இனிக்கும் நினைவுகள்
இனிப்பின் சுவை
இதுதான்… சின்ன வயதில்…
எங்கள் நினைவில்…
சவர்க்கார முட்டையூதி
சுவரில் வைத்து உடைத்தோம்…
பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில்
நாமும் கற்பனையில் பறந்தோம்…
நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம்
மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம்
வாழை நாரில் பூக்கள் தொடுத்து
வீணை செய்து கீதம் இசைத்து
கூட்டாய் விளையாடினோம்..
முற்றத்து மணலில் வீடு கட்டி
உள்ளே சென்றோம் உடைந்ததுவே
வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு
நாமும் சென்றோம் கற்பனையிலே…
என்ன சொல்ல, என்ன சொல்ல
எல்லாம் இன்று ஞாபகமே
இனிப்பின் சுவையும், இன்ப நினைவும்
இதுதான் வேறு இல்லையே.!
களிமண் உருட்டி
சட்டி, பானை செய்தோம்
வேப்ப மர நிழலிலே
அடுப்பு மூட்டி விளையாடினோம்
இன்னும் சொல்ல, இன்னும் சொல்ல
நேரம் இங்கு போதவில்லை
அன்று கொண்ட ஆனந்தமே
உண்மை, உண்மை வேறு இல்லை!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.