கீழிறங்க மறுக்கிறாய் நீ....!
ஒரு குரல்
என் செவிகளில் சன்னமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உன் பின்னால்
காரணமின்றி திரிவதை
ஏனோ நிறுத்த முடியவில்லை
என்னால்.
இதோ இந்தப் பெருமழை
சிறிது
நேரப் பொழிவிற்குப்பின்
நின்று விடலாமென
நினைக்கிறேன்.
அந்தக் குரல்
என் செவிகளில் சற்று
பலமாய் ஒலிக்கிறது.
பின் தொடர்ந்தவன்
மிக அருகில்
நெருங்கி விட்டதாய்
நினைக்கிறேன்.
பெருமழையும்
நான் நினைத்தது போலவே
முற்றிலுமாய்
நின்றுபோன தருணத்தில்...
சருகுகளில்
சலசலத்தோடும் அரவமாய்
நெருக்கமாகவும்
தெள்ளத் தெளிவாகவும்
என் செவிகளில்
ஊடுருவுகிறது அந்தக் குரல்.
என் புஜங்களில்
சிம்மாசனமிட்டிருக்கும்
மழலையாய் என்னிதய
சிருஷ்டிக் கூட்டிலிருந்து
கீழிறங்க மறுக்கிறாய் நீ....!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.