உள்ளங்கையில் உலகம்
இணையத்தில் உலகத்தை இழுத்து வந்தே
இல்லத்தில் அமர்ந்தபடி காணு கின்றோம்
புனைகதையில் படித்துநாமும் வியந்து நின்ற
பிறக்கோளில் கால்பதித்தே ஆயு கின்றோம்!
முனைப்பாகச் செயற்கைக்கோள் பறக்க விட்டே
மூடியுள்ள புவிவளங்கள் அறியு கின்றோம்
துணையாக அறிவியலைச் சேர்த்துக் கொண்டு
துலங்காதப் புதிர்களினை விடுவிக் கின்றோம்!
கல்விதனைத் தொழிர்நுட்பக் கணினி மூலம்
கற்கின்ற முன்னேற்றம் நாமும் பெற்றோம்
பல்துறையின் அறிவுபெற்றே தொழிலின் கூடம்
பார்க்கின்ற இடமெங்கும் இயங்க வைத்தோம்!
வெல்லுகின்ற மின்னியலின் சாத னங்கள்
வீட்டிற்குள் குடிசைத்தொ ழில்போல் செய்தோம்
பல்விதமாய் உற்பத்தி செய்தே ஊரின்
பாதையோரம் விற்பனைக்குக் குவித்து வைத்தோம்!
நீர்தடுத்தே அணைகட்டிப் பசுமை செய்தோம்
நீரணுவில் மின்சாரம் பிரித்தெ டுத்தோம்
பார்வியக்க மூலிகையில் எரிநெய் காய்ச்சிப்
பதைபதைக்கும் எய்ட்சுக்கும் மருந்தைக் கண்டோம்!
ஊர்தோறும் புதுமைகளைத் தொடங்கி வைத்தே
உள்கையில் உலகத்தை வைத்த நாமோ
போர்க்களமாய்ச் சாதிமதப் பகையால் வெட்டிப்
பெருக்குகின்ற குருதியிலே சாயு கின்றோம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.