ஆசை... ஆசை... ஆசை...!

என் தோழனாக வந்த
என் கணவனே...!
நெஞ்சுக்குள் சின்னச்சின்னதாய்
ஆசைகள் உண்டு
இது கவிதை அல்ல...!
நான் கனவுகளால் கோர்த்த மாலை
என் ஆசைகள் எல்லாம்
என்ன தெரியுமா?
கொட்டும் மழையில் ஒரே குடையில்
உன் தோளுரசி நடக்க ஆசை!
உன் சுட்டு விரல் பிடித்து
உன் பாதம் தொடர ஆசை!
உன் கால் நகம் வெட்டிவிட,
உன் கையில் மருதாணி வைத்திட ஆசை!
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி
அதை நீ படிக்க நான் கேட்க ஆசை!
ஒரே போர்வைக்குள்
நீயும் நானும் உறங்கிட ஆசை!
நாள்தோறும் உன் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்க ஆசை!
கால தாமதமாய் வரும் நீ
என் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை!
நீ சொல்லும் சின்னசின்னப் பொய்கள்
எப்பாதும் கேட்க ஆசை!
நமக்குள் சின்ன சின்னதாய்
சண்டைகள் வர ஆசை!
அந்தச் சண்டைக்கு பின்
சமாதானம் கொள்ள ஆசை!
உன்விரல் தொடும் மல்லிகைப் பூ
தலை நிறைய வைக்க ஆசை!
உன்விழி சொல்லும் கவிதை
வாசித்து பார்க்க ஆசை!
நீள்கின்ற தார் சாலையில் - உன்னோடு
மிதிவண்டிப் பயணம் போக ஆசை!
நீ குடித்தப் பாதித் தேனீர்
ருசி பார்க்க ஆசை!
பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில்
உன்னோடு நிலாச் சோறு உண்ண ஆசை!
சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் மடியினில் துயில ஆசை!
வாழ்கின்ற காலம் எல்லாம்
உன்னோடு வாழ ஆசை!
சாகிற போது மட்டும்...
நான் மட்டும்... சாக ஆசை!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.