அவன் ஒரு கண்டிப்பான பேர்வழி. பிசுக்கனும் கூட. அவன் குடும்பத்தோடு வாழாமல் போகுமிடங்களுக்கு எல்லாம் தனியாக இருக்கக் காரணம் அவனுடைய சுபாவத்தில் இருந்த இந்த பண்புதான். வேலை பார்க்கும் இடங்கள் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும். அங்கெல்லாம் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டுச் சாமான்களையும் வாரி எடுத்துக் கொண்டு போவது பெரிய கஷ்டம்.
காசுக்கு பெரிய நஷ்டமும்கூட. கண்டதையும் தின்று அலைந்து ஒன்றையும் செய்ய முடியாத வயதான காலத்தில் தளர்ந்து போய் வீட்டுக்குள் நுழையும் போது சூன்யமாக இருக்கும். அப்படி இப்படி கொஞ்சநஞ்ச கஷ்டங்களைச் சகிக்கலாம். வீட்டுக்காரர்கள் வீட்டில் இருக்கட்டும்.
அவன் அவ்வப்போது வீட்டுக்குப் போய் விஷயங்களை தெரிந்து கொள்வான். அப்படியே இல்லாவிட்டாலும் அங்கே காரியங்கள் எல்லாம் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நன்றாக நடக்கும். அதற்கு ஒரு காரணம் அவனுடைய மனைவி. புத்திசாலி.
குடும்பத்தை மட்டும் இல்லை. புருஷனையும் வழி நடத்தும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு. அவளுடைய யோசனையின்படி இன்ஸ்பெக்டருக்கு வேலை செய்து கொடுக்க ஒரு ஆளும் இருந்தான். அவன்தான் சமையல்காரன். இன்ஸ்பெக்டர் கஞ்சன் என்றாலும் அவனுக்குச் சாப்பாடு போட எப்போதும் தயங்கியதில்லை.
ஒருவனுக்குச் சாப்பாடு போட்டால், தன்னுடைய சாப்பாடு தடங்கலில்லாமல் நடக்கும். கஞ்சத்தனம் உள்ள ஒருத்தனுக்கு இது ஒரு பெரிய விஷயம்தானே? சமைப்பதில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஒரு தேவை ஏற்பட்டதால் அந்த ஆள் சமைத்துக் கொடுத்தான்.
அவ்வளவுதான். ஆபீஸின் பின்பக்கம்தான் இன்ஸ்பெக்டருடைய வீடு. பகல் நேரத்தில் ஆள் நடமாட்டத்துடன் இருக்கும். ராத்திரியானால் மௌன நித்திரையில் ஆழ்ந்துவிடும். பைல்களை பார்த்தபடி இன்ஸ்பெக்டர் ராத்திரியை செலவழித்துக் கொண்டிருக்கும் போது வேலைக்காரன் சுகமாகத் தூங்குவான்.
நேரம் தவறாமல் சரியான நேரத்துக்கு எல்லாவற்றையும் செய்ய விரும்பும் இன்ஸ்பெக்டருடைய வாட்ச் அடிக்கடி ஓடாமல் நின்று போய்விடும். அதைத் தட்டிமுட்டி குலுக்கி, புது ஜீவன் கொடுத்தால் அப்புறம் கொஞ்ச நேரம் ஓடும். இதனால் குழப்பம் இல்லை. ஆபீஸில் இருந்த கடிகாரம் நிமிட விநாடிகள் துல்லியமாக ஓடும்.
இன்ஸ்பெக்டர் வேலைக்காரனிடம் சொன்னான். “நாளைக்குக் காலையிலேயேச் சீக்கிரம் எழுந்திருக்கணும். வடக்கேப் போற பஸ்ஸுல சர்க்யூட்டுக்கு போகணும்” வேலைக்காரனுக்கு அது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. எட்டு மணிக்குதான் பஸ் வரும். அதற்கு முன்பு கொஞ்சமாக கஞ்சி வைத்தால் போதும்.
நேரமானால் கூட பஸ்காரன் காத்துக் கொண்டிருப்பான். அது போல முன்பும் நடந்திருக்கிறது. பயணம் செய்பவர்கள் முன்பேச் சொல்லிவிட்டால் பஸ் வீட்டுக்கே வந்து ஏற்றிக் கொண்டு போகவும், ஒரு ஆள் வரப்போவதாகத் தெரிந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்துக் கிடக்கும் காலம் அது. சாதாரணக்காரர்கள் யாரும் பஸ்ஸில் ஏறாத அந்தக் காலத்தில் பெரும்பாலான சமயங்களிலும் இன்ஸ்பெக்டர் பஸ்ஸில்தான் பயணம் செய்வார்.
அடுத்த நாள். வேலைக்காரன் தூங்கி எழுந்தவுடனேயேக் கடிகாரத்தை பார்த்தான். தவறு நடந்துவிட்டது. அதைச் சரி செய்ய ஒரு தயக்கமும் இல்லை. கடிகாரத்தை லேசாக மெதுவாக ஓடும்படி வைத்தான். பிறகு சமையலறையில் நுழைந்தான். வேலையை ஆரம்பித்தான். இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து ஒவ்வொரு காரியமாகச் செய்து கொண்டிருந்தான்.
கடைசியாக சவரம் செய்ய ஆரம்பித்தான். கத்தி சரியாக வேலை செய்யவில்லை. கண்ணாடியைப் பார்த்தான். முகம் முழுவதும் எரிய ஆரம்பித்தது. வேலை நடக்கவில்லை. “இதென்ன தண்ணி? முகத்துல வைக்கக் கூட முடியலயே? இத ஊத்திட்டு வேற தண்ணி எடுத்துக்கிட்டு வா”. அவசரத்தில் முதலில் கொண்டு வந்து வைத்த தண்ணீர் மிளகை அரைத்து வைத்து மிச்சம் இருந்தது என்று அப்போதுதான் வேலைக்காரனுக்கு புரிந்தது.
புதிதாகத் தண்ணீரை கொண்டு வந்து வைத்த போது அவன் வேலைக்காரனுடைய முகத்தைப் பலவீனமாகப் பார்த்தான். “கொஞ்சம் உதவி செய்” என்று கேட்கத் தோன்றவில்லை. அவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு சவரம் செய்வதைத் தொடர்ந்தான். வேலைக்காரன் சிலேட்டைக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டரிடம் சொன்னான்.
“இதுல வச்சு கத்திய தேய்க்கட்டுமா?”
“அப்படி செஞ்சா இருக்கறதும் போயிடும்”
வேலைக்காரன் வெளியில் போய் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
இன்ஸ்பெக்டர் எழுந்திருப்பதற்கு முன்பேத் தானும் அந்தக் கத்தியை பயன்படுத்தியதுதான் இதெல்லாவற்றுக்கும் காரணம் என்று வேலைக்காரனுக்கு அப்போது புரிந்தது.
அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தூரத்தில் இருந்து பஸ் வருவதைப் பார்த்தான். கையைக் காட்டி அதை நிறுத்தினான். “இன்ஸ்பெக்டரும் வராரு” சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குள் வந்தான்.
“பஸ் வந்துவிட்டது” என்று சொல்லும் முன்பே இன்ஸ்பெக்டர் ஹாரன் சத்தத்தைக் கேட்டார்.
“பஸ் இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமாவே வந்துடுச்சா?. ஏழு மணிதானே ஆகுது?” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைத் துடைத்தான். கண்களில் தண்ணீரை வாரி இறைத்து இரத்தக் காயங்களைத் துடைத்தான். சிறிது நேரத்தில் அவன் சவரம் செய்யும் வேலையை ஒரு வழியாக முடித்தான். பஸ்ஸில் இருந்த பயணிகள் கண்டக்டரைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
மீண்டும் மீண்டும் ஹாரன் முழங்கியது. தீ பறக்கும் கஞ்சியைக் குடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது வேலைக்காரன் வயிற்றை நிறைத்துக் கொண்டு விட்டான். அவன் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கொதிக்க கொதிக்க இருந்த கஞ்சியைக் குடிக்க முடியாமல் இன்ஸ்பெக்டர் அவதிப்படுவதை பார்த்த போதும் கூட அவன் அசைந்து கொடுக்கவில்லை. அப்புறம் ஹாரன் சத்தம். “நீ போய் சொல்லு. இதோ வரேன்னு”
வேலைக்காரன் போய்ச் சொன்னான். “எஜமான் உடுப்பு போட்டுகிட்டு இருக்காரு. இதோ வராரு”
“எந்த எஜமானன்?” ஒரு பயணி கேட்டான்.
ஒரு கசாப்புக் கடைக்காரன் போல அவன் இருந்தான்.
“இன்ஸ்பெக்டர் எஜமானன்” கொஞ்ச நேரம் பயணிகள் அடங்கியிருந்தார்கள்.
கண்டக்டர் வாசல் முற்றத்திற்கு வந்து நின்று கொண்டான்.
வேலைக்காரன் தயாராக நின்றான்.
இன்ஸ்பெக்டர் பாத்திரத்திற்கு முன்னால் இருந்து நெருப்பு போல கொதித்துக் கொண்டிருந்த கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தான்.
டிரைவர் ஹாரன் அடிப்பதைத் தொடர்ந்தார். வடக்கேப் போவதற்கு அந்த ஒரே ஒரு பஸ் மட்டுமே. அது போய்விட்டால் இன்ஸ்பெக்டர் பதினோரு மைல் நடக்க வேண்டும். அப்போதுதான் அவரால் ஆய்வுக்கு போகும் ஸ்கூலுக்கு போக முடியும். பஸ்ஸில் போனால் கூட திரும்பவும் மூன்று மைல் தூரம் ஸ்கூலை நோக்கி நடக்க வேண்டும்.
திரும்பி வரும்போது வழியில் தயாராகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் வெகுதூரம் நடக்க வேண்டும். கஞ்சி குடிக்காமல் போனால் எவ்வளவு கஷ்டம் வரும்? போகிற கிராமத்தில் ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழி கிடையாது. வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான் சாப்பிடவே முடியும்.
பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கு யார் சாப்பாடு வாங்கித் தருவார்கள்? பலருக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் கூட, வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். நல்ல சம்பளம் வாங்கும் அவனுக்குச் சாப்பாட்டை இலவசமாக கொடுக்க யாருக்கும் மனது வராது. அதனால் அவன் எப்படியாவது கொஞ்சம் கஞ்சியையாவது குடித்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும்.
பஸ்காரர்கள் அவசரப்படுத்தினாலும் தான் இல்லாமல் அவர்கள் போக மாட்டார்கள். ஒருவரைக் கூட விட்டுவிட்டுப் போவதில்லை. அதிலும் குறிப்பாக, ஒரு வழக்கமான பயணியை. கடைசியில் அவன் ஒரு சிரிப்பை உதிர்த்தபடியே பஸ் அருகில் சென்றான். டிரைவருக்கு அருகில் இருந்த பயணியைப் பின்னால் அனுப்பிவிட்டு அவனை அங்கே உட்காரச் செய்த டிரைவரிடம் அவன் கேட்டான்.
“இன்னிக்கு என்ன ரொம்ப சீக்கிரமாவே வந்துட்டீங்க?”
“இல்ல. இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இப்ப மணி எட்டரையாயிடுச்சு”
“எட்டரையா!” கடிகாரத்தைப் பார்த்த போது எட்டு ஆகவே ஐந்து நிமிடம் இருந்ததே!”
கசாப்புகாரன் போல இருந்தவன் சொன்னான். “நான் நினைச்சேன் இவரு போலீஸ் இன்ச்பெக்டர்னு”
யாரும் எதுவும் சொல்லவில்லை. வண்டி ஓட ஆரம்பித்தது.
“போக வேண்டியவங்க எல்லாரும் காத்துகிட்டிருந்தாங்க”
அப்படிப்பட்டவங்களுக்காகவாச்சும் பஸ்ஸைச் சீக்கிரமா எடுக்கணும் இல்லயா?” அவன் முணுமுணுத்தான்.
“இது வெள்ளக்காரன் கம்பெனி பிசினெஸ் மாதிரியாக்கும். ஒரு ஒழுங்கும் கிடையாது”
ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு அவன் சொன்னான். “அங்க ரெண்டு சாக்கு ஏத்தறதுக்கு அரை நாழிகை ஆச்சு. இங்கயோ ஒரு நாழிகை. எப்போக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு ஏதாச்சும் இருந்தாத்தானே?” அவனுக்குப் பக்கத்தில் இருந்த ஒருத்தன் மற்றவனிடம் கேட்டான். “பீடி குடிக்கறீங்களா?”
“வேணாம்”. முகத்துல புகைய வீசாம இருந்தா சரி”
தீப்பொறி பறந்து யாரோட வேட்டியிலாச்சும் விழுந்துடப் போகுது?”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். வண்டி ஓடுதா இல்ல அசையுதா? டிரைவருக்கு என்ன இப்படி ஒரு பயம்? வண்டி ஓட்டத் தெரியாத ஆள். முன்னால் அப்புக்குட்டன்னு ஒருத்தரு இருந்தாரு. அந்த ஆள் வண்டியில ஏறினா வண்டிக்கு அது நல்லாத் தெரியும்”
ஒரு பயணி குடையைக் காட்டி வண்டியை நிறுத்தி அதில் ஏறினான். “எத்தன ஆள் ஏறினாலும் உனக்கு திருப்தி கிடையாதே?”. புகார் சொல்லிக் கொண்டிருந்தவன் மறுபடியும் ஆரம்பித்தான். “வண்டியில ஏர்றவங்களோட அவசியம் என்னன்னு இவங்களுக்குப் புரியவே புரியாது” கண்டக்டர் சொன்னான்.
“வண்டியில ஏர்றவங்களுக்கு ஏர்றவங்களோட அவசியத்தயும் புரிஞ்சுக்கத் தெரியணும். அவசியம் இருக்கறவங்களா இருந்தாக் காத்துகிட்டுதான் இருக்கணும்.
“மத்தவங்க எல்லாம் என்ன செய்வாங்க?”
“சட்டியில கொதிக்கற எண்ணை மாதிரி ரொம்பதான் பேசாத. கொஞ்ச நேரம் சும்மா இரு” கண்டக்டர் சொன்னான்.
“என்னோட காரியத்த பத்தி நான் சொல்லாம வேற யாரு சொல்லுவாங்க? காசு கொடுத்துதானே உக்காந்துகிட்டு இருக்கேன்? அதுவும் நீ கேட்ட காசு” மற்றொருவன் கேட்டான். “நாங்க எல்லாம் கேட்ட காச கொடுக்காதவங்களா? ஓசியிலயா வரோம்?”
“அது எப்படி எனக்குத் தெரியும்?. எனக்கு தோணிச்சு நீங்க காசு கொடுத்துதான் ஏறியிருப்பீங்கன்னு. ஆனா இந்த பஸ்காரங்களுக்கு வக்காளத்து வாங்கிட்டுப் பேச வராதீங்க”
“ஓ. சங்கதி அப்படி போகுதா?” ஒரு ஆள் சொன்னான். “இப்பவே மணி ஒம்பதாயிடுச்சு. இனி இப்ப மூவாத்துப்புழைக்கு எப்பப் போகும்?”
“அதெல்லாம் சொல்ல முடியாது. இது மிஷின். சில சமயம் தாமதமாக்கூட ஆகலாம்” சொல்லிவிட்டு டிரைவர் ஒரு மர நிழலில் வண்டியை நிறுத்தினான்.
கீழே இறங்கினான். “என்ன!” கண்டக்டரும் கீழே இறங்கினான்.
“இத கொஞ்சம் பிடி. என்னவோ பெரிசா ஒரு சத்தம். எங்கேன்னு பாக்கறேன்”
“அடக்கடவுளே!” சொல்லியபடி முணுமுணுப்புகாரன் கீழே இறங்கினான்.
“ரொம்ப பெரிய ரிப்பேர் இல்லைன்னா இங்க வச்சு எதுவும் செய்ய வேணாம். வேணும்னா நாங்களும் தள்ளறோம். அப்படின்னா சீக்கிரமாவே போய்ச்சேரலாம்”.
“நீங்க சக்கரத்த கையில பிடிச்சுகிட்டு தள்ளுவீங்களா?”. ஆங்காங்கே சில பரிசோதனைகள். எல்லாரும் தண்ணீர் குடித்தார்கள். டீ விற்பனையும் நடந்தது. பீடிகளும் எரிந்தன. புலம்பிக் கொண்டிருந்த பயணி அதையும் இதையும் சொல்லும் போது இன்ஸ்பெக்டருடைய நெஞ்சில் ஒவ்வொரு வார்த்தையும் குத்துவது போல இருந்தது.
“பதினோரு மணிக்கு மூவாத்துப்புழை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுல ஆஜராகணும். இந்தப் பாழாப் போன வண்டியில ஏறினதுனால அது நடக்காது. நேரத்துக்கு போகலைன்னா என்னோட ஜாமீன ரத்து செஞ்சுடுவாங்க. அப்புறம் நான் ஜெயில்ல கிடக்க வேண்டியதுதான். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நேத்திக்கேப் போயிருப்பேனே!.
இனிமயாச்சும் பஸ்ஸக் கொஞ்சம் ஓட்டறீங்களா?”
ஓ! இல்லாம. நாங்க இங்கயே கிடக்கப் போறோமா?” கண்டக்டர் சொன்னான்.
இன்ஸ்பெக்டருக்கு தான் தப்பு செய்துவிட்டது போல ஒரு உணர்வு. அவனுடைய வேலைக்காரனுக்கு மனசாட்சியும் இல்லை. அவன் முந்தின நாள் ராத்திரி கதக்களி பார்க்க போனதுதான் இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் காரணம் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு இன்ஸ்பெக்டருக்கு அறிவும் இல்லை.
இது போதாதென்று அவன் கடிகாரத்தையும் திருப்பி வைத்து மெதுவாக ஓடும்படி செய்துவிட்டான். வழியில் கை காட்டியவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு இறக்க வேண்டியவர்கள் எல்லோரையும் இறக்கி விட்டு அலட்சியமாக பஸ் ஓடிக் கொண்டிருந்தது. கேஸ்காரன் பஸ் முதலாளியையும் தொழிலாளிகளையும் சபித்துக் கொண்டிருந்தான்.
இந்த கூட்டத்தில் அந்த பஸில் எதுவுமே பேசாமல் இருந்த பயணிகளின் முகங்களிலும் அவன் பீடியைப் பற்ற வைத்து புகையை வீசி வீசிச் சபித்தான்.
“உங்களோட கேஸ் என்ன?” ஒருவன் கேட்டான்.
“நீ யாரு அதக் கேக்கறதுக்கு? மாஜிஸ்ட்ரேட்டா?”
“ஆமாமாம். கோர்ட்டுக்கு போனவுடனேயே இந்த ஆளோட கேஸதான் முதல்ல எடுக்கப் போறாங்களாக்கும்”
“ஆமாம். கொஞ்சம் லேட்டா போனாத்தான் என்னவாம் இப்ப?” இன்னொருத்தன் சொன்னான்.
வேலைக்காரன் கேஸ்காரனுக்கு பக்கத்தில் போனான்.
அவனை சுட்டிக்காட்டிக் கொண்டு கேஸ்காரன் சொன்னான். “உன்னாலதான் எல்லாம். நீதான் என் எதிரி. உனக்கு கேஸ்க்கு போகணுமா என்ன? நான் போகணும். இல்லாட்டி நான் யாருன்னு இப்பவே உனக்கு காட்டித்தருவேன்”
“நான் என்ன செஞ்சேன்?” வேலைக்காரன் சொன்னான்.
“எட்டு மணிக்கு முன்னாலயே நாங்க வந்துட்டோம். எங்களோட கடிகாரம் ஒன்னும் ஓட்டை கடிகாரம் இல்ல. முதல் தரமான அரசாங்கத்து கடிகாரமாக்கும்” இன்ஸ்பெக்டருக்கு பேச்சு நின்று போய்விடும் போலிருந்தது. அங்கே தன்னை யார் கவனித்தாலும் அவர்கள் எல்லோரும் தன்னைப் பழி சொல்வார்கள் என்று தோன்றியது.
கடைசியில் அவன் இறங்க வேண்டிய இடம் வந்தது. “எப்படியாச்சும் முயற்சி செஞ்சு பதினோரு மணிக்கு முன்னால அந்த ஆள மூவாத்துப்புழைக்குக் கொண்டுபோய் விட்டுடணும்” என்று அவன் டிரைவரிடம் விண்ணப்பித்தான்.
“அந்த ஆள் பேசாமல் இருந்தா அப்படி செஞ்சுடலாம்” கேஸ்காரன் ஒத்துக்கொண்டான்.
இன்ஸ்பெக்டர் கீழே இறங்கி வேகமாக நடந்தான்.
வண்டி திரும்பி வரும்போது பள்ளிக்கூட ஆய்வை முடித்துக் கொண்டு அவனும் திரும்ப வந்துவிட வேண்டும். ஸ்கூலுக்கு போய்ச் சேர்ந்த போது மணி பத்து. ஸ்கூல் வேலைகள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. ஒருவேளை இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார் என்பதைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டுத்தான் ஸ்கூல் வேலைகளை ஆரம்பித்திருப்பார்கள்.
இன்ஸ்பெக்டர் கைக்கடிகாரத்தைப் பார்த்த போது பத்தே கால் ஆகியிருந்தது.
“ஹெட் மாஸ்ட்டர் அப்போதும் வந்து சேரவில்லை. மேசைக்கடிகாரமும் வருகைப் பதிவேடும் மேசைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.
எல்லாரும் பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆய்வும் தொடங்கியது.
பதினைந்து நிமிடம் கழிந்த போது ஹெட் மாஸ்ட்டர் வந்தார். பெல் அடித்தது. வழக்கம் போல குழந்தைகள் கை கூப்பிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.
“காருண்யவானே தேவதேவா...” இறை வழிபாட்டு பாடல் பாடப்பட்டது.
அது முடிந்த போது இன்ஸ்பெக்டர் கேட்டான். “என்ன ஹெட்மாஸ்டர் இது? இறைவழிபாடுதானே முதல்ல நடக்கணும்?. இப்ப மணி என்ன ஆச்சு?.
“பத்து மணியாக பதினைஞ்சு நிமிஷம் இருக்கு”
“ஆமாமாம். இது டிப்பார்ட்மெண்ட்ட்லேந்து கொடுத்திருக்கற கடிகாரம்” இன்ஸ்பெக்டர் கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான்.
அரை மணி நேர வித்தியாசம். பஸ்காரன் அவனுடைய கைக்கடிகாரம் மெதுவாக ஓடுது என்று சொன்னான். ஹெட்மாஸ்ட்டரும் சொல்கிறார்.
அவனுக்குப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
ஆய்வுகள் தீவிரமாக நடந்தன. களைத்துப் போய்விட்டது. “ஒரு காபி கிடச்சா குடிக்கலாம்” நினைத்தான்.
வேலைக்காரனோ அதற்கு எந்த சிறிய முயற்சியையும் எடுப்பதாகத் தோன்றவில்லை. எதுவும் நடக்கவில்லை. கடைசியாக அவனுக்கு ஒரு இளநீர் மட்டும் கிடைத்தது. வேலைக்காரனுக்கு பன்னும் கருப்பு காபியும்.
அவன் கிளம்பினான். நடந்தான். ஓடினான் என்றுதான் சொல்லவேண்டும். மூன்று மைல். அவனுக்குப் பசி. சோர்வு. எப்படியாவது பஸ்ஸை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே ஓட்டம். மனதில் நிம்மதி இல்லை. “இன்னிக்கு எல்லாம் தப்புத் தப்பாதான் நடக்குது. இது போதாதென்று பஸ்ஸும் கிடைக்காமப் போச்சுன்னா?” அப்படிதான் நடந்தது.
அவன் சாலைக்கு வந்த போதே பஸ் போய்விட்டது. தலை சுற்றியது. அதற்கு அப்புறமும் எட்டு மைல். நடக்காமல் என்ன செய்ய? இனி மேல் நாளை காலையில்தான் அடுத்த பஸ் வரும். “ஓ. ஒரு சமாதானம் உண்டு. எப்படியாச்சும் ஒரு வருஷத்த ஓட்டிட்டா பென்சன் வாங்கிகிட்டு வீட்டுல சுகமா இருக்கலாம் இல்லயா?”
ஆபீசிற்குள் நுழைந்தான். நாற்காலியில் உட்கார்ந்து பைல்களைப் புரட்டினான். ஆய்வறிக்கையைத் தயார் செய்தான்.
அதில் கடைசியாக எழுதினான். “ஸ்கூலுக்கு தாமதமாக வந்த ஹெட் மாஸ்ட்டருக்கு எட்டனா அபராதம் விதிக்கப்படுகிறது...”