இனி வரும் தலைமுறை... வாழ...

நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...
ஆய்வு சொல்லுதுப்பா
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டு போகும்.
ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.
அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.
புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.
தீவனமில்லா ஏழைக் கால்நடைகள்
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி...
தினம் தின்று மடிகின்றன
நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.
கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி
சுகாதாரக் கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே சகுனி.
பாலிதீன் பைகள்
பாவை நம் மண்ணோடு
பலவந்தமாகப்
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதைத்
தடுக்க வேண்டாமா ?
மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?
பொய்யும் புரட்டும் பேசும்
போலி உதட்டுக்கு
எதற்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி
தவிக்கும் நமக்கு
எதற்கப்பா பிளாஸ்டிக்?
பெண் சிசுக் கொலையைப் போல
மன்னிக்க இயலாப்
பெரிய குற்றம்
மண்சிசு கொலை.
ஊருக்கு விழிப்புணர்வு
ஊட்ட
ஊர் ஊராக
ஊர்வலம் வேண்டாம்
போலியாகப்
பேரணி வேண்டாம்.
நானிலம் நலம் பெற
நடைமுறை வாழ்வில்
நானினி நெகிழியைப்
பயன்படுத்த மாட்டேன்
டீக்கடையில் தந்தாலும்
நெகிழிக் குவளையில்
இனிக்கும் தேநீர்
இனியும் அருந்த மாட்டேன்.
இப்படி ஒவ்வொருவரும்
உறுதி கொள்வோம் - இதைத்
தனிமனிதக் கொள்கையில்
இணைத்துக் கொள்வோம்.
முற்றிலுமாகப் பிளாஸ்டிக்கை
முடக்கப் பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.
பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல...
தவிர்த்திடுங்கள் வியாபாரிகளே
இனி வரும் தலைமுறைகள்
உயிர் வாழ...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.