என் பிரார்த்தனையும் வேண்டுகோளும்...
என்னுடன் பூப்பறிக்கிறது
பிஞ்சு விரல் கரமொன்று
எவ்வளவு
நேர்த்தியுடன் பூப்பறித்தும்
அந்தப் பிஞ்சு விரல்களின்
மென்மைக்கு இணையாய்
பூப்பறிக்க இயலவில்லை.
தென்றலாய்
தவழ்ந்து வந்த மற்றொரு
பட்டாம்பூச்சி கரமொன்று
இன்னும் மென்மையாய்
பூக்களைப் பறிக்கிறது.
என் கரங்களும்
பிஞ்சு விரல்களை
கொண்டிருந்த காலங்களில்
மென்மையாகத்தான்
பூக்களைப் பறித்திருக்கும்.
இந்தப் பரபரப்பும்
அவசரமும்
என் விரல்களில்
வலிய புகுந்ததுபோல்
இனிவரும் காலம்...
எந்த விரல்களிலும்
புகுந்திடக்கூடாதென்பதே
என் பிரார்த்தனையும்
வேண்டுகோளும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.