நம்பிக்கை துரோகம்
எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்ற வர்கள்
என்னுறவை; தோழியரைத் துறந்து விட்டே
உங்களையே என்னுடையத் துணையாய்க் கொண்டே
உங்களின்பத் துன்பத்தை எனதாய் ஏற்றேன்!
மங்கலமாய் மருமகளாய் உங்கள் வீட்டை
மாண்புகாக்கும் விளக்காகி ஒளிரச் செய்தேன்
பொங்குமன்பில் மாமியாரை மாம னாரைப்
பொறுப்பாகக் கவனித்துப் பேணி வந்தேன்!
என்னுடைய தம்பியாக உங்கள் தம்பி
என்னுடைய தங்கையாக உங்கள் தங்கை
நன்றாக அவர்மனந்தான் கோணா வாறு
நல்லதையும் கெட்டதையும் பார்த்து வந்தேன்!
பின்படுத்து முன்னெழுந்து வீட்டு வேலை
பிறர்க்கென்ன பிடிக்குமென்று சமையல் செய்து
ஒன்றாக குடும்பமெல்லாம் சேர்ந்து வாழ
ஒற்றுமைதான் குலையாமல் காத்து வந்தேன்!
தங்கமென இருகுழந்தை பெற்றுத் தந்து
தாயாகத் தாரமாகக் குறைவைக் காமல்
உங்களுடன் இசைவாக உள்ள போதே
உண்மையினை மறைத்தீர்கள் கரவு நெஞ்சால்!
குங்குமத்தை என்நுதலில் வைத்த கையால்
குலமழிக்க அணைத்தீர்கள் மற்றோர் பெண்ணை
அங்கையாய் நம்பிக்கை துரோகம் செய்த
அகமிலோனே நீஉயிரோ டிருத்தல் தீதே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.