உழைப்போம்! உயர்வோம்!!

நமக்குள்ளே பெரும்சக்தி அடங்கி யுள்ள
நற்செய்தி அறிந்தீரோ! மூடி யுள்ள
உமிதன்னை நீக்குவதா லன்றோ நம்மால்
உள்ளிருக்கும் அரிசிதனைப் பார்க்க ஏலும்
நமக்குள்ளே பெரும்எழுச்சி முடங்கி யுள்ள
தன்மையினை அறியாமல் உறங்கு கின்றோம்
நமதுள்ள உணர்வுகளில் முயற்சி என்னும்
நற்சாவி கொடுத்தால்தான் உண்மை தோன்றும்!
சோம்பலிலே சுகம்காணும் எண்ணம் கொண்டே
சோம்பிநிதம் வாழ்வினிலே சூம்பு கின்றோம்
சாம்பலிலே பாத்திரத்தைத் தேய்த்தால் தானே
பளபளப்பும் தூய்மையுமே கிட்டும்! காலை
ஆம்பலென மனமிருந்தால் புதிய சிந்தை
ஆர்தெழுவே வழியுண்டோ ! கசப்பைக் கூட்டும்
வேம்பன்றோ நோய்தீர்க்கும்! உழைப்பே நம்மின்
வேதனைகள் தீர்க்கின்ற நல்ம ருந்து !
தோளிரண்டும் வலிமைதாங்கும் வன்மை பெற்று
வளர்ந்துளதை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை
தாளிரண்டும் புதியபாதை துணிந்து செல்லத்
துடிப்பதனை நாம்நினைத்துப் பார்ப்ப தில்லை
வாயினிக்கப் பேசிநிதம் பொழுது போக்கும்
வாய்ப்பினிலே நாம்வாழ்வை ஓட்டு கின்றோம்
மாயிருளைப் போக்கிஒளி பாய்ச்சு கின்ற
வகைதெரிந்த கரங்களுக்குப் பணிகொ டுப்போம் !
ஏய்த்துதினம் வாழ்ந்திடலாம் எனநி னைக்கும்
எத்தர்கள் இந்நாட்டு வளர்ச்சி தன்னை
மாய்க்கின்ற பெருநோயர்! பிறரு ழைப்பில்
மலர்பறிக்கும் குறுமதியர்! முன்னேற் றத்தைத்
தேய்க்கின்ற தடைக்கற்கள்! நெஞ்சிற் குள்ளே
தெளிவில்லா திட்டங்கள் தீட்டி நாளும்
தோய்வோரால் நாட்டிற்கு நன்மை என்ன
சோதனைகள் ஏற்பதற்கே துணிவு வேண்டும் !
மந்திரத்தால் மாங்காயைப் பறிப்ப தற்கு
மனக்கணக்குப் போடுவோரே உள்ளத் துள்ளே
தந்திரத்தால் பலன்களினைப் பெறுவ தற்குத்
திட்டங்கள் தீட்டுவோரே மழையைப் போல
சிந்திடுமோ வானிருந்து விளைச்ச லெல்லாம்
சிந்தித்து நாம்பார்க்க வேண்டும்! நாளும்
சிந்துகின்ற வியர்வையிலே உழைத்தால் தானே
சிறப்பான நல்வாழ்வு நமக்குக் கிட்டும் !
சாதிகளும் சாத்திரமும் சமய மென்னும்
சடங்குகளும் நமக்குள்ளே வேண்டாம்! நம்மை
பாதிக்கும் ஏற்றத்தாழ்வு பிரிவும் வேண்டும்
பாசமுள்ள சோதரராய் நாமி ணைந்து
சாதிக்கும் செயலொன்றே நம்மை ஏற்றும்
சலியாத உழைப்பாலே இந்த நாட்டை
மேதினியில் உயர்த்திடவும் வாழ்வில் இன்ப
மேன்மையினைப் பெற்றிடவும் ஒன்றாய்ச் சேர்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.