முத்தமிழை வீழ்த்தும் மும்மொழிக் கொள்கை
சிந்தனைக்குத் தாய்மொழி தாம் ஏற்றதென்று
சிந்தித்தே தமிழ் மொழிக்கு முதன்மைஈய
இந்தியினை விரட்டுதற்குக் கல்வி தன்னில்
இருமொழியின் கொள்கையினைக் கொண்டு வந்தார் !
வந்தயிந்த கொள்கையினால் இந்தி ஓட
வகையாக அவ்விடத்தில் இங்கிலாந்தார்
முந்தியாண்ட அடிமையாலே ஆங்கிலத்தை
முதன்மைமொழி என்றேத்தி அமர வைத்தார் !
சந்ததியர் அம்மாவைப் பிணமாய் யாக்கிச்
சவக்குழியை வெட்டிட்டார் தமிழன்னைக்கு
சிந்திக்கும் திறனுமின்றி அறிவுமின்றிச்
சிறந்த தமிழ்ப் பண்பாட்டைத் தொலைத்துவிட்டார் !
சொந்தமான உடையகற்றிக் கழுத்திறுக்கும்
சொக்காய்க்குக் கயிறுகட்டி மாட்டிக் கொண்டார்
வந்திட்ட மழை தன்னைப் போபோவென்றே
வளமான வாழ்க்கையினைத் துரத்தி விட்டார் !
ஒரு மொழியாய்த் தமிழ் படித்த நிலையைமாற்ற
ஓதுகின்றார் மும்மொழியைத் தில்லியுள்ளோர்
இருமொழிகள் உள்ள போதே தமிழில் கல்வி
இல்லையென்னும் நிலைமை தானே தமிழகத்தில்
இருமொழிகள் மும்மொழியாய் ஆகிவிட்டால்
இந்தியாவின் மொழியென்றே இந்தி ஓங்கும்
பெருமுலக மொழியென்றே ஆங்கிலந்தான்
பெயர் சொல்லும்! தமிழ்மொழியோ முடங்கிப் போகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.