கடமத்து உன்னிக்கண்ணனுடைய டீக்கடையில் இருந்து ஒரு கறுப்புத் தேநீரைக் குடித்த பிறகு அஷ்டமுடிக் காயலைப் பற்றி ஒரு சிறிய விவாதத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாக இவர்கள்
எல்லோரும் என்னுடைய காலைப் பொழுதுகளை உற்சாகம் அடையச் செய்து கொண்டிருக்கின்றனர். தேநீருடைய ஸ்டாங்கும் விவாதத்தில் பங்கேற்கும் ஆட்களும்தான் என்னைக் கவர்கின்றவையாக இருந்தன.
வாக்கு சாதுரியத்துடன் பேசும் ஸ்கூல் மாஸ்ட்டரும் கலைஞனான குட்டப்பனும் அரசியல்வாதியான நானுவும் எதையும் பேசாமல் இருக்கும் பெரிய நரம்புள்ள அகண்ட கண்களுடன் தோற்றமளிக்கும் வழுக்கைத் தலையனும்
என்னுடைய மனதில் இடம் பிடித்திருந்தனர். பம்பரம் போல சுற்றிக் கொண்டிருந்த சுழலும் என் சிந்தனைகளை நான் ஒரு முறை மீள் நினைவுக்கு உட்படுத்தினேன்.
எழுதிக்கொண்டிருந்த என் நாவல் கதாநாயகி இந்த ஊருக்கு வந்து தேநீர் அருந்தவும் விவாதத்தில் பங்கேற்கவும் செய்தால் தற்கொலை செய்து கொள்ள அவளுக்கு வாய்ப்பே இருக்காது என்று தோன்றியது. அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால் நாவல் இல்லை. இந்த நாட்டுப்புறத்துக்கு வந்து நான் தங்கியிருப்பதில் பொருள் இல்லை.
கதாநாயகி டீக்கடையில் நுழைய உறுதியாக வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையுடன் நான் நடந்தேன். நாட்டுப்புற வாசனைகள் வீசிக் கொண்டிருக்கும் ஊர்த் தெருக்கள் வழியாக நடக்கும் போது கதாபாத்திரங்களைப் பற்றி என்னால்
சிந்திக்க முடியவில்லை.
வயல்களுக்கு விருந்து வரும் பச்சைப் புடவை உடுத்திய கிளிகளும் நீல நிறத்தால் கண்ணுக்கு மை எழுதிய மைனாக்களும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கடந்து போகும் ஆறும் அக்கரையில் நிற்கும் தோணிக்காரனை இங்கிருந்து
அழைக்கும் வெற்றிலை வியாபாரியுடைய மனைவியும் கடலில் குளிக்க வந்தவனுடைய தோல் பையில் இருந்து ஐம்பது பைசாவைத் திருடவும் குளித்து முடித்த பிறகு எதுவும் தெரியாதது போலக் கூடவே நடந்து ஏமாற்றும் திருடனும்
இவர்கள் எல்லோரும் என் மனம் கவர்ந்தவர்கள்.
தனிமையைத் தேடிதான் இங்கு வந்தேன். இங்கு மனிதர்கள் குறைவுதான். இந்த நாட்டுப்புறம் கம்பிகள் முறுக்கிவைத்த வீணை மாதிரி. மெலிதாக காற்றடித்தால் கூட ஓசை எழும். சில்லு வண்டுகள் முதல் விவசாயிகளிடம் இருந்து கிளம்பும் விதவிதமான ஒலிகள். பூக்களின் வண்ணஜாலங்கள்.
பிச்சிப்பூ முதல் தேங்காய் நார் வரை வீசும் விதவிதமான வாசனைகள். இந்தக் கவர்ச்சி வளையத்தில் சிக்கிக் கொண்டு நடந்து போகும் போதுதான் ஒரு குட்டி மனிதன் எனக்கு முன்னால் வந்து நின்றான். அந்தப் பையன் தன்னுடைய ஒரே ஒரு ஆடையான அந்த ட்ரவுசரின் கால் முட்டிக்கு அருகில் வந்து நின்று பாக்கெட்டில் கையை விட்டபடி கேட்டான்.
“நீங்க இந்த ஊருக்கு புதுசுதானே?”
“ஆமாம்”. எப்ப நீங்க இங்கேர்ந்து உங்க ஊருக்கு திரும்பிப் போவீங்க?”
“ஒரு வாரத்துல போவேன். சரி. உன்னோட பேரு என்ன?”
“என்னோட பேரயா கேக்கறீங்க?” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போலதான் அவன் அதை கேட்டான்.
பிறகு சொன்னான். “கொச்சு குட்டன். உங்க பேரு?”
நான் சொன்னேன்.
”எங்கேர்ந்து வர்றீங்க?” பட்டணத்தின் பெயரை சொன்னேன். “அன்ங்க ஓனம் பண்டிகையப்ப நிறய பூ கிடைக்குமா?”
“இல்ல” அவன் விழிகள் முன்பை விடப் பெரிதாக விரிந்தன. என்னை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான். “அப்பறம் என்ன தோனுது?”
“உறுதியா சொல்லத் தெரியல”
பூக்களோட பூ வாசனைங்களோட புதுத்துணிங்களோட வாசனய எல்லாத்தப் பத்தி நாங்க கேள்விப்பட்டுதானிருக்கோம்” நான் அவனிடம் சொன்னேன்.
அவனுடைய உரையாடலைத் தொடர விரும்பி நான் கேட்டேன். “நீ பூக்களச் சேகரிக்கப் போறது இல்லயா?”
“இல்ல”. கவலையுடன் பதில் வந்தது.
எங்கிட்ட ஒரு பூத்தொட்டி கூட இல்ல. ஆனா தாட்சாயிணிக்கும் பாலனுக்கும் சிவப்பும் மஞ்சளும் பச்சயுமா பூ பூக்கற நிறய தொட்டிங்க இருக்கு. தாட்சாயினிக்கு அவங்க அப்பா அம்மா வாங்கிக் கொடுத்ததுதான். அதெல்லாம். அவள உங்களுக்குத் தெரியாதா?”
“ தெரியாது” “ உங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னுதான் தோனுது”. “நீ இந்த உண்மைய முன்னாடியேக் கண்டுபிடிச்சிட்டியே?” நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அப்போது அவன் அவளைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
“அவளோட அப்பா இன்ஸ்பெக்டர். பாலனோட அப்பா பஞ்சாயத்து ஆபீஸ்ல க்ளார்க்”
“உன்னோட அப்பா?” கேட்டேன்.
அவன் மௌனமானான். அசைவுகள் இல்லாத பார்வையை உதிர்த்தபடி என்னை பார்த்தான். ஒரு குட்டிப் பையனுக்கு இந்த அளவுக்கு துயரம் கலந்த ஒரு முகம் இருக்கும் என்று இது நாள் வரை நான் நினைத்துப் பார்க்கவேயில்லை நான்!”
“என்னோட அப்பா எங்க இருக்காருன்னு தெரியல. எனக்கு அப்பான்னு ஒருத்தரு இருந்தாருன்னு அம்மா சொன்னாங்க”
இன்னிக்கு புதுசா ஒரு சேதி சொன்னாங்க. அப்பாவ யாரோ கடத்திக்கிட்டுப் போயிட்டாங்க. யாருன்னு தெரியல”
அம்மாவுக்கும் தெரியாது. ஆளுங்களுக்கும் தெரியல. இருந்த இடத்தை விட்டு ஆடாமல் அசையாமல் நிற்கும் அந்த சின்னப்பையனுடைய மார்புகள் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன.
“இவனோட அப்பாவ கடத்திகிட்டு போனது மனுஷனா மரணமா? தெரியல” அது பற்றி நான் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அந்தப் பேச்சு நீண்டு போகக்கூடாது என்று தோன்றியது.”அவனுக்கு பூச்செடிங்கள வளக்கற தொட்டி
வேணுமாம். நான் கேட்டேன்.
“அம்மா வாங்கித்தர்றது இல்ல”
“ நீ அம்மாகிட்டக் கேட்டியா?”
“ஆமாம் கேட்டேன். அப்ப அம்மா சொன்னாங்க. அப்பா உன்ன மட்டும்தான் எனக்கு தந்திருக்காருன்னு அம்மா சொல்றாங்க. இத மத்தவங்க முன்னால அம்மா எங்கிட்ட சொன்னத கேட்ட எல்லாரும் பெரிசா சிரிச்சாங்க. அவங்க எல்லாருக்கும் ஓங்கி ஒரு குத்து விடணும்னு தோணிச்சு. திட்ட கூட முடியாம போச்சு. மாமா எதித்து பேசினாங்க. அம்மாவயும் அடிச்சாங்க. நானு மாமா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தாரு. அப்பாவ யாரோ கட்டி தூக்கிகிட்டு போயிட்டாங்கன்னு சொன்னாரு. ஆனா அத செஞ்சதே அவருதான். சரியான திருடன்” அவன் மறுபடியும் மௌனமானான்.
“அவனோட அப்பா யாரு? பட்டாளத்துலேர்ந்து லீவு எடுத்துகிட்டு வந்திருக்கலாம். தோச்சு இஸ்திரி போட்ட சட்ட. டிரங்கு பெட்டி. சிகரெட் லைட்ட. கறுப்பு கண்ணாடி. இந்த வேஷத்துல ஊருக்குள்ள நுழஞ்ச அவரப் பாக்க நிறய ஆளுங்க
கூடியிருக்கலாம். பஸ்ஸ விட்டு இறங்கியப்ப வேடிக்க பாக்கவந்தவங்க கூட்டம் அதிகமா இருந்திருக்கலாம்” நான் கற்பனை செய்தேன்.
உன்னி கண்ணனோட டீக்கடைக்கு போய் ஒரு டீயக் குடிச்சேன். என்னோட புது நாவலுக்கு தேவையான எல்லாத்தயும் எழுதிக் கொடுக்கணும். அது சீக்கிரமே நூலா வெளியில வரும்.
இந்த வயல் வரப்புங்க வழியாவும் அந்த நடபாதைங்க வழியாவும் கோயில சுத்தி இருக்கற வழியாவும் டூரிங் சினிமா கொட்டகையயும் அவரு சுத்தி பாத்திருப்பாரு. அப்ப குளிச்சு கோயிலுக்கு வந்து சாமிய கும்பிட்டுட்டு நெத்தியில குங்குமப் பொட்டோடயும் கட்டின நுனி முடியில சிவப்பு பூக்களோடயும் அங்க வந்த கொச்சு குட்டனோட அம்மா கேட்டிருக்கலாம். “வறண்டு கிடக்கற ஆத்தங்கரயோட மணல் திட்டு வழியா அப்ப அவங்க இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தரு காதலிச்சுகிட்டே காலார நடந்திருக்கலாம்.
அடுத்த நாள்... அடுத்த நாள்... அதுக்கும் அடுத்த நாள்... அவங்க நடந்து கிட்டே நிறய கத பேசியிருப்பாங்க. சூரியன் மறையற சாயங்காலங்கள்லயும் நிலா ஒழுகற ராத்திரிங்கள்லயும் கோயில் முத்தத்தோட அரச மரத்து இலைங்களோட சேந்து பேசி பேசி நடந்து அவங்க ரெண்டு பேரும் போயிருப்பாங்க. அப்போ அந்த ஆளோட லீவு முடிஞ்சிருக்கும்”
என் கற்பனைகள் சிறகு விரித்து பறந்தன. “அடுத்த தடவ எப்ப வருவீங்க?”
“வருவேன். உறுதியா வருவேன்” அந்த ஆளு சொல்லிவிட்டு பிரிய மனமில்லாம பிரிஞ்சு போயிருக்கலாம். அப்பதான் தெரிஞ்சிருக்கும். வடக்கு எல்லையில ஆபரேஷன் ஆரம்பிச்சுடுச்சுன்னு. அங்க போகணும். அப்பறம் போர். குண்டு வெடிப்புங்க”
என்னோட கற்பனைங்க தொடந்துகிட்டே இருந்துச்சு. அப்பறம் என்ன நடந்திருக்கும்?
“புகையோட மூட்டங்கள்ல பதுங்கு குழிங்கள்ல கப்பலோட மேல் தளங்கள்ல விமானத்தோட உள் பரப்புங்கள்ல உயிருங்க காணாமப் போயிருக்கும். இதெல்லாம் நடந்திருக்கலாம். என்னை மாதிரி ஒரு எழுத்தாளன் கூட கொஞ்ச நாள் இங்க வந்து தங்கியிருந்துட்டு போயிருக்கலாம் இல்லயா? குருவாயூருக்கு போற ஒரு வியாபாரி. இல்லாட்டா ஒரு அரசியல் வாதி. கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால நதியோட ஜில்லுன்னு வீசின காத்துலயோ கோயிலோட பச்சப்பசேலுங்கற பின்னணியிலயோ நிலா ஒளிச்சு வச்சு விலையாடின மணல் பரப்புங்கள்லயோ ஒருத்தர ஒருத்தரு பாத்து காதல் வயப்பட்டிருப்பாங்க. அஞ்சு வருஷங்களுக்கு முன்னால நான் இங்க வந்து தங்கியிருந்தேனா? ஞாபகமில்ல. நான் அதுக்கு மேலயும் அவனோட அம்மா அப்பா எப்படி கல்யாணம் செஞ்சுகிட்டங்கங்கற ஆராய்ச்சியில இறங்க விரும்பல”
“பூச்செடிங்கள எங்க வாங்கணும்? எங்க கிடைக்கும்?”
“கடமத்துல இருக்கற கடைத்தெருவுல கிடைக்கும்”
“வா”
“நீங்க வாங்கித் தருவீங்களா?”
“நிச்சயமா”
“அப்ப நீங்க யாரு?” அவனுடைய கேள்வியை முழுமையாக்க இடம் கொடுக்காமல் நான் இடைமறித்தேன். “வா. வாங்கித்தரேன்”
தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து கொண்டிருந்த விடியற்காலை வெளிச்சத்தில் கண் திறந்த நெல்லிப் பூக்கள் நெளிந்து கொண்டு நின்றன.
கடந்த காலத்தில் மனம் தட்டு தடுமாறி பயணித்தது. “போன வருஷ ஓன விடுமுறையில நான் மதராஸ்ல இருந்தேன். அதுக்கு முன்னால வருஷம் வேறொரு இடத்துல இருந்தேன். அதுக்கும் முன்னால வீட்டுலதான் இருந்தேன். இல்ல நான் எப்பயாச்சும் இந்த ஊர்ப்பக்கம் வந்தேனா? தங்கியிருந்தேனா?” நான் வேண்டாததயெல்லாம் யோசித்தேன். அவன் காட்டித் தந்த கடையில் இருந்து தொட்டிச்செடிகளை வாங்கினேன். ஒவ்வொரு செடியிலும் பூக்கள் பூத்திருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு நிறம். அவன் சந்தோஷத்தில் துள்ளினான். காசு கொடுத்துவிட்டு திரும்ப நடக்கும்போது பின்னால் இருந்து ஒரு ஆள் பேசுவது கேட்டது.
“ஓஹோ! அப்ப இதான் விஷயமா?”. திரும்பிப் பார்த்தேன்.
சிவந்த நரம்புகளோடு இருந்த பெரிய கண்கள் உடைய வழுக்கைத்தலையன் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் காழ்ப்புணர்ச்சி பரவியிருந்தது. திரும்பி நடந்தேன்.
“மனுஷங்க ஆபாசமானவங்க. குரூரமான ஜென்மங்க” அவ மெதுவான குரலில் பேசினான்.
“இந்த மூணு தொட்டியிலயும் பூக்களா பூக்கும். ஒரு நாளைக்கு உங்களுக்கும் தரேன். சரியா?”
“சரி”
“நானு மாமாவுக்கு கொடுக்கவேமாட்டேன். சரியா?”
“சரி”
“அந்த மாமா சரியான திருட்டு மனுஷன். தெரியுமா?”
“சரி”
வீட்டு வாசற்படியை அடைந்தோம். அவன் கேட்டான். “நான் போகட்டுமா?”
“சரி” என்று நான் சொல்லவில்லை. அவன் போய் நுழையும் வீட்டை ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தேன். திரும்பி நடந்தேன். வீட்டுக்கு வந்த போது வேலைக்காரன் சொன்னான்.
“தண்ணி சுட்டுடுச்சு. குளிக்கலாம்”
குளித்தேன். காலை உணவைச் சாப்பிட்டேன். எழுதுவதற்காக காகிதங்களைத் திறந்து வைத்தேன். கதாநாயகி தற்கொலை செய்யத் தயாராகிக் கொண்டிருந்ததை விவரமாக எழுத வேண்டும். பட்டன்றூ ஒரு யோசனை. “என்னோட நாயகிக்கு கொச்சு குட்டன மாதிரி ஒரு குழந்தை இருந்திருந்தா? தற்கொல செய்யத் துணிவாளா?” அதோடு நாயகி மறைந்தாள்.
மனது முழுவதும் கொச்சு குட்டன் நிறைந்தான். பிறகு யோசனைகள் மாறி மாறி எங்கெங்கோ சென்றன. கொச்சு குட்டனுடைய அப்பாவை கடத்திக் கொண்டு போனது யார்? ஆணா பெண்ணா? காகிதங்களை மடித்து வைத்துத் திண்ணையில் உலாத்தினேன்.
பகல் உணவை சாப்பிடும்வரை உலாத்திக் கொண்டிருந்தேன். பிறகு தூங்கினேன். எழுந்திருக்கும் போதும் கொச்சு குட்டனும் கடத்திக் கொண்டு போகப்பட்ட அவனுடைய அப்பாவும் பூச்செடி தொட்டிகளுமே என் மனது முழுவதும் நிறைந்திருந்தன. அடுத்த நாள் காலையில் கடைத்தெருவுக்கு போய் திரும்பி வரும்போது கொச்சு குட்டன் எனக்காக காத்துக் கொண்டிருந்தான்.
ஒரு கூடை பூக்களோடு அவன் காத்திருந்தான். “எனக்கு எதுக்கு பூக்கள்?” ஆனால் அதைப் பற்றி சொன்னால் அவனுக்குப் புரியாது. நான் பூக்களால் ஓனத்துக்கு களம் உண்டாக்க வேண்டும் போலிருக்கிறது. அவனுடைய ஆசைக்காக நான் அவ்வாறு செய்தேன். பூக்கூடையைத் திருப்பிக் கொடுத்தேன். அவனும் ஒவ்வொரு நாளும் இது போலவேத் திரும்பத் திரும்பச் செய்தான். அந்த நாட்களில் எல்லாம் அவன் ஒரே ஆடையைத்தான் போட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவனிடம் நான் இது பற்றி கேட்டேன். “உங்கிட்ட வேற உடுப்பு இல்லயா?”
“இல்ல”
“நான் வாங்கித்தரட்டுமா?”
“தரலாம்”
துணி வாங்கித் தையல் கடையில் கொடுத்தேன். அப்போதும் அடுத்தாற் போலிருந்த டீக்கடையில் சிவந்த நரம்புகளோடு கூடிய இரண்டு பெரிய கண்கள் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த ஆள் குறிப்பிட்டு யாரிடமும் இல்லாமல் பேசுவது கேட்டது. “ஓ ஓ! நடக்கட்டும் நல்லா நடக்கட்டும் நாடகம்!”
நான் திடுக்கிட்டேன். ஆனாலும் வெளியில் காட்டாமல் நடந்தேன். அடுத்த நாள் புது ஆடையோடு கொச்சு குட்டன் பூ கொண்டு வந்தான்.
என்னைப் பார்த்தபடி அவன் நிசப்தமாக சிரித்தான்.
“என்ன விசேஷம்?”
“நீங்க அழகா இருக்கீங்க”
என்னுடைய அழகை இது வரை யாரும் இப்படி வெளிப்படையாகப் பாராட்டியது இல்லை. சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவன் திரும்பப் போனான். புது வாசனையோடு இருந்த ஆடையும் கறுத்து சுருண்ட தலைமுடியுமாக ஒரு குந்துமணியைப் போல அவன் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது இனம் புரியாத ஒரு வேதனை என் இதயத்தில் தளம் கட்டி நின்றது.
அடுத்த நாள் அவன் சொன்னான். “நிறய பூவெல்லாம் சேக்கணும். ரெண்டு கூடை பூ கொண்டு வரணும்”
நான் சிரித்தேன்.
நீங்க போட்டிருக்கற பூக்கோலம் நல்ல அழகா இருக்கு. நானு மாமாவுக்கு ஒன்னும் தெரியாது. புத்தி இல்ல அவருக்கு. தெரியுமா?”
“சரி”
“ரொம்ப கெட்ட மனுஷன்”
“சரி”
“என்னோட அம்மா கழுத்த புடிச்சு நெறுக்கிட்டு அந்த ஆள் சொல்றான். கொன்னுடுவேன்னு. கொன்னுடுவானா?”
“இல்ல. இல்ல”
“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”
“போலீஸ் வந்துடுவாங்க”
“உண்மயாவா?”
“ஆமாம்”
அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. அவன் போனான்.
அடுத்த நாள் அவனைப் பார்க்கவில்லை. காலியாக இருந்த பூத்தொட்டிகள். சிவந்த நிறத்தில் நான் அவனுக்கு வாங்கிக் கொடுத்த புது ஆடை. எல்லாம் என்னுடைய வாசற்படி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன. நான் அதை எடுத்துக் கொண்டு அவனைத் தேடிப் போனேன்.
இருந்த ஒரே ஒரு ஆடையுடன் வாகை மரத்தடியில் சாய்ந்து நின்று கொண்டு அவன் வயலையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கூப்பிட்டபோது அவன் என்னை ஒரு தடவை பார்த்தான்.
“நான் வாங்கிக் கொடுத்தத எல்லாம் எதுக்காக நீ என்னோட வாசப்படியில கொண்டு வந்து வச்ச?”
பதில் இல்லை. கட்டாயப்படுத்தி கேட்டபோது அவனுடைய முகம் சுருங்கியது. கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்தோடியது.
அவன் சொன்னான். “அம்மா சொன்னாங்க”
“என்ன சொன்னாங்க”
“நீங்க என்னோட அப்பா இல்லைன்னு”
“அதனால?” எனக்கு நீங்க வாங்கித் தந்த தொட்டிங்க வேணாம். டிரஸும் வேணாம். ஒன்னும் வேணாம். போங்க. நீங்க நானு மாமாவ விட கெட்ட ஆளு... மோசமான ஆளு.”
ஒரு நிமிடம் அவனைப் பார்த்தபடி நான் நின்றேன்.
அவனுடைய முகம் துடித்தது. நான் சொல்வது எதையும் கேட்கத் தயாராக இல்லாமல் அவன் வீட்டை நோக்கிப் போனான். அவனுடைய காலித் தொட்டிகளோடு நான் திரும்ப நடந்தேன்.
அதற்கு பிறகு பலதும் நடந்தன.
தற்கொலை செய்ய துணிந்த என்னுடைய கதையின் நாயகியை ஒரு குட்டி பெண் காப்பாற்றினாள். எப்படி முடிப்பது என்று தெரியாமல் நாவலை எழுதி முடித்தேன்.
அந்த அழகான ஊரை விட்டுப் புறப்பட்டேன்.