ஒத்தூதி வாழ்வதெல்லாம் வாழ்வா?
தன்வாழ்வு சிறப்பதற்குப் பிறரின் முன்பு
தலையாட்டும் பொம்மைகளாய் ஆடு வார்கள்
புன்செயல்கள் ஊரறிய செய்த போதும்
புகழ்ந்தவரின் கால்களினை நக்கு வார்கள் !
வன்முறையில் அடுத்தவரை வதைத்த போதும்
வாய்மூடி நாய்வாலாய் ஆட்டு வார்கள்
என்னவெல்லாம் இழிவாகப் பேசி னாலும்
ஏற்றவர்க்குப் பல்தன்னைக் காட்டு வார்கள் !
காக்கைதான் பிடிப்பதாக ஏள னத்தில்
காதுபடச் சொன்னாலும் நாணம் கொள்ளார்
யாக்கையது இருப்பதெல்லாம் குறுகிக் கூனி
யாசிக்க எனத்தாழ்ந்தே வணங்கு வார்கள் !
வாக்குதனில் இந்திரன்சந் திரனாம் என்றே
வகைவகையாய்ப் பூமாலை சூட்டு வார்கள்
நோக்கமெல்லாம் உழைக்காமல் பிறரு ழைப்பில்
நோகாமல் உண்பதென்னும் கொள்கை கொண்டோர் !
ஓங்குபொருள் இன்பவாழ்வு கிடைக்கு மென்றே
ஒத்தூதி வாழ்வதெல்லாம் வாழ்வா சொல்வீர் !
ஏங்கியேங்கிப் பிறருடையப் பொருளுக் காக
ஏமாற்றி வாழ்வதெல்லாம் வாழ்வா சொல்வீர் !
நீங்காத பழிவந்து சேரு மன்றி
நிறைவாழ்வோ மனமகிழ்வோ கிடைத்தி டாது
பாங்காக வாழ்வதெனில் தன்னு ழைப்பில்
பணியாமல் மானமுடன் வாழ்வ தாகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.