யுத்தக் கண்கள்
பாசத்தைப் பொழிவதுதான் தாயின் கண்கள்
பாதைமாறிப் பிள்ளைகள்தாம் போன போதும்
நேசத்தைக் காட்டிமனம் திருந்து மாறு
நேயத்தில் வருடுவது தாயின் கண்கள் !
வாசத்தைக் கொண்டுமலர் எதுவாம் என்று
வாடிக்கை யாளர்கள் அறிதல் போன்று
வேசத்தால் மறைத்தபோதும் பிள்ளை கண்ணில்
வேதனையைக் கண்டறியும் தாயின் கண்கள் !
அன்புதனைக் காட்டியுச்சி மோந்த போதும்
அறம்பிறழ்ந்து பிள்ளைகள்தாம் செல்லும் போது
வன்புலியின் சீற்றத்தைப் பார்வை யேற்றி
வதைத்தறிவு புகட்டுவது தந்தை கண்கள் !
முன்பின்னே பிறந்திட்ட அக்கா தங்கை
மூத்தவனோ இளையவனோ உடன்பி றந்தோர்
நன்றாகத் தம்பிவாழ்ந்தால் காழ்ப்பைக் காட்டி
நனிபகையாய் நஞ்சுகொட்டும் அவர்கள் கண்கள் !
துன்பத்தைத் தூளாக்கிக் காமம் தன்னில்
துவளவைக்கும் மனைவியவள் காதல் கண்கள்
இன்பத்தை அள்ளியள்ளி எடுத்த ளிக்கும்
இனிமையான சிரிப்புதனில் குழந்தைக் கண்கள் !
இன்றைக்கும் தமிழினத்தின் வேரைத் தேடி
இல்லாமல் ஆக்குதற்கே இலங்கை மண்ணில்
வன்மத்தை விதைத்துவிட்ட இராச பக்சே
வன்நெஞ்சன் கண்கள்தாம் யுத்தக் கண்கள் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.