வீணை மத்தளமாகிறது

கண்ணிற்குள் வளர்ந்த மகள் இமைபட்டாலே
கலங்கிடுவாள் எனப்பூவாய் வளர்ந்த பெண்ணாள்
மண்ணிற்குள் விழுந்த விதை மெல்லமெல்ல
மண்பிளந்து வளர்வதினைப் பேணல்போல
பண்ணிற்குச் சேர்க்கின்ற சுருதிபோல
பக்குவமாய் நாள்பார்த்து வளர்ந்த பூவாள்
தண்ணீர்க்குள் வலையவரும் மீனாய் வீட்டில்
தவழ்ந்துவரும் தென்றலென வளர்ந்த கண்ணாள் !
நெஞ்சோடு அணைத்தபடி இறக்கைக்குள்ளே
நெகிழ்வோடு கோழி காக்கும் குஞ்சுபோல
கிஞ்சித்தும் தூசிவந்து படியாவாறு
குளிர்பதன அறைக்குள்ளே பேணுகின்ற
விஞ்ஞான அற்புதமாம் கணினிபோல
வீட்டிற்கு வாய்த்த நல்லவிளக்காய் வண்ண
மஞ்ஞையெனும் அழகுப் பெட்டகமாய் அன்பு
மலர்களிடை மணமாக வளர்ந்த பெண்ணாள் !
வருங்காலக் கனவுகளோ கோடியாக
வளர்த்துவைத்த நெஞ்சினளாய் வாழ்வை யெண்ணிப்
பருவத்தில் நிற்குமவள் கருத்திற்கேற்ப
பல்வேறு இடங்களிலே பார்த்துப் பார்த்துப்
பொருந்துகின்ற குணம்பார்த்தும் குடும்பம் பார்த்தும்
பொருளோடு தகுதிதனை ஆய்ந்து பார்த்துத்
திருமணத்தை இருமனங்கள் கலப்பதற்குத்
திருவாக நடத்திவைத்து மகிழ்ந்தார் பெற்றோர் !
புதுமணத்தின் நுகர்ச்சியிலே பொழுதும் நன்றாய்
புத்தின்பத் தேடலிலே கழிந்து செல்ல
மதுமயக்கம் தெளிதல் போல் மோகவாசை
மங்கிவர மணவாளன் குணமும் மாறப்
புதுமனைவி எனத்தலையில் தூக்கி வைத்துப்
புகழ்மொழிகள் பொழிந்த நாவில்தேள் கொடுக்காய்
எதுசெயினும் குற்றமெனக் கொட்டலானான்
எல்லாமும் தாய்க்கயிற்றால் ஆடலானான் !
அன்பினிலே வளர்ந்தமகள் துன்பப்பட்டால்
அதைப் பார்க்கமுடியாமல் கேட்டதெல்லாம்
முன்வந்து தந்திடுவார் என்ற நோக்கில்
முள்ளாகச் சொற்களிலே குத்தும் அத்தை
தன்பங்காய் மாமனாரும் சாட்டை வீச்சாய்
தளிர்நெஞ்சைப் புண்ணாக்கி வீசுவார் சொல்லை
புன்னகையை இரவினிலே சிந்திக்காலை
புன்செயலைப் புரிகின்ற கொடுமைக் கணவன் !
கதிர்விழிக்கும் முன்விழித்து வாசல் கூட்டிக்
கலைமிளிரும் கோலமிட்டே அழகு செய்து
முதியவர்க்கோ இனிப்பில்லாப் பாலைத் தந்து
முரண்நெஞ்சக் கணவனுக்கோ இனிப்பைச் சேர்த்தும்
மதிக்காத நாத்திக்கும் மணக்கத் தந்து
மலையளவு பாத்திரங்கள் துலக்கி வைத்தும்
சதிமனத்தார் என்னசொல்வார் என்ற அச்சம்
சதிராடும் முகத்தோடு வலைய வந்தாள் !
உப்பில்லை உணவு வகை ஒருவருக்கு
உரப்பில்லா புளி குறைவு ஒருவருக்கு
உப்போடு சுவையுணவு மற்றோர்க்கென்றே
உணவுதனைப் பலவகையாய் செய்தளித்தும்
தப்புதனைக் கண்டுரைக்கும் குடும்பத்தார்கள்
தான்விரும்பும் ஒருசுவையை ஆக்கியுண்ண
ஒப்புதலும் இல்லாமல் அடிமையாக
ஒப்புக்கே மருமகளாய் பணியாளானாள் !
ஏடுகற்ற கல்விக்குப் பயனுமின்றி
எந்தவொரு நூல் படிக்க நேரமின்றி
வீடுகூட்ட துணிதுவைக்க வீட்டுக்காரர்
வினையாற்றச் செல்வதற்குப் பணிகளாற்றி
மாடுபோல மாமிமாமன் நோய்களுக்கு
மருந்தளித்துத் தாதியெனத் தொண்டு செய்து
வாடுகின்ற கிளியைப் போல் இல்லக் கூண்டுள்
வாயிருந்தும் ஊமையெனக் குமுறலானாள் !
அலங்காரம் செய்து புறம் கணவனோடு
ஆசையுடன் உரையாடிச் செல்வதற்கும்
கலகலெனப் பழகிவந்த தோழிமாரைக்
கண்ணாலே கண்டு நலம் கேட்பதற்கும்
வலம்வந்த பிறந்த வீட்டுச் சுற்றத்தாரின்
வாழ்த்துகளை நன்னாளில் பெறுவதற்கும்
குலமகளாம் பெயர்சூட்டி இயலாவாறு
கூட்டிற்குள் சிறகுவெட்டி முடக்கி வைத்தார் !
கோதையவள் கற்பனையும் கனவுயெல்லாம்
கோட்டைமணல் போலவன்றோ ஆனதின்று
போதையாகும் தட்சணையின் கொடுமையாலே
பொன்வீணை மத்தளமாய் ஆனதன்றோ
காதைகளும் கவிதைகளும் உரிமைபேசிக்
கட்டெல்லாம் உடைந்ததென்று முழங்கினாலும்
பேதையராய்த் துணிவின்றி உள்ள மட்டும்
பெண்ணுரிமை என்பதெல்லாம் வெற்றுப்பேச்சே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.