவ்வளவு பணம் தருவாங்க?”
“அய்யாயிரம் ரூபாய்ன்னு கேட்டப்ப நீ மயங்கிட்டியா?”
“அது ஒரு பெரிய தொகை”
“அம்பதினாயிரம் சீதனம் தர்ற பொண்ண நான் கூட்டிகிட்டு வரேன். அது ஒன்னும் பெரிய கஷ்டமான காரியம் இல்லம்மா. அதயும் நி பாக்கத்தான் போற. கொஞ்சம் பொறுமயா இரு”
பார்வதிக்குக் கவலை ஏற்பட்டது. வீடு வாசல் போதுமான காசு. எல்லாம் வந்தாயிற்று. ஆனாலும்?
பார்வதி மகனுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டாள்.
இரண்டு மூன்று நாட்களான போது அம்மா மகனுக்கு ஞாபகப்படுத்தினாள்.
“மகனே. ஒரு பொண்ண கூட்டிகிட்டு வரதா சொன்னியே?” ராமசாமியுடைய வியாபாரம் பெருகியது. இயந்திரங்களை விற்க ஆரம்பித்தான். அவனுடைய வங்கிக் கையிருப்பு அதிகமானது. ஐம்பதினாயிரம் ரூபாயைச் சீதனமாக வாங்க எல்லாத் தகுதியும் அவனுக்கு அப்போது உண்டாகியிருந்தது.
பார்வதி சொன்னாள். “நான் தனியா இருந்து கஷ்டப்படறேன். நீ ஒரு பொண்ணக் கூட்டிகிட்டு வரமாதிரித் தெரியல. நீ இப்ப யாருக்காகப் பாடாப்படற?”
ராமசாமி சொன்னான். “இதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் இருக்கு”
“உனக்கு முப்பத்திரெண்டு வயசாயிடுச்சு. இன்னமும் நேரம் காலம் வரலயா?”
“இப்ப காலம் வந்துடுச்சு. இனிம கல்யாணம் கட்டிக்கலாம்”
“பொண்ணு நல்லவளா இருக்கணும்”
“நம்ம குப்பத்துக்கேத்த மாதிரி ஒரு பொண்ணு”
“நல்ல காசு கிடைக்கணும்”
“நல்ல காசா? சீதனமா? கட்டிகிட்டிருந்த சேலையோடயும் ஆறு கண்ணாடி வளையல்களோட தான் நம்ம பொண்ணக் கட்டிக் கொடுத்தோம்? அதே அளவு போதும்”
“நாம அப்பறம் அவனுக்கு இருபத்தய்யாயிரம் ரூபாய்க்கு வீடு கட்டிக் கொடுக்கலயா? ஒன்னும் இல்லாத வேலாயுதத்துக்கே இப்படின்னா? உனக்கு அந்த மாதிரி ரெண்டு மடங்கு காசு கிடைக்கும். எங்கிட்ட நிறய பேரு கேக்கறாங்க”
“எங்கிட்ட யாரும் இதப் பத்தி சொல்லலயே?”
“கல்யாணம்னா சொன்னா செஞ்சிடமுடியுமா? அதுஎன்ன சாதாரண விஷயமா?”
அதெல்லாம் என்னத்துக்கு? ஒரு பொண்ணுதான் வேணும். வீட்டுக்கு ஏத்தமாதிரி ஒரு நல்ல பொண்ணு. இஞ்க வர்றப்ப அவ பணமுள்ள வீட்டோட பொண்ணா ஆயிடுவா”
“நீ பேசாம இரு”
“பேசாம இருந்தா கல்யாணம் நடக்குமா?”
“சரி. இனிம நான் உன்னோட கல்யாண விஷயமா பேசல. உனக்கு கல்யாணம் வேணாம்”
“எனக்கு வேணும். எனக்கு ஒரு பொண்ணத் தெரியும். அவளுக்கு அம்மாவோ அப்பாவோ வீடோ வாசலோ சொத்தோ எதுவும் இல்ல. இருந்தாத்தானே அதப் பத்தி பேசணும்? ஒரு கதியும் இல்லாத பொண்ணு”
பார்வதியுடைய முகம் மாறியது.
“தெரியாமதான் கேக்கறேன். ஒரு கதியும் பரகதியும் இல்லாத பொண்ணா! நீ யாரடா சொல்லற? இதெல்லாம் என்னடா? என்னிக்குடா ராமசாமி இதயெல்லாம் ஆரம்பிச்ச? என்னடா சண்டித்தனம் இதெல்லாம்?”
“சண்டித்தனம் ஒன்னும் இல்ல. தெண்டி நடக்கறவ அவ இல்ல. அம்மா. உனக்கு தெரியும். உனக்கு அவளப் பிடிக்குமா?”
பார்வதி கண்களை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்குத் தெரியாது. யாரு அது? எனக்கு தெரிஞ்சு அப்படி யாருமில்ல. நடக்கறதுன்னா நடக்கட்டும். எங்கிட்ட எதயும் சொல்லவேணாம்”
“அப்பறம் யாருகிட்ட போய் நான் சொல்றது? நான் பெரிய இடத்துலேர்ந்து ஒரு பொண்ணக் கட்டிகிட்டு வந்தா அவ அம்மா உன்ன பாடாப்படுத்தி எடுத்துடுவா. கண்ட கண்ட வீட்டுல எல்லாம் போயி வேல செஞ்ச பொம்பளைன்னு உன்ன அவ அசிங்கமாப் பேசுவா. குப்பக்காரனோட பையந்தானே நான்? அதனாலதான் யோசிக்கறேன். சீதையை கட்டிக்கலாம்னு இருக்கேன்”
பார்வதி திடுக்கிட்டுப் போனாள்.
சீதையா! அந்த வீட்டில் வேலை செய்யும் பெண். அவளுக்கு யாரும் இல்லை. அம்மா அப்பா காலரா வந்து செத்துப் போயிட்டாங்க. யாரோ வளர்த்தார்கள். ஆறு வருடமாக பார்வதிக்கு ஒத்தாசையாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள்.
பார்வதி எழுந்து நடந்தாள். “அவளுக்கு சம்மதமான்னு நீயேக் கேட்டுச் சொல்லு”
பார்வதி எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் ராமசாமி சொந்த அம்பாசிடர் காரில் எங்கேயோ கிளம்பிப் போனான்.
“வர்றதுக்கு ராத்திரியாயிடும்”
அவன் வந்தது நடு ராத்திரிக்கு அப்புறம்தான். எழுந்திருந்தது ரொம்ப நேரம் கழித்துதான்.
“சீதை போயிட்டாளேடா? இதுகளோட வேலயே இப்படிதான். பத்து நாளைக்கு நிரந்தரமா ஒரு இடத்துல இருக்காதுங்க”
காபி குடிக்க வந்தபோது ராமசாமியிடம் பார்வதி சொன்னாள். அவனுக்கு சாப்பாட்டில் சுவை ஏற்படவில்லை. வெளியில் சென்ற போது அந்த வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் துல்லியமாக ஊகிக்க முடிந்தது. அவன் அம்மாவுடைய முகத்தை வெறுப்போடு பார்த்தான். கொஞ்ச நேரத்தில் அந்த வெறுப்பு பரிகாசம் கலந்த சிரிப்பாக மாறியது.
“ஹ்ஹா! அம்மா காபி குடிம்மா” காபி குடித்ததாக பேருக்கு உட்கார்ந்துவிட்டு எழுந்திருந்தான்.
கொஞ்ச நேரம் சிந்தனையில் மூழ்கினான். பிறகு பார்வதியிடம் எதுவும் சொல்லாமல் வெளியில் போனான்.
வாழ்க்கையில் முதல்முறையாக ஏற்பட்ட தோல்வி. அதுவும் தன்னுடைய அம்மாவால தனக்கு ஏற்பட்டது. சீதையோடு ஒரு வேலைக்காரியிடம் பழகுவது போலதான் அவன் அதுவரை பழகியிருந்தான். அவள் மீது தோன்றிய பரிவு அவள்
மீது அவனுக்கு அன்பு ஏற்படவைத்தது. இப்போது அதில் திடீரென்று ஒரு மாற்றம். அம்மாவுடைய செயல் அவனுடைய வீரியத்தை அதிகப்படுத்தியது. சீதையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அவளைக் கல்யாணம்
செய்து கொள்ள வேண்டும். அவள் நல்லவள். அன்பானவள். பண்பு மிகுந்தவள். அன்பெனும் பெரும்செல்வம் உடையவள். அவன் சீதையைத் தேடி நடந்தான். அவளை அங்கேயும் இங்கேயும் பார்த்தவர்கள் எல்லோரும் அவளைப் பற்றி எதையும் சரியாக சொல்லவில்லை. அவளுக்கு ஊரும் பேரும் கிடையாது.
அவளுடைய உண்மையான பெயர் சீதை இல்லை. கூப்பிடுவதற்கு வசதிக்காக பார்வதி வைத்த பெயர் அது. பரந்த உலகத்தில் அவளைத் தேடுவது வீண் வேலை என்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய மனது தளர்ந்தது.
வியாபாரம் மந்தகதியானது. என்றாலும் அவன் சீதையை மறக்கவில்லை.
தேடுதல் முடியவில்லை. தொடர்ந்து கொண்டேயிருந்தது!