“ஹோ! என்ன ஒரு கூட்டம்? நிமிந்து நிக்கக்கூட முடியல” மேல் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு அசௌகரியத்தோடு நிற்கும் இளைஞன். கையில் கறுப்பு நிற ப்ரீஃப்கேஸ். நீண்டு நிமிர்ந்த உடலும் சுருட்டைத் தலைமுடியும். கறுப்பு நிற பேண்ட்ஸ். சாம்பல் நிற முழுக்கைச் சட்டை,. கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தான்.
நிராசையின் கார்மேகக்கூடு போல் இருந்த முக பாவம். நீலாம்பரன். அதுதான் அவனுடைய பெயர். பல வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு போனவன். இப்போதுதான் திரும்பி வருகிறான். வண்டி நிறைய காலேஜ் பெண்களின் கூட்டம். கண்டக்டர் விசில் அடித்தார். டிரைவர் ப்ரேக்கைப் பட்டென்று அழுத்தினார். ஆடி அலைந்து பஸ் நின்றது.
முன்னால் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணுடைய பிடரியின் மீது அவனுடைய உடல் மோதியது.
“உனக்கு கண் தெரியாதா?” அவள் சத்தம்போட்டாள்.
”திடீர்னு ப்ரேக் போட்டா அதுக்கு நான் என்ன செய்யறது?” அவன் பதில் சொன்னான்.
“உன்னோட எண்ணம் என்னன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. அத எங்கிட்ட வச்சுக்க வேணாம். ஒவ்வொன்னும் ஏறிக்கும். பாக்கறதுக்கு கொஞ்சம் லட்சணமா இருக்கற பொண்ணுங்களப் பாத்தவுடனே அப்படியே ஆடுவானுங்க” பின்னால் இருந்து காலேஜ் பெண்களின் கேலி கிண்டல் பேச்சுகள். “அக்கா தள்ளாதீங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ங்க” அந்தப் பெண் பேசுவதை நிறுத்தினாள். தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாகத் தலையை வெட்டி முன்பக்கம் போய் தள்ளி நின்றுகொண்டாள்.
பஸ் முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது. அடுத்த மூன்று நான்கு ஸ்டாப்புகளில் ஆட்கள் இறங்கினார்கள். நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சீட்டில் இரண்டு பேர் இறங்கிய போது அவன் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தான். “ஓ. நிம்மதியாப் போச்சு” உடம்பை கொஞ்சம் நிமிர்த்தி வைத்து பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்தான்.
பிறகு சீட்டில் சாய்ந்து கொண்டான். பஸ் கிராமப்புறப் பாதைகள் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. கிராமக் காட்சிகளைக் கண்ட அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்னோட கிராமம் என்னை மாதிரியே எவ்வளவு மாறிப் போயிருக்குது!”
எல்லா இடங்களிலும் கான்க்ரீட் அடுக்கு மாடி கட்டிடங்கள். மொபைல் டவர்கள். நெல் வயல்கள் அழிக்கப்பட்டு அங்கு எல்லாம் வணிக வளாகங்கள். வழியெங்கும் விற்பனை சாலைகள். சாராயக்கடைகளுக்கு முன் நீண்ட
வரிசைகளில் நிற்கும் ஆள் கூட்டம். அவன், தன் சிந்தனைகளைக் கடந்தக் காலத்தை நோக்கிச் செலுத்தினான்.
ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவன் அவன். இரண்டு தம்பிகள். நிரஞ்சன். கிச்சு. நிரஞ்சனை விட கிச்சுவின் மீதுதான் அதிக பாசம். அவனை நீலாம்பரன் “மகனே” என்றுதான் அழைத்தான். கூட விளையாட குதிரை
யானை சவாரி செய்ய அவந்தான் நல்ல தோழனாக இருந்தான். கிச்சுவும் எப்போதும் அவனோடுதான் விளையாடுவான். ஆனால், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிரஞ்சன் மீதுதான் அதிக அன்பு. அதற்குக் காரணம் நிரஞ்சன் ஒரு நோயாளியாக இருந்ததே. நீலாம்பரன் அப்பாவை ஒரு எதிரியை பார்ப்பது போலத்தான் பார்த்தான். அதற்குக் காரணம் எப்போது பார்த்தாலும் “படிக்கணும்... படிக்கணும்...” என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்ததுதான்.
“அதெப்படி முடியும்?”. எப்போதும் தன்னுடன் சண்டை போடும் அப்பாவை நீலாம்பரன் ஒரு போதும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அப்பா வேலையை முடித்துவிட்டு வரும்போது வாங்கிக் கொண்டு வரும் திண்பண்டப் பொட்டலங்களை வழியில் வைத்தே பிடுங்கி அதில் கொஞ்சம் எடுத்து கிச்சுவுக்கு மட்டும் கொடுத்துவிட்டு நிரஞ்சனுடைய முன்னால் போய் உட்கார்ந்து சாப்பிடுவான். அதைப் பார்த்து மௌனமாக கண்ணீர் விடும் நிரஞ்சனை வேடிக்கை பார்ப்பதில் அவனுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனை உபத்திரவம் செய்யவும் நீலாம்பரன் தயங்கவில்லை. அவன் அம்மாவிடம்தான் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். புகார்களைச் சொல்வான்.
“அப்பாக்கு என்னைப் பிடிக்காது. எப்பப் பாத்தாலும் என்கிட்ட சண்டை போடறாரு. ஒரு நாள் இங்கேர்ந்து எங்கயாச்சும் ஓடிப்போயிடப் போறேன். நிச்சயமா போயிடுவேன்”
“மகனே. நீலா. நீ படிக்காததுனாலதானே அப்பா உங்கிட்ட சண்டை போடறாரு. நல்ல பையனா நடந்துகிட்டு நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போ. அப்ப அப்பா உங்கிட்ட சண்டை போடமாட்டாரு” என்றாலும் அம்மாவுடைய அந்த ஆறுதலான வார்த்தைகள் எதுவும் அவனுடைய காதில் விழவில்லை. பரிகாசமும் சங்கடமும் கலந்த கடல் அலைகளைப் போல அவனுடைய மனது இருந்தது. “இவங்கிட்ட என்னத்த சொல்லி இவனை ஆறுதல்படுத்தறது?” என்ற கவலையோடு அம்மா அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “டேய் மகனே. அழாதடா. அம்மாவோட மூத்த பையன் நீதானேடா? அழாத” அலை அடங்கிய கடல் போல அப்போது அவனுடைய மனதுக்கு நிம்மதி ஏற்பட்டது. ப்ளஸ் டூவில் படிக்கும் சமயம். வழி தப்பிச் செல்லத் தூண்டும் கூட்டுகள். அவை அக்கிரமச் சுபாவங்களுக்கு ஆக்கம் கொடுத்தன.
படிக்காமல் தலைகுப்புறப் போய் விழும் தீய குணங்களுக்கு அடிமையாகி ரிசல்ட் வந்தபோது தோற்றுப்போனான்.
அப்பா பைத்தியம் பிடித்தவர் போல ஆனார். “உருப்படாத பயலே! குடும்பத்த அழிக்க வந்த பயலே! இந்த வீட்டுலேர்ந்து இப்பவே வெளிய போயிடு. இருக்கற ரெண்டு பசங்களையாச்சும் நல்ல படியா வளக்கணும்” அப்பாவை தள்ளிவிட்டுக் கொண்டு அவன் முற்றத்திற்கு இறங்கினான். “இனிம இந்த வீட்டு வாசப்படிய நான் மிதிக்கமாட்டேன்”
“ஹும். போடா. எங்கயாச்சும் போய்த்தொலைடா. இப்படி ஒரு பையனே எனக்கு இல்ல” அக்கம்பக்கத்துகாரர்களும் வீட்டில் இருந்தவர்களும் எல்லாரும் பார்த்துக் கொண்டேயிருக்க அவன் தெருவில் இறங்கி நடந்தான். பின்னால் இருந்து கிச்சு ஓடிவந்தான்.
“அண்ணா! நானும் வரேன். போகாத. போகாத”பின்னாலேயே அம்மாவுடைய குரல் காதில் முழங்கியது.
“நீலா. மகனே. போகாதடா” அவன் திரும்பிப் பார்த்தான். பிறகு தலையை வெடுக்கென்று வேகமாக திருப்பிக் கொண்டு முன்னோக்கி நடந்தான். லட்சியம் அறியாத ஒரு பயணம். பாம்பே என்ற மாநகரம். வேலை தேடி அலைபவர்களுடைய யுத்தபூமி. ஒரு வேலைக்காக கை ஏந்தாத இடமே இல்லை. வாரக்கணக்கில் அலைந்தான். திரிந்தான். பைத்தியக்காரன் போல ஆனான். இருக்க இடம் இல்லை. பசியை போக்க குழாய் தண்ணீரை குடித்தான். ஹோட்டல் வாசல்களில் எச்சில் இலைகளில் சோற்றுப் பருக்கைகளை தேடி அலைந்தான். கடைசியாக பாதாள உலகத்தவர் தெம்மாடிகளை போற்றி பாதுகாக்கும் தெருவுக்கு வந்துசேர்ந்தான். அங்கே பெயர் போன ரௌடியாக மாறினான். கூலி வேலை. அடிதடி. வெட்டு. குத்து. கடத்தல். கொலை. சகல மகா பாவங்களின் உலகம். அதர்ம செயல்களுக்கு கூட்டு நின்றுகொண்டு வருடங்கள் கடந்து போயின. ஒரு வெட்டுக்குத்து வழக்கில் ஜெயிலுக்குப் போனான்.
அப்போது நகரத்தில் பெயர் பெற்ற பாதாள உலக தலைவன் ஒருவர்ன் சேட் அவனை ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்தான். அப்பறம் அந்த சேட்டுக்குப் பாதுகாவலனாக மாறினான். வருடங்கள் கடந்து போயின. ஒரு சமயம் ரௌடிகளுக்கு நடுவில் நடந்த மோதலில் சேட் கொல்லப்பட்டான். நீலாம்பரன் உயிர்ப்பிணமாக தெருவில் கிடந்தான்.
நினைவு திரும்பியபோது ஒரு ஆசிரமத்தில். எழுந்து நடக்க மாதக்கணக்கானது. அங்கே கிடைத்த பரிவு. மிகுந்த உபசரிப்புகள். கவனிப்புகள். அக்கறை. அறிவுரைகள். போதனைகளும் பிரார்த்தனையும் எல்லாம் சேர்ந்து அவனை ஒரு புதிய மனிதனாக்கியது. தீய குணங்கள் எல்லாம் அகன்றன.
அன்பின் ஊற்று எங்கிருக்கிறது என்ற பகுத்தறிவு ஏற்பட்டது. “ஊருக்கு திரும்பிப் போக வேண்டும். அப்பாவுடைய பாதங்களை தொட்டு வணங்கி செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அம்மாவுடய மடியில் தலை சாய்த்து உறங்கவேண்டும். இனிமேலாவது ஒரு மனிதனாக வாழவேண்டும்”
பஸ்ஸில் ப்ரேக் அழுத்தப்பட்டது. ஆடி அசைந்து பஸ் நின்றது. கண்டக்டர் கேட்டார். “நாலு முக்கு இறங்கணுமா?” எண்ணங்களில் இருந்து விழித்துக் கொண்டு ப்ரீஃப் கேஸுமாக எழுந்திருந்தான். “இறங்கணும்” சொல்லியபடி பஸ்ஸின் படிகளில் மெல்ல இறங்கினான். வீட்டை நோக்கி நடந்தான்.
அங்கே நூற்றாண்டுகளின் சரித்திரம் உறங்கும் மாமரம். எலக்ட்ரிக் கட்டர்களின் பற்கள் போல அந்த மரம் வெட்டி மாற்றப்பட்டிருந்தது. அதன் பொந்தில் இருந்து ஒரு அணில் குஞ்சு கத்திக்கொண்டு அம்மாவைத் தேடியது.
ஒரு காக்கா கொத்த தைரியம் இல்லாமல் போக அந்த அணில் குஞ்சை ஒரு பையன் பிடித்துக்கொண்டு போகிறான்.
தன்னுடைய வீட்டுக்கு போகவேண்டிய வளைந்த வழியில் திரும்பி நடக்கும்போது அவனுடைய மனது துடிதுடித்தது. “கிச்சுவும் நிரஞ்சனும் வளந்து பெரியவங்களா ஆயிருப்பாங்க. அம்மாக்கும் அப்பாக்கும் வயசாகியிருக்கும். என்னைப் பாக்கறப்ப அவங்க எப்படி நடந்துப்பாங்க?”. வழியில் பலரும் அவனை பார்த்தார்கள்.
முன் பின் பழக்கமில்லாதவன் போல அவன் மெல்ல நடந்து நடுங்கும் கால்களுடன் வீட்டின் முற்றத்தை அடைந்தான். புற்கள் மண்டிக்கிடந்தன. பாசி பிடித்திருந்தது. குப்பைக்கூளங்கள் குவிந்திருந்தன. சுவரில் விரிசல்கள். வீட்டின் வாசற்ப்படிகள் தொட்டால் உடைந்துவிடும் போலிருந்தது. பழையதாகப் போன வாளி. கிணற்றின் நுனியில் எப்போது வேண்டுமானாலும் அறுந்துபோகும் நிலையில் கயிறு. பாத்ரூம் கதவு சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
“என்னுடைய வீடு வாழ்க்கையை கை நழுவி விட்ட கோலத்தில்!”. அவன் வழுக்கிய முற்றத்தின் வழியாக மெல்ல நடந்து வீட்டின் உட்புறம் கால் வைத்தான். வயதாகிவிட்ட கோலத்தில் வீட்டின் உட்புறம் அலட்சியமாக சிதறிக் கிடக்கும் வீட்டு சாமான்கள். ஹாலின் இடது மூலையில் நாற்காலியில் தாடி வளர்த்து காய்ந்து போயிருந்த முதுமையடைந்த ஒரு இளமைக்கோலம். காலடி சத்தம் கேட்டு தாடியில் இருந்து கை விரல்களை எடுத்துவிட்டு அந்த உருவம் நீலாம்பரனை பார்த்தது. மெலிந்து உலர்ந்த... குழிந்து போன கண்கள். பளபளத்தன. உதடுகள் மெல்ல மந்திரித்தன. “அண்ணா!”.
நீலாம்பரன் மெல்ல நடந்தான். நிரஞ்சனுக்கு பக்கத்தில் போனான். “நிரஞ்சன்!”. பாசத்தோடு அவன் தலையை வருடிவிட்டான். அவனுடைய கண்கள் நிரம்பி வழிந்தது. நீலாம்பரனுடைய கண்கள் நான்கு பக்கமும் தேடி அலைந்தன. கிச்சுவையும் அம்மாவையும் தேடின. நீலாம்பரனுடைய உதடுகள் மெல்ல அசைந்தன.
“கிச்சு”. “அண்ணா. நீ போன நாள்லேர்ந்து ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுது. சாப்பிடாம பிடிவாதம் பிடிச்சான். அவனுடைய வியாதி மோசமாச்சு. நடு நடுவுல பிதற்றினான். உண்ண்னை பாக்கணும்னு புலம்பிகிட்டே இருந்தான். பத்தாம் நாளு... நம்மளோட கிச்சு...”. வார்த்தைகளை முடிக்க முடியாமல் நிரஞ்சன் விம்மிவிம்மி அழுதான்.
“பின்னாலேயே அம்மாவும்”சுவரை பார்த்தான். பூமாலை போட்டிருந்த இரண்டு போட்டோக்கள் அவனை பார்த்து சிரித்தன. நீலாம்பரனால் அழக்கூட முடியவில்லை. “என்னால என்னோட கிச்சுவும் அம்மாவும்...”. குரல் இடறியது. உள்ளே இருந்து தளர்ந்து போன ஒரு குரல். “யாருப்பா?”. “அண்ணன்”. நிரஞ்சன் பதில் சொன்னான். நீலாம்பரன் மெல்ல நடந்து உள்ளே போனான்.
துருப்பிடித்து உடைந்து விழத் தயாராக இருக்கும் இரும்புக் கட்டிலோடு ஒட்டிக்கிடக்கும் ஒரு வயோதிக உருவம். நீலாம்பரன் மெல்ல அந்த பாதங்கள் இருந்த திசையை நோக்கி நடந்தான். குனிந்து கைகளை பாதங்களில் வைத்தான். முகத்தை புதைத்துக்கொண்டான். கண்ணீரால் பாதங்களை கழுவினான். தொட்டு வணங்கினான்.
”அப்பா! மன்னிச்சுக்கங்க!”. “நீ வந்துட்ட இல்லயா? அதுவே மனசுக்கு நிம்மதியா இருக்குப்பா”. கிழக்கில் இருந்து ஒரு காற்று ஜன்னல் கதவுகள் வழியாக உள்ளே நுழைந்து தலை வருடிவிட்டு திரும்பிப் போனது. அப்பா கட்டிலில் அசைவற்று கிடந்தார்! அவனுக்கு முன்னால் எல்லாம் தலைகீழாக சுற்றின.
நீலாம்பரன் நிரஞ்சனை கட்டிப் பிடித்துக்கொண்டான். “இனிம இந்த உலகத்துல சொந்தம்னு சொல்லிக்க இவன் மட்டும்தான். என்னோட ஒரே ஒரு தம்பி. கண்ணுக்கு கண்ணான தம்பி! நிரஞ்சன்!”
அந்த அழகான ஊரை விட்டுப் புறப்பட்டேன்.