வேட்பாளர்
கூட்டமாய் வந்த
ஆளும் கட்சிக்காரர்
காஷ்மீர் சால்வையை
என் தோளில் போட்டு விட்டு
ஓட்டு கேட்கிறார்...
பரிவாரப் படைகளோடு வந்த
எதிர் கட்சிக்காரர்
பளபளக்கும் சரிகைத்துண்டினை
என் கழுத்தில்
மாலையாய் அணிவித்து
ஓட்டு கேட்கிறார்...
மிடுக்கோடு வந்த
மற்றொரு கட்சிக்காரர்
கட்சிக் கரைத் துண்டினை
என் தோளில் கம்பீரமாய்
போர்த்தி முடித்து
ஓட்டு கேட்கிறார்...
பவ்யமாய் வந்த இன்னொரு
கட்சிக்காரர்
காலில் விழுந்து கெஞ்சி
ஓட்டு கேட்கிறார்...
சொற்ப மனிதர்களோடு வந்த
சுயேட்சை வேட்பாளர்
கரம் பிடித்துக் குலுக்கி
வாய்ப்பு வழங்கும்படி
ஓட்டு கேட்கிறார்...
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.