சிதைந்த ஓடை
சலசலென ஓடிவந்த ஓடை
சங்கீதம் பாடிவந்த ஓடை
கலகலென சிரித்துவந்த ஓடை
கால்பதிய ஆடிவந்த ஓடை
நிலத்தாயின் பாலாக ஊறி
நிறைசுவையைத் தேக்கிநின்ற ஓடை
நலமிழந்தே ஏடுகளில் மட்டும்
நாம்படிக்கும் அவலமான தின்று !
சிற்றூரின் அழகென்றே நின்று
சிலிர்ப்பூட்டி மிளிர்ந்ததந்தக் காலம்
வற்றிப்போய் தடம்மட்டும் காட்டி
வரைகோடாய் ஆனதின்று கோலம்
நற்றாயின் அன்பூற்றாய்க் குன்றில்
நறுந்தேனாய் ஊறிவந்த தன்று
வெற்றுத்தாள் போல்காய்ந்து குன்றும்
வெறுமையாகிப் போனதுவே இன்று!
வெடிவைத்து மலைபிளந்த தாலே
விலையாகிக் கல்மறைந்த போக
அடிவைத்து நடந்துவந்த கால்கள்
அறுந்துவிழ முடமான தின்று
கொடிபோன்று வளைந்துதங்கக் கீற்றாய்க்
கொட்டிவந்த எழில்கனவாய் மாற
முடியிழந்த தலைவழுக்கை போன்று
முகமிழந்து மலைகுலைந்த தின்று!
சிற்றோடை கழிவோடை யாக
சிறுமீன்கள் புழுபூச்சி யாக
பெற்றவளே பெண்சிசுவைக் கொல்லும்
பெருங்கொடுமைப் போல்மாசு செய்தோம்
முற்றாக நம்வாழ்வை நாமே
முடிப்பதற்கு வழிவெட்டிக் கொண்டோம்
சற்றிதனை நாமெண்ணிப் பார்த்தே
சரிசெய்ய வில்லையெனில் வீழ்வோம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.