வெடியில்லாத் தீபாவளி
வெடிப்பதனால் பெறுவதென்ன! வெடிக்கும் சத்தம்
வேட்டுவைத்துக் காதுகளைச் செவிடாய் ஆக்கும்
வெடிகளினால் பணமெல்லாம் கரியாய்த் தீய்ந்து
வெற்றாரவாரத்தால் பலன்தான் உண்டோ
வெடிகளினைச் செய்கின்ற சிறுவரெல்லாம்
வேகின்றார் கந்தகத்தில் கல்வி தொலைத்தே
வெடிகளினைச் செயும்போதும் வெடிக்கும் போதும்
வேதனைதான் உயிர்பலியால் வேறென் கண்டோம்!
வெடிகளினை வாங்குகின்ற பணத்தைக் கொண்டு
வேறுநல்ல பணிகளினைச் செய்யலாமே
படிப்பதற்கு வசதியற்ற ஏழையர்க்கும்
பசியாலே துடிக்கின்ற ஏழையர்க்கும்
உடுப்பதற்குத் துணியில்லா ஏழையர்க்கும்
உறவில்லா அனாதையான குழந்தைகட்கும்
முடிந்தளவு அப்பணத்தைக் கொடுக்கலாமே
முன்னேற அவர்களுக்கு உதவலாமே!
வீட்டினிலே தீபமேற்றி விரிந்த நெஞ்சால்
வீதியெல்லாம் மதம்மறந்து கைகள் கோர்ப்போம்
ஏட்டினிலே இருக்கின்ற மனித நேயம்
ஏந்திகையில் சாதிவிட்டே அணைப்போம் ஒன்றாய்
வேட்டுவைப்போம் மனத்தினிலே தீமைகட்கு
வேதனையில் பங்குகொண்டு மகிழ்வோம் சேர்ந்து
கூட்டாகத் தீபாவளித் திருநாள் தன்னைக்
குதுகலமாய் கொண்டாடி இன்பம் துய்ப்போம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.