பொங்குமின்பத் தைத்திங்கள் போற்று
சாதிமத எண்ணத்தை
சாய்க்கின்ற காழ்ப்புதனை
வீதிகளில் வளர்க்காமல்
விட்டெரிப்போம் போகியிலே !
வஞ்சகத்தைப் பகைமையினை
வழித்தெறிந்து மங்கலமாம்
மஞ்சளெனும் மனிதநேயம்
மனங்களிலே ஒளிரவைப்போம் !
அன்பென்னும் தோரணத்தால்
அகமெல்லாம் அழகு செய்து
முன்நின்று அனைவரையும்
முகம்மலர்ந்து வரவேற்போம் !
கரும்பாகக் கலந்து பேசி
காளைபசுவைத் தொழுது போற்றி
அருஞ்சுற்றம் மகிழ்ந்து கூடி
அணைத்து பொங்கல் பொங்கிடுவோம் !
தமிழரெல்லாம் ஒன்றென்று
தரணியெல்லாம் மதித்திடவே
அமிழ்தமெனத்தைப் பொங்கல்
ஆடிப்பாடிப் போற்றுவமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.