பொங்குக பொங்கல் பொலிந்து
மதங்கள் அனைத்தும் மனிதநேயம் கூற
இதயம்பிரிதல் இனிதோ - விதையெனப்
பொங்கிடும் அன்பினைப் போட்டொருமைப் பாட்டினில்
பொங்குக பொங்கல் பொலிந்து !
பெண்ணை விலைபேசும் பேடித்தனமழிந்து
கண்மணியாய்க் காக்கக்கரம்பிடிக்கும் - அன்பனால்
மங்கலநாண் பூத்து மணநாள் மணக்குமெனப்
பொங்குக பொங்கல் பொலிந்து !
ஊழல்பெருக்கால் உதவிடும் திட்டமெல்லாம்
ஆழப்புதையும் அவலம் போய் - வாழவைக்கச்
செங்கதிராய் நேர்மைதனில் செய்வர் ஆள்வோரெனப்
பொங்குக பொங்கல் பொலிந்து !
பண்பழிக்கும் கையூட்டால் பாழாகும் நாடுதனில்
கண்ணியம் காணும் கடமையெனக் - கண்திறந்து
செங்கரும்பின் சாறாய்ச் செயல்செய்யும் மாற்றத்தில்
பொங்குக பொங்கல் பொலிந்து !
தொண்டுள்ளம் ஓடிவந்தே துன்பத்தைப் போக்கும்நல்
எண்ணம் அரவணைத்தே ஏற்றுமன்பு - மண்டுவதால்
பொங்கும் பொதுநலமே போம்தன் நலமென்று
பொங்குக பொங்கல் பொலிந்து !
செங்கதிர் வான்மழையால் செந்நெல்மணி குவிய
மங்கலம் இல்லில் மணம்பரப்பக் - கங்குலெனத்
தங்கிருந்த நல்குரவுதான் மாய இன்பத்தில்
பொங்குக பொங்கல் பொலிந்து !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.