இணையத்தால் இணைந்தோம்!
பரந்து விரிந்த உலகினிலே
எங்கோ என்றோ ஏற்பட்ட சொந்தமது
என்னிளம் வயது பந்தமது
எங்கும் தேடிக் கிடைக்கவில்லை
என்மனதை யாரும் அறியவில்லை
இணையம் வந்து பார்த்ததிலே
இணைந்தது பழைய சொந்தமது
இனியென்றும் பிரியா பந்தமது
இளவயது நினைவது நெஞ்சோரம்
இனித்திடும் கண்ணீர் விழியோரம்
இணைத்தது இணையம் எம்மையே
இனியெமக்கு எல்லாம் நன்மையே...!
அருந்தமிழ் கவியெழுதும்
ஆற்றலை அன்னைத் தமிழ்
இனிதே உமக்கு தந்திட்டாள்
ஈடில்லா அவள் புகழை
உள்ளத்தில் தோன்றியவண்ணம்
ஊரறிய பரப்பிடுவீரே...!
எண்ணக் கவியால் தமிழதை
ஏற்றம்பெற வைப்பீரே...!
ஐயம் தீர்க்க ஐயன் வேழமுண்டு
ஒருவார்த்தை தமிழ்த்திருவார்த்தை
ஓராயிரம் பொருள் தந்திடுமே...!
ஔவையவள் புகழ்போல் உம்புகழோங்கிடுமே...!!
அஃதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லையே!
- விஜயகுமார் வேல்முருகன்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.