பிணமானது தெரியாமலே...!
பூமிக்குள்
மூடி வைத்திருக்கிறார்கள்.
துளி காற்று கூட
உட்புகாமல் குமுறுகிறது
என் தேகம்.
யாராவது தெரிகிறார்களா?
பார்க்கிறேன்.
என்னைச் சுற்றிலும்
இருண்டிருக்கிறது.
என் பார்வைக்கு
ஒருவரும் தென்படவில்லை.
என் முகப்பகுதியில்
சில்லென்று பரவும்
திரவத்தில்
பால்வாடை வருகிறது.
தற்போது
என் திணறலுக்கது
போதுமானதாய் இருக்கிறது.
பதினொன்றாம் நாளோ
பதின்மூன்றாம் நாளோ
இது போல்
மீண்டும் எனக்கு
கிடைக்கப் பெறலாம்.
அவர்கள்
பேசிக் கொண்டிருப்பது
என் செவிகளில்
சன்னமாய் ஒலிக்கிறது.
எழாதபடி
குழியில் புதைத்து
என் மேல் மண்ணை
குவித்திருக்கிறார்கள்.
பிணமானது தெரியாமலே
மண்ணுக்குள்
படுத்திருக்கிறேன் நானும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.