திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழிப் பாடல் இது;
“மந்திரம்தான் பொய்யானால், பாம்பைப் பாரு...
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு...
சாஸ்திரம் பொய்யானால் கிரகணம் பாரு...
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு...”
இந்தப் பாடலுக்கான விளக்கம் தெரியுமா?
மந்திரம்தான் பொய்யானால், பாம்பைப் பாரு...
மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்துப் பார்த்துச் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்லத் தெரிந்தவரைச் சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று பார்க்கலாம்.
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு...
வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து, அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்களாக்கிக் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியைத் தெரிந்து கொள்ள வாணவேடிக்கையைப் பாருங்கள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு...
சோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே பௌர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதைக் கிரகணம் குறித்துப் பஞ்சாங்கம் சொல்லியுள்ளதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு...
கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தைப் பிறகு, தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று வழிபட்ட அந்தச் சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதைச் சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவாக்கி வழிபட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் நுழைவதில்லை. இதிலிருந்து, கடவுள் இருப்பதைப் பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்தப் பாடலின் பொருள்